கொரோனா இன்று உலகையே அச்சுறுத்தி வருகிறது. தமிழகத்தில் இதுவரை 40 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கொரோனா மேலும் பரவமால் இருக்க தமிழ்நாடு அரசு தீவிர முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது. அவர்களுடன் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் உள்ளிட்டோரும் தங்களது உயிரை பணயம் வைத்து சேவை புரிந்து வருகின்றனர். இவர்களது சேவையை பாராட்டும் வகையில் முதலமைச்சர் அண்மையில் சலுகைகளை வழங்கினார்.
உண்மையில் இந்தச் சலுகைகள் எல்லாம் அவர்களின் தியாகத்திற்கு ஈடு ஆகுமா என்றால் அது இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் உண்மையில் அவர்கள் மட்டும் உயிரை பணயம் வைத்து சேவை செய்யவில்லை, அவர்களின் குடும்பமும் இணைந்து இந்த சேவையை செய்கிறது. ஆனால் அதில் சிலர் தனது உறவினர்களின் மீது கொண்ட பாசத்தால், அவர்களை இந்த சேவையில் ஈடுபடவேண்டாம் எனக் கோரிக்கை வைக்கின்றனர். அப்படி ஒரு சம்பவம் சென்னையில் நிகழ்ந்துள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர் மேட்டு தெருவைச் சேர்ந்த தங்கவேல் என்பவரின் மகன் பாண்டித்துரை. இவர் கடந்த மூன்று வருடங்களாக சென்னை கே.கே.நகர் அசோக் பில்லர் பகுதியில் 108 வாகனம் ஓட்டி வருகிறார். இந்நிலையில், கொரோனா தொற்று பாதிப்புக்குள்ளானவர்களை இவர் ஆம்புலன்ஸ் வாயிலாக அழைத்து வந்ததாக தெரிகிறது.
இதனிடையே, தொலைகாட்சி வாயிலாக கொரோனா பரவும் முறையையும், வேகத்தையும் தெரிந்து கொண்ட இவரின் பெற்றோர்கள், தொலைப்பேசி வாயிலாக பாண்டி துரையை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். பாண்டியின் தாய் பேசும் போது “ பாண்டி இந்த வேலை உனக்கு வேண்டாம். நீ அவர்களை தொட்டுத் தூக்குவாயில்லையா. ஆகவே நீ தயவு செய்து சென்னையில் இருக்கும் உறவினர் வீட்டில் சென்று தங்கி விடு. அப்படி இல்லையென்றால் தயவு செய்து அவர்களிடம் எதுவும் சொல்லாமல் இங்கு வந்து விடு. உனக்கு என்னத் தேவையோ அதை கடன் வாங்கியாவது நான் செய்கிறேன்” என்கிறார்.
அவரது தந்தை பேசும் போது, “பாண்டி உனக்கு என்ன தேவையோ அதை பிச்சை எடுத்தாவது நிறைவேற்றி வைக்கிறேன். உனக்கு இந்த வேலை மட்டும் வேண்டாம்” என்கிறார். இதனைக் கேட்டுவிட்டு பேசிய பாண்டி, “ உங்களை மாதிரி எல்லோரும் அவரது மகன்களை அழைத்து விட்டால், யார் இந்த வேலையை செய்வார்கள் எனக் கேட்கிறார். அதற்கு பதிலளித்த அவரது பெற்றோர்கள் அவர்களை காப்பாற்ற நிறைய பேர் உள்ளனர். ஆனால் எங்களுக்கு நீ ஒருவன் தான் இருக்கிறாய் என்று கதறுகின்றனர். ஆனாலும், துரை அவரை சமாதானம் செய்கிறார். இதனைக் கேட்ட அவரது பெற்றோர்கள் நீ கேட்கமாட்டாய் என்று உருக்கமாக பேசுகின்றனர். இவர்களது இந்த ஆடியோ உரையாடல் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனை கேட்ட அனைவரும் பாண்டியின் தன்னலமற்ற சேவையை நெஞ்சுருக பாராட்டியுள்ளனர்.