கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க கர்நாடகாவில் பணியாற்றி திரும்பியவர்கள் அதிகமாக உள்ள கிராமத்தையே தனிமைப்படுத்தி தருமபுரி சார் ஆட்சியர் உத்தரவிட்டார்.
தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம் வேடகட்டமடுவு என்ற கிராமத்தைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டவர்கள் கர்நாடக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கட்டுமானம் உள்ளிட்ட பணிகளில் கூலித்தொழிலார்களாக பணியாற்றி வந்தனர். கொரானா பாதிப்பு காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அரசு அறிவித்தவுடன் கர்நாடகாவில் இருந்து பலர் வீடுகளுக்கு திரும்பிவிட்டனர். இவர்களை மாவட்ட நிர்வாகம் அவரவர் வீட்டிலேயே தனிமைப்படுத்தி, தொடர் கண்காணிப்பில் வைத்துள்ளது.
இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களில் வேடகட்டமடுவு கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் இருச்கர வாகனம் மற்றும் ஆட்டோக்கள் மூலம் கர்நாடக மாநிலத்திலிருந்த சொந்த ஊருக்கு திரும்பியதாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அரூர் சார் ஆட்சியர் மு.பிரதாப், சட்டமன்ற உறுப்பினர் சம்பத்குமார் உள்ளிட்டோர் அந்த கிராமத்திற்கு விரைந்து ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில் 200க்கும் அதிகமானோர் கர்நாடக மாநிலத்தில் பணியாற்றி விட்டு திரும்பியவர்கள் எனத் தெரியவந்தது. இதையடுத்து அங்குள்ள அனைத்து வீடுகளிலும் தனிமைப்படுத்தி கண்காணிப்பதற்கான ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன.
அத்துடன் வேடகட்டமடுவு கிராமத்தில் யாரும் வெளியில் செல்லக்கூடாது என்றும், வெளியாட்கள் யாரும் அங்கே நுழையக்கூடாது என்றும் சார் ஆட்சியர் பிரதாப் தடை விதித்தார். அத்தியாவசியப் பொருட்களை கிராமத்திற்குள்ளே வழங்கவும், தினமும் நடமாடும் காய்கறி கடை வந்து செல்வதற்கும், மருத்துவக் குழுக்கள் அமைக்கவும் உத்தரவிடப்பட்டது. மேலும், கிராமத்தில் உள்ளவர்கள், வெளியே செல்லாமல் கண்காணிக்க காவல்துறைக்கும் ஆணையிடப்பட்டது. வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியில் நடமாடினால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.