எந்தளவு தொழில்நுட்பம் வளருகிறதோ அந்தளவு அந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மோசடிகளும் அதிகரிக்கிறது. சமீப காலமாக டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளை செய்யும் மக்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் அதிகரித்து வரும் ஆன்லைன் பேமெண்ட் மோசடிகளைக் குறைக்க, புதியதாக ஒரு அக்கௌண்டில் இருந்து முதன்முறையாக இரண்டு நபர்களுக்கு இடையே 2,000 ரூபாய் தொகைக்கு மேல் பரிவர்த்தனை செய்ய 4 மணிநேரம் காத்திருக்கவேண்டும் என்ற குறைந்தபட்ச கால அவகாசத்தை விதிக்க அரசு திட்டமிட்டுள்ளது.
தற்போது ஒருவர் புதிய யுபிஐ கணக்கைத் தொடங்கும் பட்சத்தில் முதல் 24 மணி நேரத்திற்குள் பயனர்கள் 5,000 ரூபாய் வரை அனுப்பலாம்.
ஆனால் தற்போது ஆலோசிக்கப்பட்டுள்ள விதிகளின் படி, புதியதாக ஒருவர் யுபிஐ கணக்கை தொடங்கும்பட்சத்தில் 2,000 ரூபாய்க்கு மேலான டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு நான்கு மணிநேரம் வரை காத்திருக்க வேண்டும்.
இந்த நடவடிக்கைகள் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்படும் யுபிஐ, ரியல் டைம் கிராஸ் செட்டில்மென்ட் (ஆர்டிஜிஎஸ்) மற்றும் உடனடி கட்டணச் சேவைகளில் (ஐஎம்பிஎஸ்) மூலம் செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த திட்டம் குறித்து மூத்த அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், “2,000 ரூபாய்க்கு மேலான முதல் டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு நான்கு மணிநேர கால வரம்பைச் சேர்க்க உள்ளோம்.
இந்திய ரிசர்வ் வங்கி, பல்வேறு பொதுத் துறை மற்றும் தனியார் துறை வங்கிகள் மற்றும் கூகுள் மற்றும் ரேஸர்பே போன்ற தொழில்நுட்ப நிறுவனங்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தியது.
இந்த நடவடிக்கை பணம் செலுத்துவதில் சில இடையூறுகளுக்கு வழிவகுத்தாலும், இணையப் பாதுகாப்புச் சிக்கல்களைத் தீர்க்க இந்த நடைமுறை அவசியம் என்று நாங்கள் நம்புகிறோம்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.