ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கைக் குழு கூட்டம் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை நடைபெறும். இதில் ரெப்போ வட்டி விகிதம் உட்பட ரிசர்வ் வங்கியின் கொள்கைகள் குறித்து முடிவெடுக்கப்படும். கடந்த பிப்ரவரி மாதம் ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டியை 6.5 சதவிகிதமாக உயர்த்தியது. ஆனால், அதற்குப் பிறகு வட்டி உயர்த்துவதை நிறுத்திவிட்டது.
இந்த நிலையில், டிசம்பர் 6-ம் தேதி ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கைக் கூட்டம் தொடங்கி இன்று முடிவடைந்தது. இதையடுத்து, ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இத்துடன் ஐந்தாவது முறையாக வட்டியை உயர்த்தாமல் ரிசர்வ் வங்கி நிறுத்தி வைத்துள்ளது.
ரெப்போ வட்டி விகிதம் என்பது ரிசர்வ் வங்கியிடம் வங்கிகள் வாங்கும் கடன்களுக்கு விதிக்கப்படும் வட்டி விகிதம் ஆகும். பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காகக் கடந்த ஆண்டு மே மாதம் முதல் ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தி வருகிறது.
கடந்த பிப்ரவரி மாதம் முதல் தற்போது வரை ரெப்போ வட்டி விகிதம் 6.5 சதவிகிதமாகவே நீடித்து வருகிறது. ரெப்போ வட்டி விகிதம் இதே நிலையில் நீடிப்பதால் வீட்டுக் கடன், வாகனக் கடன், தனிநபர் கடன் போன்ற கடன்களை வாங்கியவர்களுக்கு இ.எம்.ஐ-யில் மாற்றம் இருக்காது.
ரிசர்வ் வங்கியின் அடுத்த நாணயக் கொள்கைக் குழு கூட்டம் வரும் பிப்ரவரி 6-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை நடைபெறும்.