2024-ம் ஆண்டில் இந்தியாவில் ஐ.டி சேவைகளுக்கான செலவுகள் 13.2% வளர்ச்சியடைந்து, மொத்தம் 138.9 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து அமெரிக்க தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனமான கார்ட்னர் (Gartner) வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகளவில் ஐ.டி சேவைகளுக்கான செலவுகள் ஒற்றை இலக்க வளர்ச்சியைக் காணும் நேரத்தில். இந்தியாவில் ஐ.டி சேவைகளுக்கான செலவுகள் இரட்டை இலக்க வளர்ச்சியை கண்டுள்ளன.
2024-ம் ஆண்டில் உலகளாவிய ஐ.டி சேவைகளுக்கான செலவுகள் 8 சதவிகிதம் வளர்ச்சியடைந்து 5.06 டிரில்லியன் டாலர்களை எட்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதுவே, இந்தியாவில் 2024-ம் ஆண்டில் 18.6 சதவிகித வளர்ச்சி விகிதம் பதிவு செய்யப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் மென்பொருளுக்கான (Software) செலவுகளும் அதிகரித்துள்ளது. இருந்தபோதும் இந்திய சிஐஓக்கள் வளர்ச்சி, வாடிக்கையாளர் அனுபவம் மற்றும் செயல்பாட்டுத் திறன் ஆகியவற்றுக்கு தொடர்ந்து முன்னுரிமை அளித்து வருகின்றனர்.
ஐடி செலவுகளை மேம்படுத்துவதிலும், சாஃப்ட்வேர் செலவினங்களை இயக்குவதிலும் வருவாய் மாதிரிகள் (Revenue Models) குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கின்றன.
ஜெனரேட்டிவ் செயற்கை தொழில்நுட்பமானது (Gen AI) வளர்ந்து வருவதால் அதற்கான புதிய செலவுகளும் அதிகரித்துள்ளது. ஜெனரேட்டிவ் ஏஐ-க்கான திட்டமிடல் காரணமாக உலகளவில் டேட்டா சென்டர் அமைப்புகளுக்கான செலவினங்களும் அதிகரித்துள்ளது.
2023-ல் 4 சதவிகிதம் இருந்த டேட்டா சென்டர் செலவுகள், 2024-ல் 10 சதவிகிதமாக வளர்ச்சியைக் காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“2023-ல், நிறுவனங்கள் ஜெனரேட்டிவ் ஏஐ-ன் கதையைச் சொல்லிக்கொண்டிருந்தன, 2024-ல் அவர்களில் பெரும்பாலானோர் 2025-ம் ஆண்டின் இறுதியில் ஜெனரேட்டிவ் ஏஐ செயல்படுத்த திட்டமிடுவதை நாங்கள் காண்கிறோம்’’ என கார்ட்னரின் புகழ்பெற்ற ஆய்வாளர் ஜான் டேவிட் லவ்லாக் கூறியுள்ளார்.