ஊரடங்கு உத்தரவு காரணமாக கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் வெளிமாநிலங்களுக்கு வேலைக்காகச் சென்றவர்கள் அங்கங்கே சிக்கியுள்ளனர். விழுப்புரம் மாவட்டம் கண்டம்பாக்கத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட கூலித்தொழிலாளர்கள் கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள சிறுவத்தூர் கிராமத்தில் கூலி வேலை செய்து வந்துள்ளனர்இந்நிலையில் ஊரடங்கு உத்தரவு காரணமாக உணவு கிடைக்காமல் தவித்து வருவதாகவும் கேரள அரசு தங்களுக்கு வசதிகளை செய்துகொடுக்கவில்லை எனவும் அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். எனவே தங்களை சொந்த ஊருக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று அவர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
மகாராஷ்டிராவில் உணவு இன்றி தவித்து வரும் 600 தமிழக தொழிலாளர்களை மீட்க வேண்டும் என அவர்களின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 23 பேர், விருதுநகர் மாவட்டத்தில் இருந்து 43 க்கும் மேற்பட்டோர் என தமிழகம் முழுவதும் இருந்து 600 பேர் அங்கு சிக்கியுள்ளதாகவும், அவர்களை மீட்கவேண்டும் என உறவினர்கள் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் வெளிமாநிலங்களில் சிக்கியிருந்தால், அது குறித்து தகவல் அளித்தால் அவர்களை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாவட்ட ஆட்சியர் மெகராஜ் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரிலிருந்து காசிக்கு யாத்திரை சென்ற 15 பேர் சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். உணவு, உடை, இருப்பிடம் இல்லாமல் தவித்து வருவதாகவும், தமிழக அரசு தங்களை விரைந்து மீட்க வேண்டும் எனவும் அவர்கள் வீடியோ வெளியிட்டு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரை அண்ணாநகரைச் சுற்றியுள்ள வங்கிக் கிளைகள் மூடல்!
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM