‘எனக்கு இப்போ கல்யாணம் வேண்டாம்’-ங்கற வாக்கியம் அதிக யூத்களோட வாய்லேருந்து வந்துகிட்டே இருக்கு. இது 23, 24 வயசுலயா?-ன்னு கேட்டா, அந்த வயசுல மட்டும் இல்லாம 28, 29 வயசுகள்ல கூட சொல்றாங்க. யூத்கள் இப்படி சொல்றதுக்கு ஒரு காரணம் இல்ல…ஏகப்பட்ட காரணங்கள் கொட்டிக்கிடக்கு.
சுதந்திரம் பறிபோயிடுமோ..?
இப்போ இருக்குற குழந்தைகளுக்கு அம்மா, அப்பா நிறைய நிறைய சுதந்திரம் தந்து வளர்த்திடறாங்க. தனக்குனு ஒரு குடும்பம் உருவாகும்போது இந்தச் சுதந்திரம் பறிபோயிடுமோங்கற பயம் ரொம்ப அதிகமாவே இருக்கு. இதுவரைக்கும் ‘நம்ம வாழ்க்கை நம்ம ரூல்ஸ்’னு இருந்துட்டோம். ஆனா, புதுசா யாராவது வந்தாங்கன்னா அவங்க சாய்ஸும் நம்ம வாழ்க்கைக்குள்ள நுழையும். அதை நம்மால ஏத்துக்க முடியுமா?-ன்னு ரொம்பவே யோசிக்கறாங்க.
‘செட்’ ஆகுமா?
‘நான் 10 மணிக்கு தான் எந்திரிப்பேன்’, ‘தெரியாத ஒருத்தங்க கிட்ட எனக்குப் பேசத் தெரியாது’, ‘நான் மனசுல இருக்கறதை அப்படியே சொல்லிடுவேன்’, ‘எனக்கு நிறைய கோபம் வரும்’…- இதெயெல்லாம் தாண்டி நமக்கு ஒருத்தர் செட் ஆவாங்களா? செட் ஆனாலும் வாழ்க்கை முழுசும் இது தொடருமா? அப்படி தொடரலைன்னா என்ன ஆகும்? நம்ம வாழ்க்கை அப்படியே முடிஞ்சுடுமா?-ங்கற ஏகப்பட்ட எண்ணங்கள் மண்டையில ஓடிகிட்டே இருக்கு.
இந்தச் சம்பளம் போதுமா?
பாட்டி, தாத்தா காலத்துல ரூ.200, 300 சம்பளத்தை வெச்சு வாழ்க்கை நடத்தினாங்க…அம்மா, அப்பா காலத்துல ரூ.3,000-5,000 வெச்சு வாழ்க்கை நடத்தினாங்க. ஆனா இப்போ இருக்குற யூத்களுக்கு அவங்க வாங்கற ரூ.30,000, ரூ.40,000 சம்பளம் வாழ்க்கை நடத்தப் போதுமா?-ங்கற மிகப்பெரிய சந்தேகம் இருக்கு. பாட்டி-தாத்தா, அம்மா-அப்பா காலத்துல இல்லாத அளவுக்கு யூத்கள் அதிகம் பணம் செலவழிச்சும், வேணுங்கறதை உடனே வாங்கியும் பழகிட்டாங்க. அப்போ இந்தச் சம்பளத்துல இன்னொருத்தர் உள்ள வந்தா, கண்டிப்பா பத்தாதுங்கறது தான் அவங்களோட மைண்ட் செட்.
இன்னும் செட்டில் ஆகலையே!
‘வாழ்க்கை ரொம்ப ஸ்மூத்தாவே போகணும்’னு இப்போ இருக்குற யூத்களுக்கு பேராசை. வீடு, கார், கை நிறைய சம்பளம் அல்லது நல்ல பிசினஸ்-னு செட்டில் ஆனபிறகு கல்யாணத்தை பத்தி யோசிச்சா கல்யாண வாழ்க்கை சூப்பரா போகும்-ங்கறது அவங்களோட எண்ணம்.
இதுதான் பெரும்பாலான எண்ணமா இருந்தாலும்…பொண்ணுங்க எப்படி யோசிக்கறாங்க… பசங்க எப்படி யோசிக்கறாங்க?-ன்னு அவங்கவங்க பக்கம் நின்னு யோசிப்போம்.
பொண்ணுங்க…
‘இன்னும் கொஞ்சம் நாள் எந்த கமிட்மென்ட்டும் இல்லாம ஜாலியா இருக்கலாமே’, ‘நம்ம அம்மா, அப்பாவே செட்டில் பண்ணிடனும்’, ‘எப்படியும் கல்யாணம் ஆனா கரியர்ல பிரேக் விழுந்துரும்…அதுக்கு முன்னாடி நம்ம கரியரை ஸ்ட்ராங் பண்ணிக்கணும்’, ‘நம்ம எதிர்காலத்துக்குத் தேவையான பணத்தை நாமளே சேர்த்து வெச்சுக்கலாம்’, ‘இன்னொரு வீட்டுக்குப் போனா அவங்க எப்படி இருப்பாங்க? நமக்கான சுதந்திரத்தைத் தருவாங்களா?’ – இப்படி ஏகப்பட்ட கேள்விகள் பொண்ணுங்க தலைய வட்டமிட்டடுகிட்டே இருக்குது.
பசங்களுக்கு…
‘இதுவரைக்கும் நாம ஜாலியா ஃபிரெண்ட்ஸோட சுத்திட்டு இருந்தோம்…கல்யாணத்துக்கப்புறம் அது நடக்குமா?, ‘கல்யாணத்துக்கு முன்னாடியே வீடு கட்டிரணும்’, ‘வரப்போற பொண்ணு நம்ம அம்மா, அப்பா எப்படிப் பாத்துப்பாங்க?’, ‘நம்ம கரியருக்கு சப்போர்ட்டா இருப்பாங்களா?’, ‘ஒருவேளை எப்பவும் சண்டை இருந்துகிட்டே இருக்குமோ?’ன்னு ஏகப்பட்ட சந்தேகங்கள் பசங்க கிட்ட இருக்கு.
இது அத்தனைக்கும் ஒரே பதில் தான்…’உங்களுக்கு ஏத்த ஆளை சரியா தேர்ந்தெடுத்துங்க’. இது காதல் திருமணத்துல தான் நடக்கும்னு இல்ல. அம்மா, அப்பாவால நிச்சயிக்கப்பட கல்யாணத்துல கூட இது நடக்கணும். முன்ன மாதிரி இல்லாம, இப்போ அம்மா, அப்பாவே பொண்ணு பார்க்கும் படலத்துலேயே பொண்ணும்-பையனும் பேச பெற்றோரே உதவறாங்க. அப்போ இருந்து கொஞ்சம் டைம் கேட்டு அவங்களைப் புரிஞ்சுக்க முயற்சி செய்யுங்க. ஒருவேளை உங்களுக்கு செட் ஆகாதுன்னு தோணுச்சுனா, பலமா ‘நோ’ சொல்லிடுங்க.
காதல் திருமணத்துக்கும் இது பொருந்தும். முதல்ல எங்க ரெண்டு பேருக்கும் செட் ஆச்சு…இப்போ ஏன்னே தெரியல எங்களுக்குள்ள செட் ஆகமாட்டேங்குதுன்னு தோணுச்சுன்னா, எந்த யோசனையும் இல்லாம உடனே ‘நோ’ சொல்லிடுங்க. மூணு மாச காதல், அஞ்சு வருஷ காதல்ன்னு யோசிச்சு மீதி இருக்குற வருஷங்களை கடினமாக்கிடாதீங்க. நம்ம வாழ்க்கையே இன்னும் அழகாக்க யாராவது கண்டிப்பா நமக்குனு இருப்பாங்க. அதனால ‘நமக்கு வேற யாரும் கிடைக்கலன்னா…என்ன பண்றது?’ -ங்கற பயம் வேண்டவே வேண்டாம்.
‘சுதந்திரம் பறிபோயிடுமோ?’, ‘செட் ஆகுமா? ‘, ‘இந்தச் சம்பளம் போதுமா?’, ‘இன்னும் செட்டில் ஆகலையே!’ -ன்னு யோசிச்சுட்டு இருக்காம, உங்களுக்கான சரியான ஆள் வந்தா, கண்ணை மூடிகிட்டு அவங்க கைய பிடிச்சு நடக்க ஆரம்பிச்சுடுங்க. உங்களுக்கு ஏத்த ஆளோட உங்க பயணத்துல சுதந்திரம் முதல் செட்டிலாகுறது வரை எல்லாமே எளிதாவும், இனிமையாவும் நடக்கும்.