மும்பை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி மிருதுளா பட்கர் எழுதிய I must say this புத்தகத்தை சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி என் பிரகாஷ் மொழிபெயர்த்துள்ளார். ‘இதை நான் கூறியே ஆக வேண்டும்’ என்ற பெயரிடப்பட்ட அந்தப் புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
முதலில் பேசிய நீதிபதி மிருதுளா பட்கர், “தீர்ப்பு வழங்குவதற்கும் போராட வேண்டியிருக்கிறது. தீர்ப்பைப் பெறுவதற்கும் போராட வேண்டியிருக்கிறது. இதுவே இன்றைய அவல நிலையாக இருக்கிறது. இதை பற்றிதான் இந்தப் புத்தகம் பேசுகிறது. இதனை தமிழில் மொழிபெயர்த்ததற்கு பிரகாஷுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.
பின் பேசிய நீதிபதி பி. என். பிரகாஷ், “இந்தப் புத்தகத்தை முதல் முதலில் நான் படித்தபோது அடுத்த இரண்டு நாள்களுக்கு எனக்குத் தூக்கமே வரவில்லை. மனதில் ஏதோ ஒரு பதற்றம். அந்தப் பதற்றம்தான் இந்தப் புத்தகத்தை தமிழாக்கம் செய்து வெளியிட முக்கிய காரணமாக இருந்தது. நீதித்துறை அனைவரையும் பார்த்துக் குறைக்கும். ஆனால் ஏழைகளை மட்டுமே கடிக்கும்’ என்று பொதுவாகச் சொல்வார்கள்.
அதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு நம் இந்திய விஞ்ஞானி நம்பி நாராயணன் மீது சுமத்தப்பட்ட பொய் குற்றச்சாட்டு. அதற்கு சற்றும் சளைக்காதது இந்தப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுருக்கும் ஒரு வழக்கின் கதை. தவறே செய்யாதவர் மீது பொய்யான குற்றச்சாட்டுகளைச் சுமத்துவதால் பாதிக்கப்படுவது அவர் மட்டுமல்ல. அவரின் குடும்பத்தினரும்தான். அவர்கள் குற்றமற்றவர்கள் என்பதை நிரூபிக்க அவர்களுக்காக வாதாடி, பொய் வழக்குகளிலிருந்தும் அவர்களை விடுவிக்கும் கடமை வழக்கறிஞர்களுக்கே உடையது.
இதை இளைய தலைமுறை வழக்கறிஞர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்தப் புத்தகம் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்தப் புத்தகத்தின் தமிழாக்க பயணத்தில் பெரிதும் உதவியாக இருந்த பார்வை மாற்றுத்திறனாளி நீதிபதி சக்கரவர்த்திக்கும், ‘தமிழாக்கம் செய்யட்டுமா’ என்று கேட்டபோது, சற்றும் யோசிக்காமல் ‘Go ahead’எனக்கூறிய முன்னாள் நீதிபதி மிருதுள்ளா பட்கருக்கும் நன்றி” என்றார்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக தமிழகம் மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி எஸ் அமல்ராஜ், இந்திய பார் கவுன்சிலின் துணைத் தலைவர் எஸ் பிரபாகரன், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் என்.ஆனந்த் வெங்கடேஷ் மற்றும் ஜி.ஜெயச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.