கோவிட் தொற்று என ஆரம்பிக்கப்பட்ட பணிநீக்கத்திற்க்கான காரணம் தற்போது செயற்கை நுண்ணறிவின் காரணமாக நிகழ்ந்து வருகிறது. இந்த நிலையில் ஐபிஎம் (IBM) நிறுவனத்தில் பணிபுரியும் மார்க்கெட்டிங் மற்றும் கம்யூனிகேஷன் பிரிவில் உள்ள ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளது.
மோசமான சூழல்களில் நிறுவனம் சில கடினமான முடிவுகளை எடுப்பது வழக்கம் தான் என்ற போதும், ஐபிஎம் வேறு விதமாக பணிநீக்கத்தை அரங்கேற்றியுள்ளது.
முதலில் ஊழியர்களுக்கு 7 நிமிட மீட்டிங் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. ஐபிஎம்-ன் தலைமை தகவல் தொடர்பு அதிகாரி ஜொனாதன் அடாஷேக், ஊழியர்களோடு பேசி பணிநீக்கம் குறித்து வெளிப்படுத்தி இருக்கிறார். நிறுவனங்கள் ஊழியர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுப்பதாக பணிநீக்கங்களை அறிவிப்பது வாடிக்கையாகிவிட்டது.
பணிநீக்கம் குறித்து நிறுவனம் அதிகாரபூர்வமாக எந்த தகவலும் வெளியிடவில்லை. இருந்தபோதும் சில ஆதாரங்கள் பணிநீக்கம் நடைபெற்றுள்ளதாக கூறியுள்ளன.
இந்த பணிநீக்கத்தை கடந்த ஆண்டு நிறுவனத்தின் சிஇஓ அரவிந்த் கிருஷ்ணா பேசிய கூற்றோடு ஒற்றுமைபடுத்தி பார்க்க முடிகிறது. ஏனெனில் அவர் கூறுகையில், “வரும் ஆண்டுகளில் ஊழியர்களை வேலைக்கு எடுப்பதை நிறுத்த ஏஐ மூலம் சில மாற்றங்கள் ஏற்படுத்தப்படும்.
மனித வளம் போன்ற பின் அலுவலக செயல்பாடுகளில் ஆட்கள் நியமிக்கப்படுவது இடைநிறுத்தப்படும் அல்லது மெதுவாக்கப்படும். அடுத்த ஐந்தாண்டுகளில் 30% ஏஐ மூலம் மாற்றப்படுவதை என்னால் எளிதாகக் காண முடிகிறது’’ என்று கூறியிருந்தார்.
2024 தொடங்கி மூன்று மாதங்கள் கூட நிறைவடையாத நிலையில் layoffs.fyi இணையதளத்தின்படி, ஐபிஎம் உட்பட 204 நிறுவனங்கள் இந்தாண்டு பணிநீக்கங்களை அறிவித்துள்ளன. இந்த பணிநீக்கங்களால் சுமார் 50,000 ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறியுள்ளது.