தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்கும் பங்குச் சந்தை நிபுணர்கள், அப்பாவி முதலீட்டாளர்களை ஏமாற்றும் வகையில் செயல்பட்டு லாபம் சம்பாதித்த நிலையில், நிபுணர்கள், நிறுவனங்கள் உள்பட 15 பேருக்கு தடை விதித்து செபி உத்தரவிட்டுள்ளது.
ஜீ பிசினஸ் தொலைக்காட்சியில் வரும் நிகழ்ச்சிகளில், பங்குகளை பரிந்துரைக்கும் நிபுணர்கள், முன்கூட்டியே அந்த பரிந்துரைகளை வேறு சிலரிடம் பகிர்ந்துகொண்டு, அதன் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் சம்பாதித்திருப்பதாக செபி நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, நிபுணர்கள் உள்பட 15 பேருக்கு தடை விதித்து செபி கடுமையான உத்தரவை பிறப்பித்துள்ளது.
சம்பந்தப்பட்ட நிபுணர்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சில பங்குகளை பொது முதலீட்டாளர்களுக்கு பரிந்துரைக்கின்றனர். ஆனால், முன்கூட்டியே அவர்கள் அந்த பங்குகளை வேறு சிலர் வாயிலாக வாங்கி, தொலைக்காட்சியில் நிகழ்ச்சி ஒளிபரப்பான பிறகு விற்பனை செய்து லாபம் அடைந்துள்ளனர். இப்படி தொடர்ந்து செயல்பட்டதன் வாயிலாக, சுமார் 7.41 கோடி ரூபாய் சட்டவிரோதமான லாபத்தை நிபுணர்கள் சம்பாதித்துள்ளதாக செபி கண்டறிந்துள்ளது. இந்த பணத்தை அபராதமாக செலுத்தும்படி செபி உத்தரவிட்டுள்ளது.
அப்பாவி முதலீட்டாளர்களை சட்டவிரோதமாக ஏமாற்றுவதன் மூலம், நிபுணர்கள் லாபம் சம்பாதித்திருப்பதாக தெரிவித்துள்ள செபி, நிபுணர்கள் உள்பட அவர்களுடன் தொடர்புடையவர்கள் என மொத்தம் 15 பேருக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. சில நிபுணர்கள் தாங்கள் செய்த தவறை உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட 15 பேருக்கும் தடை விதித்தது மட்டுமல்லாமல், அவர்களின் வங்கிக் கணக்குகளையும் செபி முடக்கியுள்ளது. மேலும், மியூச்சுவல் ஃபண்டுகளில் உள்ள பணத்தையும் வெளியே எடுப்பதற்கு தடை விதித்துள்ளது. நிபுணர்கள் பங்கேற்ற நிகழ்ச்சிகளின் அனைத்து வீடியோ பதிவுகளையும் பாதுகாப்பாக பராமரிக்கும்படி ஜீ மீடியா நிறுவனத்துக்கும் செபி அறிவுறுத்தியுள்ளது.
இதுபோக, நீதிமன்றத்திடம் அனுமதி பெற்று சில இடங்களில் ரெய்டும் நடத்தப்பட்டிருக்கிறது. இந்த சோதனையில் சிக்கிய சில மின்னணு இயந்திரங்களை செபி கைப்பற்றியுள்ளது.