தோனி குறித்த பொய்யான செய்தி பரவிய நிலையில் அதற்கு அவரது மனைவி சாக்ஷி கண்டனம் தெரிவித்துள்ளார்
கொரோனாவுக்கு எதிராக இந்தியா போராடி வரும் வேளையில் பலரும் முன்வந்து அரசுக்கு நிதி உதவி அளித்து வருகிறார்கள். விருப்பப்பட்டவர்கள் முடிந்த நிதி உதவியை அளிக்கலாம் என தமிழக அரசும் கேட்டுக்கொண்டுள்ளது. இந்திய அளவில் நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் என பலரும் நிதி உதவியும், பொருள் உதவியும் அளித்து வருகின்றனர்.
இந்தியாவில் கிரிக்கெட் வீரர்களை பொறுத்தவரை சச்சின் டெண்டுல்கர் ரூ.50 லட்சமும், சவுரவ் கங்குலி ரூ.50 லட்சம் மதிப்பிலான அரிசியையும், பதான் சகோதரர்கள் 4000 முகக் கவசங்களையும் அரசுக்கு வழங்கியுள்ளனர். இவர்களைத் தவிர ஓட்டப் பந்தைய வீராங்கனை ஹிமா தாஸ், பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து, டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா ஆகியோரும் கொரோனா பாதிப்பை எதிர்கொள்வதற்கான நிதியை அரசுக்கு வழங்கியுள்ளனர்.
இந்நிலையில், புனேவில் இருக்கும் முகுல் மாதவ் அறக்கட்டளை சார்பில் கொரோனாவை எதிர்க்க மக்கள் மத்தியில் நிதி திரட்டப்பட்டது. இது “கெட்டோ” என்ற இணையதளம் மூலம் மேற்கொள்ளப்பட்டது. இதற்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி ரூ.1 லட்சம் நிதியுதவி அளித்ததாக செய்திகள் பரவின. தோனி ஒருலட்சம் தான் கொடுத்தாரா என பலரும் கிண்டல் செய்தனர்.
I request all media houses to stop carrying out false news at sensitive times like these ! Shame on You ! I wonder where responsible journalism has disappeared !
— Sakshi Singh ??❤️ (@SaakshiSRawat) March 27, 2020
இந்நிலையில், பொய் செய்தி குறித்து தோனியின் மனைவி சாக்ஷி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து ட்வீட் செய்துள்ள அவர், ”இதுபோன்ற முக்கியமான நேரங்களில் தவறான செய்திகளை வெளியிடுவதை நிறுத்துமாறு அனைத்து ஊடக நிறுவனங்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன். உங்களை நினைத்து வெட்கப்படுகிறேன். ஊடக அறம் எங்கே சென்றது என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது” என தெரிவித்துள்ளார்
இந்தியாவில் எவ்வளவு பாதிப்பு? – கொரோனா குறித்து தெரிந்துகொள்ள அதிகாரப்பூர்வ இணையப்பக்கம்