`அமெரிக்காவில் உள்ள ஒவ்வொரு நான்கு வெளிநாட்டு மாணவர்களில் ஒருவர் இந்தியராக இருக்கிறார்’ என்று ஆய்வு குறிப்பிட்டுள்ளது.
வெளிநாடுகளில் சென்று கல்வி பயிலும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு சென்று பயிலும் மாணவர்கள் குறித்த விவரங்களை ஓபன் டோர்ஸ் வழங்கி உள்ளது.
ஓபன் டோர்ஸ் அறிக்கையின் படி, 2022 -2023-ம் ஆண்டில் அமெரிக்காவில் படிக்கும் இந்திய மாணவர்களின் பதிவு செய்யப்பட்ட எண்ணிக்கை 2,68,923-ஐ தொட்டுள்ளது. அமெரிக்க வளாகங்களில் உள்ள சர்வதேச மாணவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை ஒரு மில்லியனைத் தாண்டி உள்ளது.
இந்த நிலையில் அமெரிக்காவில் உள்ள ஒவ்வொரு நான்கு வெளிநாட்டு மாணவர்களில் ஒருவர் இந்தியராக இருக்கிறார் என்று ஆய்வு குறிப்பிட்டுள்ளது.
ஆய்வு வெளியிட்டுள்ள தகவல்கள்…
*2022-23 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் படிக்க 2,68,923 மாணவர்களை இந்தியா அனுப்பியுள்ளது. இதன்மூலம் அமெரிக்காவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்கள் எண்ணிக்கையில் இந்தியா இரண்டாவது முன்னணி நாடாக விளங்குகிறது.
முந்தைய ஆண்டை விட இந்திய மாணவர்களின் எண்ணிக்கையில் ஒட்டுமொத்தமாக 35 சதவிகித வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
*அமெரிக்காவில் பயிலும் 1 மில்லியன் சர்வதேச மாணவர்களில் 25 சதவிகிதத்தினர் இந்திய மாணவர்கள்.
* அமெரிக்காவுக்கு மாணவர்களை படிக்க அனுப்பும் இரண்டாவது பெரிய நாடாக இந்தியா உள்ளது.
*இந்திய மாணவர்களில் சுமார் 1,65,936 பேர் பட்டதாரிகளாக உள்ளனர். இளங்கலை மாணவர்களில் 31,954 பேர் உள்ளனர். இந்திய பட்டதாரி மாணவர்களின் எண்ணிக்கை 63 சதவிகிதம் அதிகரித்துள்ளது. அதே சமயம் இளங்கலை மாணவர் எண்ணிக்கை 16 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
*70 சதவிகித அமெரிக்க நிறுவனங்கள் இப்போது இந்தியாவில் இளங்கலை படிப்புக்கு முன்னுரிமை கொடுக்கின்றன.
*அமெரிக்காவில் மிகவும் பிரபலமான படிப்புகளாக STEM பாடங்கள் இருக்கின்றன; குறிப்பாக கணிதம், கணினி அறிவியல், அதைத் தொடர்ந்து பொறியியல் மற்றும் எம்பிஏ படிப்புகள் உள்ளன.
*ஆப்ஷனல் பிராக்டிகல் டிரெயினிங் (optional practical training) பயிற்சியில் 69,062 மாணவர்களுடன் இந்தியா முதலிடத்தில் உள்ளது.
*அமெரிக்க தூதரக அலுவலகங்கள் அதிக நேரம் வேலை செய்து இந்தியர்களுக்கு (1.4 லட்சத்துக்கும் அதிகமான) விசாக்களை வழங்குகின்றன.
கல்வி மீதான ஆர்வம் மாணவர்கள் மத்தியிலும் பெற்றோரின் மத்தியிலும் அதிகரித்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. கொடுத்தாலும் குறையாத கல்விச் செல்வத்தின் மீதான மக்களின் பிடிப்பு மாற்றத்தை அளிக்கிறது.
கற்கை நன்றே…