இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1029 ஆக அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், 1029 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நோய் பாதிப்பில் இருந்து 85 பேர் குணமடைந்துள்ள நிலையில் தற்போது 920 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 186 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக கேரளாவில் 182 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளாவில் கொரோனாவால் முதல் உயிரிழப்பு நேற்று ஏற்பட்டது. மகாராஷ்டிராவில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் 42 கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது 39 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இருவர் குணமாகியுள்ள நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதற்கிடையில் கொரோனா சிகிச்சை அளிக்க வசதியாக ரயில் பெட்டிகள் சிகிச்சை மையங்களாக மாற்றப்பட உள்ளன. 28 ராணுவ மருத்துவமனைகளும் கொரோனா சிகிச்சை அளிக்க தயார் நிலையில் உள்ளன. கொரோனா சிகிச்சை தரும் மருத்துவர்களுக்கு ஆலோசனை தருவதற்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் 24 மணி நேரமும் செயல்படும் டெலி ஆலோசனை மையம் தொடங்கப்பட்டுள்ளது.
தற்போது நாடெங்கும் 111 இடங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்படுவதாகவும் தனியாரும் இதில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாரத் எலக்ட்ரானிக்ஸ், DRDO ஆகிய நிறுவனங்களை வென்டிலேட்டர், பாதுகாப்பு கவசம் தயாரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.