ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் ‘குரோகஸ் சிட்டி ஹால்’ என்ற அரங்கம் உள்ளது. இங்கு சமீபத்தில் ‘பிக்னிக்’ என்ற ராக் இசைக் குழுவின் கச்சேரிக்கு ஏற்பாடு ஏற்பட்டிருந்தது. 7,500-க்கும் மேற்பட்ட ரசிகர்கள் நிரம்பி இருந்தார்கள். நிகழ்ச்சிக்கு தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு திடீரென 4 தீவிரவாதிகள் தானியங்கி துப்பாக்கிகளுடன் அரங்கத்துக்குள் நுழைந்தனர். பிறகு அவர்கள் கண்மூடித்தனமாக சுட்டனர். மேலும் எளிதில் தீப்பிடித்து எரியக்கூடிய ரசாயனத்தை அரங்கம் முழுவதும் தெளித்தனர். இதனால் அரங்கம் முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. தீவிரவாதிகளின் துப்பாக்கிக்கு 143 பேர் பலியாகினர். சம்பவ இடத்திற்கு ரஷ்ய பாதுகாப்பு படையினர் வருவதற்குள், அவர்கள் அங்கிருந்து தப்பினர். பிறகு அவர்கள் உக்ரைன் எல்லையேல் பிடிபட்டனர்.
இதுகுறித்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், “மாஸ்கோவில் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்திய 4 தீவிரவாதிகளும் உதவி செய்த 7 பேரும் கைது செய்யப்பட்டு உள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். படுகாயம் அடைந்தவர்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்படும். இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்படுகிறது. தாக்குதலில் தொடர்புடையவர்கள் மிகக் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்” என்றார்.
இந்த சூழலில் மாஸ்கோவில் நடந்த தாக்குதலுக்கு சிரியா, ஈராக்கை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்று உள்ளது. முன்னதாக மாஸ்கோவில் உள்ள அமெரிக்க தூதரகம் அமெரிக்கர்களுக்கு ஒரு பாதுகாப்பு எச்சரிக்கையை வெளியிட்டது.
அதில், “தீவிரவாதிகள் மாஸ்கோவில் பெரிய கூட்டங்களை குறிவைத்து தாக்குதல்களை நடத்துவதற்கு திட்டம் வகுத்துள்ளனர்” என தெரிவித்து இருந்தது. ஆனால் இதை புடின் முழுவதுமாக மறுத்திருந்தார்.
எஃப்.எஸ்.பி (Federal Security Service(ரஷ்யாவின் உளவு அமைப்பு)) தலைவர்களுடன் பேசிய அவர், “பயங்கரவாதச் செயல் பற்ற மேற்கத்திய நாடு கொடுத்திருக்கும் எச்சரிக்கைகள் ஆத்திரமூட்டும் வகையில் இருக்கிறது. இந்த நடவடிக்கைகள் அனைத்தும் அப்பட்டமான அச்சுறுத்தல் மற்றும் நமது சமூகத்தை மிரட்டி சீர்குலைக்கும் நோக்கத்தை ஒத்திருக்கிறது” என கொதித்திருந்தார். உலகின் சக்தி வாய்ந்த உளவு அமைப்பான சோவியத் யூனியனின் கேஜிபியில் பணியாற்றிய புதினுக்கு அமெரிக்க உளவு அமைப்பு கூறும் தகவல்கள் எரிச்சலை ஏற்படுத்துவது மறுப்பதற்கு இல்லை. அதேநேரம் அந்த தகவல் ஏன் ரஷ்யாவின் உளவு அமைப்புக்கு தெரியவில்லை என்கிற கேள்வியை எழுப்புகிறது.
இதுகுறித்து கருத்து தெரிவித்திருக்கும் செயல்பாட்டு அதிகாரி டேனியல் ஹாஃப்மேன், “உள்ளூர் வாசிகள் மீது அழுத்தத்தை அதிகரிப்பதால், சில சமயங்களில் பயங்கரவாதத் தாக்குதலுக்குதலை அறிந்துகொள்வதற்காக உளவுத்தகவல்கள் கிடைக்காது. அங்குதான் ரஷ்ய உளவு அமைப்பு தோல்வியை சந்தித்துள்ளது” என தெரிவித்திருக்கிறார்.
ரஷ்ய அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், “துரதிர்ஷ்டவசமாக எந்த நகரமும், எந்த நாடும் பயங்கரவாத அச்சுறுத்தலில் இருந்து முற்றிலும் விடுபட முடியாது என்பதை இந்த துப்பாக்கிச் சூடு உலகுக்கு காட்டுகிறது. ரஷ்யாவின் உளவுத்துறையினர் நாட்டைக் காக்க அயராது உழைத்தது” என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கருத்து தெரிவிதிக்கும் ரஷ்ய பாதுகாப்பு அதிகாரிகள், “ரஷ்ய மக்களை காப்பாற்றுவதில் நாங்கள் சிறப்பாக பணியாற்றி வருகிறோம். மார்ச் 2ம் தேதி ஐ.எஸ் அமைப்பின் உறுப்பினர்கள் என அடையாளம் காணப்பட்ட ஆறு பேரை சுட்டு கொன்றது. ஆயுத கிடங்கை கண்டுபிடித்து அளித்திருக்கிறோம். 7ம் தேதி மாஸ்கோவில் உள்ள ஒரு ஜெப ஆலயத்தின் மீதான தாக்குதலை முறியடித்தோம். அதுவும் ஐ.எஸ் குழுவால் திட்டமிடப்பட்டது. தாக்குதல் நடத்தியவர்கள் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டனர்” என்றனர். ஜிஹாதி இயக்கங்கள் பற்றிய ஆராய்ச்சியாளரான ரிக்கார்டோ வால்லே, “மார்ச் 2ம் தேதியே ரஷ்யா சுதாரித்து இருக்க வேண்டும். அப்படி செய்யாதததால்தான் இவ்வளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது” என்றார்.
சர்வதேச அரசியல் நோக்கர்கள், “இஸ்லாமிய தீவிரவாதிகள் மீது ரஷ்யாவின் உளவு அமைப்பு கண் வைத்திருக்கிறது. ஆனால் அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய நாடுகளுடன் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறது. இந்த சூழலில்தான் அமெரிக்கா வழங்கிய எச்சரிப்புக்கு புதின் ஏற்றுக்கொள்ளவில்லை. எனவேதான் அவர்களின் உளவு அமைப்பும் அதில் பெரிதாக கவனம் செலுத்தவில்லை. அமெரிக்கா வழங்கிய தகவலை, ‘மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது.
அதன் மூலமாக ரஷ்யாவின் பலத்தை தகர்க்க விரும்புகிறது” என புதின் நினைத்திருக்க கூடும். அதில் தவறு ஒன்றும் இல்லை. எனவேதான் அவர் நிச்சயமாக அந்த தகவலை நம்பமாட்டார். மேலும் புதின் கேஜிபி பின்னணி கொண்டவர். அமெரிக்கா எப்படி செயல்படும் என்பது அவருக்கு நன்றாகவே தெரியும். எனவே அந்த எச்சரிக்கைக்கு பின்னால் முக்கியமான விஷயம் மறைக்கப்பட்டு இருக்கும் என்பதை புதின் நன்கு அறிவார்.
எனவே துப்பாக்கிச்சூட்டுக்கு மூலகாரணம் வேறு ஏதாவதுதான் இருக்கும். அதை ரஷ்யா தற்போது கண்டறிந்து இருக்க கூடும். இருப்பினும் உலகின் சக்தி வாய்ந்த உளவு அமைப்பை வைத்திருப்பதாக சொல்லும் ரஷ்யாவுக்கு இந்த தாக்குதலை முன்கூட்டியே கணிக்க முடியாதது பெரும் பின்னடைவாகத்தான் பார்க்கப்படுகிறது. ஆனாலும் புதின் பதவியேற்ற போதும் இதுபோல் ஏராளமான பிரச்னைகள் வெடித்தன. அதையெல்லாம் கட்டுப்படுத்திருக்கிறார். இதுவும் அப்படி சரிகட்டப்படும்” என்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY