கொரோனா வைரஸுக்கு எதிராக மருத்துவர்களும், சுகாதாரப்பணியாளர்களும் உலகம் முழுவதும் கடுமையாக உழைத்துவருகின்றனர். கொரோனாவுக்கு எதிரான போரில் சுகாதார மருத்துவர்கள், செவிலியர்களின் பங்கு அளப்பரியது. சீனாவில் கொரோனா தீவிர கட்டத்தை எட்டியபோது, இரவு பகல் பாராமல் மருத்துவர்களும் செவிலியர்களும் உழைத்தனர். தங்களைத் தற்காத்துக்கொள்வதற்காக, அவர்கள் அணிந்திருக்கும் மாஸ்க்குகள் முகத்தில் வடுக்களை ஏற்படுத்தியபோதிலும் மக்களுக்கான பணியில் ஒருபோதும் பின்வாங்காமல் தொடர்ந்து ஈடுபட்டுவருகின்றனர்.
உலகம் முழுவதும் கொரோனா அச்சம் நிலவுகிறது. பல்வேறு நாடுகளில் கொரோனாவுக்கு எதிரான போரில் மருத்துவர்களும் செவிலியர்களும் முன்னின்று போராடிவருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு பிபிசி-க்கு பேட்டியளித்த மருத்துவர் ஒருவர், கொரோனா வார்டு குறித்த சில தகவல்களைக் கூறியிருந்தார்.
”கொரோனா வார்டுக்குள் செல்லும்போது, பிரத்யேகமான உடைகள் மற்றும் முகக்கவசங்களை அணிந்து செல்ல வேண்டும். எங்களுக்குத் தேவையான உணவுப் பொருள்கள் உள்ளிட்டவற்றை கையோடு எடுத்துச்செல்ல வேண்டும். நாங்கள் பரவாயில்லை, நோயாளிகளைப் பார்த்து, அவர்களுக்குத் தேவையான மருத்துகளைப் பரிந்துரைவிட்டு திரும்பிவிடுவோம். ஆனால், செவிலியர்கள்தான் பணிநேரம் முழுவதும் அவர்களுடன் செலவிட வேண்டும். அவர்களுக்குத் தேவையான அத்தனை உதவிகளையும் செய்ய வேண்டும். மருத்து கொடுப்பது, ஆடைகளை மாற்றிவிடுவது, மலம் இருந்துவிட்டால் அதைத் தூய்மை செய்வது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்கிறார்கள்” என தெரிவித்திருந்தார்.
இத்தகைய தியாகங்களைச் செய்யும் மருத்துவர்கள் , செவிலியர்கள், சுகாதாரப்பணியாளர்களுக்கு ஆதரவளிக்கும் விதமாக ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் தனது தலையை மொட்டையடித்துள்ளார். இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள வார்னர், “ கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் முன்னின்று போராடுபவர்களுக்கு ஆதரவு அளிக்கும் விதமாக மொட்டை அடித்துக்கொண்டுள்ளேன்’எனத் தெரிவித்துள்ளார். ட்ரிம்மரைக் கொண்டு தானே மொட்டையடிக்கும் வீடியோவைப் பதிவிட்டுள்ளார். மேலும் ஸ்டீவ் ஸ்மித், விராட் கோலி ஆகியோரையும் பரிந்துரை செய்துள்ளார்.