வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் விதிமுறைகளுக்கு இணங்காமல் செயல்படும்போது கடுமையான அபராதம் விதிப்பதற்கு ரிசர்வ் வங்கி பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களை ஒழுங்குபடுத்தும் பொறுப்பு ரிசர்வ் வங்கிக்கு இருக்கிறது. வங்கிகளும், நிதி நிறுவனங்களும் எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கான வழிகாட்டல்களையும், விதிமுறைகளையும் ரிசர்வ் வங்கி உருவாக்கியிருக்கிறது.
தேவைக்கேற்ப விதிமுறைகளை மாற்றுவது, புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்துவது போன்ற நடவடிக்கைகளையும் ரிசர்வ் வங்கி மேற்கொள்கிறது.
ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளுக்கு இணங்காமல் செயல்படும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு அவ்வப்போது அபராதம் விதிக்கப்படுவது வழக்கம்.
உதாரணமாக, தனியார் வங்கியான ஆக்ஸிஸ் பேங்க் பல்வேறு விதிமுறைகளுக்கு இணங்காமல் செயல்பட்டதற்காக நவம்பர் 16-ம் தேதி 90.92 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது.
இதே போல, மணப்புரம் ஃபைனான்ஸ், ஆனந்த் ரதி குளோபல் ஃபைனான்ஸ் போன்ற நிதி நிறுவனங்களுக்கும் ரிசர்வ் வங்கி அண்மையில் அபராதம் விதித்து உத்தரவிட்டது.
இந்த நிலையில், வங்கிகள் விதிமுறைகளுக்கு இணங்கி செயல்படுவதை உறுதி செய்வதற்காக வங்கிகளுக்கு கடுமையான அபராதங்களை விதிப்பதற்கு ரிசர்வ் வங்கி பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
வங்கிகள் விதிமுறைகளை மீறி செயல்படும்போது சம்பந்தபட்ட சி.இ.ஓ மற்றும் மூத்த நிர்வாகிகளின் சம்பளத்தில் கை வைப்பதற்கும் ரிசர்வ் வங்கி ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
இது போக, ரிஸ்க்கைக் குறைப்பதற்காக கூடுதல் மூலதனத்தை ஒதுக்கிவைப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.
இந்த நடவடிக்கைகளால் வங்கிகளில் கார்ப்பரேட் நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கும், விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுவதை உறுதி செய்வதற்கும் ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.