சர்வதேச முதலீட்டு நிறுவனமான கோல்டுமேன் சாக்ஸ் `வளமான இந்தியாவின் எழுச்சி’ (The Rise of Affluent India) என்ற தலைப்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், 2027-ம் ஆண்டுக்குள் வருடத்திற்கு 8.3 லட்சத்துக்கும் அதிகமாக வருமானம் ஈட்டும் இந்தியர்களின் எண்ணிக்கை 10 கோடியாக உயரும் என்று குறிப்பிட்டுள்ளது.
அறிக்கையில் வெளியிட்டுள்ள தகவலின்படி, “உலகம் முழுவதும் 10 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை உள்ள நாடுகள் 14 மட்டுமே உள்ளது.
இந்தியாவை பொறுத்தவரையில் 2015-ல் 10,000 அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 8.3 லட்சம்) வருமானம் ஈட்டுபவர்களின் எண்ணிக்கை 2.4 கோடியாக இருந்தது. இந்த எண்ணிக்கை தற்போது 6 கோடியாக அதிகரித்துள்ளது. இது இந்திய மக்கள் தொகையில் 4.1% ஆக உள்ளது.
இந்த எண்ணிக்கை 2027-க்குள் 67% அதிகரித்து 10 கோடியாக அதிகரிக்கும். செல்வமிகு இந்தியர்களின் எண்ணிக்கை அடுத்த நான்கு ஆண்டுகளில் 10 கோடியாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த இந்தியர்கள் நுகர்வோர் மற்றும் செல்வதை உருவாக்கும் மாற்றத்திற்கு வழிவகுத்தவர்கள். இவர்கள் ஆடம்பர பொருட்கள், பங்குச் சந்தை, நகைகள் என அனைத்திலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். இந்தியர்களின் செல்வம் அதிகரிக்கும்போது நகைகள், மருத்துவ சேவைகள், உணவகங்கள் ஆகிய துறைகள் அதிகம் வளர்ச்சியடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல், கோவிட் தொற்றின் தொடக்கத்தில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால் ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள், சேவை வளர்ச்சி உயர்ந்தது.
கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட போதும் இந்த வளர்ச்சி விகிதம் தொடர்ந்து நீடித்தது. இந்த வேறுபாடு வெறும் கோவிட் கட்டுப்பாடுகளால் மட்டுமல்லாமல், செல்வமிகு இந்தியாவின் வேகமான வளர்ச்சியால் ஏற்பட்டுள்ளது” என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.