பரபரப்புக்கு துளியும் பஞ்சமில்லாமல் நடந்து முடிந்திருக்கிறது நாடாளுமன்ற தேர்தல். இதில் கோவை தொகுதி தமிழ்நாட்டை கடந்து தேசியளவில் கவனம் ஈர்த்துள்ளது. திமுக, அதிமுக, பாஜக இடையே கடுமையான மும்முனை போட்டி நிலவுகிறது. திமுக வேட்பாளர் ராஜ்குமாருக்கு டீசன்ட் இமேஜ், ஆளுங்கட்சி செல்வாக்கு, கூட்டணி பலம் உள்ளிட்ட பல்வேறு சாதகங்கள் உள்ளன.
அதிமுக இந்தப் பகுதியில் மிகவும் வலிமையான கட்சி. அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனுக்கும் மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. தங்கள் செல்வாக்கை தக்க வைக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர். பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தங்களின் செல்வாக்கை நிரூபித்து, தமிழ்நாட்டில் ஆழமாக கால்பதிக்க தீவிரம் காட்டினார்.
நேற்று காலை முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக தொடங்கியது. வழக்கம் போல நகரப் பகுதிகளில் சற்று மந்தமாகவும், கிராமப் பகுதிகளில் வேகமாகவும் வாக்குப்பதிவு நடந்தது. மதியத்துக்கு பிறகு வாக்குப்பதிவு மிகவும் மந்தமானது. இதனிடையே சென்னையில் இருந்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட வாக்குப்பதிவு விவரங்கள்படி கோவையில் மாலை 7 மணியளவில் 71.17 சதவிகிதம் வாக்குப்பதிவானதாக தகவல் வெளியானது.
இது பாஜகவினரை உற்சாகத்தில் ஆழ்த்தியது. கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் கோவை தொகுதியில் 63.8 சதவிகிதம், கடந்த 2014 நாடாளுமன்ற தேர்தலில் 68.4 சதவிகிதமும் வாக்கு பதிவாகியிருந்தது.
“கோவை தொகுதியில் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாதளவுக்கு வாக்குப்பதிவு அதிகரித்துள்ளது. இது மக்கள் மாற்றத்தை விரும்புவதற்கான அறிகுறி. மக்கள் அண்ணாமலைக்கு ஆதரவாக வாக்களித்துள்ளார்கள். மிகப்பெரிய வித்தியாசத்தில் அவர் வெற்றி பெறுவார்.” என்று பாஜகவினர் மகிழ்ச்சியடைந்தனர்.
ஆனால் தேர்தல் ஆணையம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் காலை முதலே குளறுபடி இருந்தது. கோவை மாவட்ட நிர்வாகம் ஒரு தகவலுக்கும், சென்னையில் தேர்தல் ஆணையம் வழங்கும் தகவலுக்கும் வேறுபாடு இருந்தது.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடம் கேட்டபோது, “இங்கிருந்து நிமிடத்துக்கு நிமிடம் சென்னைக்கு அப்டேட் செய்து வருகிறோம். அதை அவர்கள் சரியாக கணக்கிடாமல் வழங்கியிருக்கலாம். நாங்கள் வழங்கும் தகவலே உறுதியானது.” என்று கூறியிருந்தனர். அதன்படி மாவட்ட நிர்வாகம் இறுதியாக வழங்கிய அறிக்கைப்படி கோவை தொகுதியில் 64.8 சதவிகிதம் வாக்குப்பதிவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதை சென்னையில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வழங்கிய அறிக்கையும் உறுதிப்படுத்துகிறது. எனவே, இந்த வாக்குப்பதிவின் அடிப்படையில் இது கோவையின் சராசரியான அளவையே எட்டியுள்ளது. எதிர்பார்த்த வாக்குப்பதிவு கூடாதது கிடைக்காதது பாஜகவினரை அப்செட் ஆக்கியுள்ளது.
கோவை நாடாளுமன்றத்துக்குட்பட்ட சூலூர், பல்லடம் சட்டசபை தொகுதிகளில் மட்டும் வாக்குப்பதிவு கடந்தமுறையை விட இந்தமுறை அதிகரித்துள்ளது. பாஜகவுக்கு நகர், கிராமம் என்று இரண்டு பகுதிகளிலும் பரவலாக நல்ல ஓட்டு கிடைத்துள்ளதாக அக்கட்சியினர் நம்புகிறார்கள். கிராமப்பகுதியில் அதிமுகவுக்கு அதிகம் செல்லும் வாக்குகள் பாஜகவுக்கு கணிசமாக வந்துள்ளதாகவும் அக்கட்சியினர் நம்புகிறார்கள்.
மொத்தமாக திமுகவின் வாக்கு வங்கியில் இது பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்று கூறுகின்றனர். வாக்குப்பதிவு அதிகமாகியிருந்தால் அது பாஜகவுக்கு சாதகமான முடிவுகளை வழங்கியிருக்கும் என பாஜக-வினர் நம்பி இருந்தனர். 2014 நாடாளுமன்ற தேர்தலில் மோடி மற்றும் பாஜகவுக்கு சாதகமான அலை நிலவியபோது கோவையில் 68 சதவிகிதம் வாக்குப்பதிவானது. அதில் கூட பாஜக சுமார் 40,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இந்த முறை வாக்குப்பதிவு சராசரி நிலையில் தான் உள்ளது. அதனால் பாஜக கடைசிவரை கடுமையான போட்டியளித்தாலும், அவர்கள் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதா என்பதெல்லாம் அவர்களாலே இன்னும் உறுதியாக சொல்ல முடியவில்லை என்கிறார்கள். இதனிடையே திமுகவினர், வாக்குப்பதிவு சதவிகிதம் சராசரி அளவை ஒட்டியே உள்ளதால் நம்பிக்கையுடன் உள்ளார்களாம்.!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY