கொரோனா அபாயத்தில் உலகமே பதற்றத்தில் இருக்கும் சூழலில் நம் நாட்டிலும் வேகமாகப் பரவி வருகிறது. ஊரடங்கு உத்தரவால் பொதுமக்கள் வேலைக்குச் செல்லாமல் உணவிற்குத் தவித்து வருகின்றனர். அடுத்தடுத்து என்ன நடக்கும் என்று மக்கள் யோசித்து பீதியில் உறைந்துள்ளனர். கொரோனவைவிட பசியின் கொடுமை பல இடங்களில் தாண்டவமாடுகிறது.

சுந்தர்ராஜன்

சமூக ஆர்வலர்கள் ஆங்காங்கே உதவிகள் செய்துவருகின்றனர். இந்நிலையில், சென்னையில் வசித்துவரும் சுந்தர்ராஜன், சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 3 கிராமங்களில் உள்ள 1,000 குடும்பத்தினருக்கு தலா 10 கிலோ அரிசை வழங்கி இந்தக் கொடிய காலத்தில் தேவை உணர்ந்து உதவி செய்துள்ளார். இதனால் உதவி பெற்ற பலரும் அவருக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.

உதவி செய்துவரும் சுந்தர்ராஜனை தொடர்புகொண்டு பேசினோம், “எனக்கு சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம் பச்சேரி கிராமம். நான் சென்னையில் தொழில் செய்து வருகிறேன். சென்னையில் வசித்தாலும் கிராமத்தோடு தொடர்பில் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவேன். இதனால் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மேலவளஞ்சி, உச்சிபுலி உள்ளிட்ட தண்ணீர் தட்டுப்பாடு அதிகம் உள்ள கிராமங்களுக்கு என்னுடை சொந்த செலவில் ஆழ்துளை போர்வெல் அமைத்து தண்ணீர் தட்டுப்பாடுகளைக் குறைத்துள்ளேன்.

கிராமங்களுக்கு ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணியில்

இதைப்போல் அன்னதான நிகழ்ச்சி, அரசுப் பள்ளி மேம்பாடு உள்ளிட்ட முக்கிய தேவைகளுக்கு என்னால் முடிந்ததை உதவி வருகிறேன். இதனால் என் மனதிற்கு நல்ல நம்பிக்கை தோன்றும். இந்நிலையில் கொரோனாவின் பிடியில் இருந்து பொதுமக்கள் சிரமப்படுவதைப் பார்க்க முடிந்தது. எல்லா இடங்களிலும் செய்ய முடியவில்லை என்றாலும் சொந்தக் கிராமத்துக்கும் அதைச் சுற்றியுள்ள ஊர்களுக்கும் செய்ய முடியும் என்று தோன்றியது.

இதனால் சிவகங்கை பச்சேரி, மீனாட்சிபுரம், காந்திபுரம் என 3 கிராமங்களில் உள்ள 1,000 குடும்பத்தினருக்கு தலா 10 கிலோ அரசி பைகளை வாங்கி வழங்கினேன். கிராமத்துக்கு உதவிகள் சென்றால் போதும் எனத் திட்டங்களை சென்னையில் இருந்தே செயல்படுத்தினேன். இதனால் சமூக அக்கறையுடன் பணியாற்றும் நபர்களைத் தேர்வு செய்து கூட்டம் ஏற்படாதவாறு. ஒவ்வொரு குடும்பத்துக்கும் அவர்களின் வீடுகளுக்கே சென்று அரிசிகளை வழங்கியுள்ளேன். என்னால் முடிந்தவரை எல்லாவற்றையும் செய்வேன். உலகில் உள்ள அனைவரும் கொரோனா பாதிப்பில் இருந்து மீள வேண்டும் என்பதை வேண்டிக்கொள்கிறேன்” என்றார்.

கிராமத்தில் உள்ளூர் வாசிகள் களப்பணி

கொரோனா பாதிப்பிற்கு தனித்தனி 10 கிலோ அரிசி மூட்டையை ஆட்டோ மூலம் அரசின் விதிமுறைகளைப் பின்பற்றி கூட்டம் சேர்க்காமலும் வீடுகளுக்குச் சென்று குடும்ப உறுப்பினர்களிடம் தள்ளி நின்று உள்ளூர் சமூக ஆர்வலர்கள் உதவியால் வழங்கினார். அதைப் பெற்றுக்கொண்ட கிராமத்தினர் அவருக்கு நன்றி தெரிவித்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.