போர்க்காலச் சூழ்நிலை என்பதால் மாநில அரசுகளுக்கு தேவைப்படும் பணத்தை மத்திய அரசு தாராளமாக தரவேண்டும் என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மனிதர்களை பாதித்துள்ள நிலையில், பொருளாதாரத்தையும் கடுமையாக பாதித்துள்ளது. இந்தியாவிலும் பங்கு சந்தைகள், உள்நாட்டு உற்பத்தி, பொருட்கள் விற்பனை என அனைத்தும் சரிவை சந்தித்துள்ளன. இதற்கிடையே பொருளாதாரம் பாதித்தாலும் பரவாயில்லை மக்கள் நலனே முக்கியம் என 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை பிரதமர் மோடி பிறப்பித்தார்.
3 மாதங்களுக்கு கடனாளர்களின் இ.எம்.ஐ கட்டணங்களை தவிர்க்குமாறு வங்கிகளுக்கு ஆர்.பி.ஐ அனுமதி அளித்துள்ளது. இதற்கிடையே கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு எதிராக மத்திய அரசு, மாநில அரசுகள் சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்து மருத்துவ மற்றும் சுகாதாரப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. அதேசமயம் மத்திய அரசும், மாநில அரசுகளும் நாட்டில் உள்ள அனைவரிடமும் நிவாரணம் அளிக்க கோரியுள்ளது. இதற்கிடையே தமிழகம் உட்பட பல்வேறு மாநில அரசுகள் மத்திய அரசிடம் நிதிகோரி கடிதங்கள் அனுப்பியுள்ளன.
இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ப.சிதம்பரம், “அரசுக்கு அவசரமாகத் தேவைப்பட்டால் பணத்தை “உருவாக்கும்” — அதாவது அச்சடிக்கும் — உரிமை மத்திய அரசுக்கு மட்டுமே உள்ளது. மாநில அரசுகளுக்குக் கிடையாது. இது அவசர, போர்க்காலச் சூழ்நிலை. எனவே மாநில அரசுகளுக்கு அவசரமாகத் தேவைப்படும் பணத்தை மத்திய அரசு தாராளமாகத் தரவேண்டும்” என தெரிவித்துள்ளார்.