நேருவுக்கு ‘கிரிமினல்’ பட்டம் கொடுக்கிறார், சிவராஜ் சிங் சவுகான். ’நேரு இந்தியாவை அவமதித்தவர்’ என்று தூற்றுகிறார், பிரக்யா சிங் தாகூர். ‘ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்ற வேண்டும்’ என்கிறார், ஹன்ஸ்ராஜ் ஹன்ஸ். இவர்களுக்கு வரலாற்றை சுட்டிக் காட்டித் திருத்த வேண்டிய மோடியோ, நேரு நினைவுஅருங்காட்சியகத்தையே அடையாளம் மாற்ற ஆலோசித்துக் கொண்டிருக்கிறார்.
காந்தியையே திட்டுபவர்கள், நேருவை கொஞ்சுவார்கள் என்று எதிர்பார்க்கமுடியாது தான். ஆனால், நேருவை ‘கிரிமினல்’ என்று முத்திரை குத்துவதை சகிக்கமுடியவில்லை. நேரு ‘இந்தியாவை அவமதித்தவர்’ என்று தூற்றுவதை எளிதாய்க் கடக்கமுடியவில்லை.
இப்போது அல்ல, 1955ம் ஆண்டே நேருவை ஹிட்லரோடு ஒப்பிட்டு கட்டுரை எழுதித்தூற்றியது, ’ஆர்கனைசர் (Organiser)’ இதழ். அதே ’ஆர்கனைசர்’தான் அதற்கு 6 ஆண்டுகளுக்கு முன்னால், நேருவை ’இந்தியாவை காக்கவந்த விடிவெள்ளி’ என்றும் பாராட்டித்தள்ளியது.
ஏன்… 1949ம் ஆண்டில் அமெரிக்காவுக்கு அரசு முறைப்பயணமாக நேரு சென்றபோது அவருக்கு 60வது பிறந்தநாள் வந்தது. அப்போதுதான் ‘ஆர்கனைசர்’ இதழில் நேருவைப்பாராட்டி நாலு பக்கத்துக்கு கட்டுரை எழுதியது ஆர்.எஸ்.எஸ். ‘நேரு இந்தியாவைச் சிறப்பாக வழிநடத்துகிறார். இந்தியமக்கள் அவரை வெகுவாக விரும்புகிறார்கள்’ என்றுவரிக்குவரி வஞ்சப்புகழ்ச்சி செய்தார்கள். அதற்குப் பின்னாலிருந்த காரணத்தை ராமச்சந்திர குஹா ஒரு கட்டுரையில் விளக்கினார். ‘காங்கிரஸ் அவர்களுக்கு இனித்தகாலம் அது. அவர்கள் காங்கிரஸில் ஐக்கியமாக துடித்துக்கொண்டிருந்தார்கள். நேருவின் ராஜகுருவாக மாற கோல்வால்கர் மிகவும் விரும்பினார்’ என்று சொல்லியிருக்கிறார், அவர்.
நேரு, இளவரசனாகப் பிறந்தவர். அரசனாக வளர்ந்தவர். ஆனால், ஆண்டியாக வாழ்ந்தவர். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் இணைந்துகொண்ட பிறகு, அவர் பெரும்பாலும் பணக்கஷ்டத்தில்தான் வாழ்ந்தார். ‘அவரது புத்தகங்களின் பதிப்புரிமைத்தொகை மட்டும்தான், அவருக்கு ஒரே வருமானமாக இருந்தது’ என்று எழுதுகிறார், அவரிடம் உதவியாளராக இருந்த மத்தாய். ஆனந்தபவன் அரண்மனையும், அலகாபாத் சிறைச்சாலையும் அவருக்கு ஒன்றாகவே தெரிந்திருக்கிறது. ‘வீட்டின் வேலையாள்களுக்கும் சேர்த்து சொத்தைப் பங்கிட்டுக் கொடுத்த தயாளன், அந்தக் காலத்தில் அவர் மட்டுமே’ என்று மனம் நெகிழ்கிறார் மத்தாய்.
நேரு எனும் ஆளுமை, சிறையன்னையால் சீராட்டி வளர்க்கப்பட்டவர். சிரமங்களையும் சித்ரவதைகளையும் கடந்துசெல்லும் நெஞ்சுரத்தை அவர் காந்தியிடம் இருந்துபெற்றிருந்தார். ‘சிறையைப் போல ஒரு தவச்சாலை இல்லை. தண்டனையைப் போல ஒரு தவமில்லை’ என்றே, சிறை அதிகாரிகளிடம் சொல்கிறார், அவர். ஒரு கணக்கின்படி, நேரு சிறையில் இருந்த நாள்கள் மொத்தம், 3259… கிட்டத்தட்ட 9 வருடங்கள், அவர் நாட்டுக்காகவும் நாட்டு மக்களுக்காகவும் சிறைவதையைஅனுபவித்திருக்கிறார். சிறையில் கழிந்தது அவரின் இளமை. காசநோயால் அவதிப்பட்டு வந்த மனைவியை அருகிருந்து கவனிக்க முடியவில்லை. அந்தத் தியாகத்துக்குதான் இப்போது கிரிமினல் பட்டம்.
1934 பிப்ரவரியில் இருந்து, 1935 செப்டம்பர் வரை, 188 புத்தகங்களை சிறைச்சாலையின் தூசிபடிந்த தரைகளில் அமர்ந்து படித்து முடித்திருக்கிறார், நேரு. அவற்றில் அரசியல், பொருளாதாரம், இலக்கியம் என்று எல்லாமே கலந்திருந்தது. காந்தி அலைந்து திரிந்து கண்டுணர்ந்த இந்தியாவை அவரால் உட்கார்ந்த இடத்திலேயே கண்டுணர முடிந்தது புத்தகங்களில்தான்.
ஆனால் பாருங்கள்… இத்தனை படித்த நேரு, இத்தனை சிந்தித்த நேரு, இத்தனை எழுதிய நேரு, ’நான் எவ்வளவு பெரிய அறிவாளி பார்த்தீர்களா’ என்று எப்போதும் தம்பட்டம் அடித்துக் கொண்டதில்லை. தன்னுடைய கஷ்ட நஷ்டங்களை மேடையில் சொல்லி அழுது, அரசியல் ஆதாயம் அடைய முயன்றதில்லை. நேருவின் விமர்சகர்கள்கூட, அவரின் அத்தனை செயல்களும் இந்தியா மீதான நம்பிக்கையில் இருந்தும், இந்திய மக்களின் மீது அவர் கொண்டிருந்த அன்பில் இருந்தும் எழுந்து வந்ததை ஏற்றுக்கொள்வார்கள்.
1947, ஆகஸ்ட் 15 நள்ளிரவில், இந்தியா சுதந்திரம் அடைகிறது. இந்தியத் தெருக்களெங்கும் மூவர்ணக்கொடி முத்தொளி வீசிப்பறக்க ஆரம்பிக்கிறது. நாடாளுமன்றத்தில் 12 மணிக்கு ஒரு மணிநேரம் முன்னதாகவே கூட்டம் தொடங்குகிறது. மையக்கட்டிடம் எங்கும் இருநாட்டுத் தலைவர்களின் தலைகள். பாகிஸ்தானின் செளத்ரி கலிகுசமானும், இந்தியாவின் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனும் பேசிமுடித்த பிறகு, இருக்கைவிட்டு எழுகிறார், நேரு. நிதானமான முகத்துடன், தீர்க்கமான குரலுடன் உரையைத்தொடங்குகிறார்… ’உலகம் உறங்கிக் கொண்டிருக்கும் வேளையில், இந்தியா விடுதலை விழி திறந்திருக்கிறது. நமக்கான வாய்ப்புகள் திறந்திருக்கின்றன. நமக்கான வெற்றிகள் காத்திருக்கின்றன. அதற்கு நாம் தயாராகவேண்டும்’ என்று சொல்லிவிட்டு சிறிய இடைவெளி விடுகிறார். இந்திய அன்னை நிமிர்ந்து அமர, அவர் கொடுத்த அவகாசம் அது.
நேரு தொடர்கிறார். ’உண்மையும் நம்பிக்கையும் கொண்டு நாம் பயணத்தைத் தொடங்குவோம். இது இந்தியாவுக்கான பயணம் மட்டுமல்ல, உலகத்துக்கான பயணமும்கூடத்தான். இது எவரையும் தூற்றுவதற்கான தருணமோ, எவர் மீதேனும் பழிபோடும் தருணமோ அல்ல. நமக்கென ஒரு கனவு காத்திருக்கிறது. அதை மெய்யாக்கப்போராடுவோம்’ என்று பேசிவிட்டு அவர் மேலே பார்த்தபோது, அவரை ஆதுரத்துடன் ஆசீர்வதித்தாள், இந்திய அன்னை. நேருவின் அந்த ஒருநிமிட உரைதான், ‘விதியுடன் ஒரு ஒப்பந்தம்’ என்ற பெயரில், பின்னாளில் உலகப்புகழ் பெற்றது. இது, எவரோ எழுதிக்கொடுத்து நேரு பேசிய பேச்சல்ல. அவை, அவரது மனதில் இருந்து எழுந்து வந்த வார்த்தைகள். அவருக்குள் இயல்பாகவே ஓர் ஆட்சியாளன் இருந்தான். நேருவை பிரதமர் ஆக்கியது காந்தியல்ல; காந்தியின் வழியாக காலம்தான் அவரைத்தேர்ந்தெடுத்தது. அடிப்படையில், அவர் ‘Officer Material’ அல்ல. ஆனால், ஓர் ஆட்சியாளன் ‘Officer Material’ ஆக இருக்கவேண்டிய அவசியமும் இல்லை. ‘இங்கே கண்ணீர் இருக்கும்வரை, நமக்கு கடமை இருக்கும்’ என்ற சொல்லை, வெறுமே ஒரு நிர்வாகியால் பேசிவிடமுடியாது.
சந்தேகமே இன்றி, இந்திய அன்னையின் தலைப்புதல்வன், நேருதான். எத்தனை காந்திகள், மோடிகள் வந்தாலும் அவரது அந்த இடத்தை தட்டிப்பறிக்க முடியாது. இன்றைய இந்தியா முழுக்க முழுக்க நேருவின் சிருஷ்டி. நேரு இறந்தபொழுது உலக ஊடகங்கள், ‘நவீன இந்தியாவின் சிற்பி’ என்று அழைத்தே அவருக்கு அஞ்சலி செலுத்தின.
நாம் இன்னொன்றையும் அறியவேண்டும். இங்கிலாந்துக்காரன் ஒன்றும் பூத்துக்குலுங்கும் பூந்தோட்டமாக இந்தியாவை உருவாக்கிவிட்டுச் செல்லவில்லை. இருநூறு ஆண்டுகாலம் இடைவிடாமல் சுரண்டப்பட்ட பூமி, இது. இரண்டு பெரும்பஞ்சங்களில் பல லட்சம் உயிர்களை பறிகொடுத்த மண், இது. 1924வாக்கில், இந்தியாவில் இருந்து இங்கிலாந்து ஆண்டொன்றுக்கு அடைந்த வருமானம் எவ்வளவு தெரியுமா… 135,633,000 பவுண்டுகள்! அப்போது, இங்கிலாந்தின் மொத்த வருமானமே 910,775,000 பவுண்டுகள்தான். அதாவது, பத்தில் ஒரு பங்கு வருமானத்தை இந்தியாவை சுரண்டிப்பெற்றிருக்கிறது, இங்கிலாந்து. அவர்களின் மற்ற காலனிகளான ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கநாடுகளின் சுரண்டல் தொகையை மொத்தமாக சேர்த்தால்கூட, இந்தியக் கணக்கை நிகர்செய்ய முடியாது. இப்படி, அந்நியனால் இடித்து நொறுக்கப்பட்ட ஒரு தேசத்தைத்தான், மீட்டெடுத்துக் கட்டினார், நேரு. இதற்காகவா அவருக்கு ’கிரிமினல்’ பட்டம்?!
இந்தியா வித்தியாசமான நாடு. இங்கே, இருபது மொழிகள். இருநூறு இனங்கள். இரண்டாயிரம் சாதிகள். இதை, ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்று நாம் வெளியேவேண்டுமானால் பெருமையாக சொல்லிக் கொள்ளலாம். ஆனால், உள்ளுக்குள் அது ஆண்டாண்டு காலமாக சமத்துவத்தை சூழ்ந்து சுட்டெரிக்கும் கொடுநெருப்பாகவே இருந்து கொண்டிருக்கிறது. அந்தக் காலங்களில், அந்த நெருப்பு இன்னும் உக்கிரமாக எரிந்து கொண்டிருந்தது. அப்போது மட்டும், ‘அனைவரும் பங்களிப்பதேஉண்மையான ஜனநாயகம்’ என்ற எண்ணத்தை உள்ளத்தில் சூடிய நேரு எனும் தலைவன் எழுந்து வந்திருக்காவிட்டால், இந்தியா உள்நாட்டுப் போர்களால் உருக்குலையும் இன்னொரு ஆப்பிரிக்க நாடாக மாறியிருக்கும்.
நேருவின் கல்யாணப் பத்திரிகை உருது மொழியில் அச்சடிக்கப்பட்டது. அவரது நம்பிக்கைக்கு உகந்த ஆலோசகர்களாக தென்னக மாநிலங்களைச் சேர்ந்தவர்கள், இருந்தார்கள். அவரது அலுவலகத்தில்கூட, வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கே அதிக முன்னுரிமை அளிக்கப்பட்டது. இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தை, அண்ணல் அம்பேத்கரை அழைத்து உருவாக்கியது, அவரது அரசு. அனைத்துக்கும் மேலே, இந்தியாவின் அடையாளமாக அசோகரை கொண்டு வந்து வைத்தார், நேரு. அவர் நினைத்திருந்தால் சிவாஜியையோ அக்பரையோ இந்தியாவின் அடையாளமாக மாற்றியிருக்கலாம். ஆனால், தர்மச்சக்கரத்தை உருட்டிய அசோகரை இந்நாட்டின் அடையாளமாக ஆக்கினார், நேரு.
‘உங்களின் மிகப்பெரிய சாதனையாக நீங்கள் கருதுவது எது?’ என்று கேட்டபோது, ‘400 மில்லியன் மக்கள் அவர்களே அவர்களை ஆட்சிசெய்து கொள்ளும் வகையில் இந்தியாவை வடிவமைத்தது’ என்று மட்டுமே சொன்னார், நேரு. ஆம்! பைகளில் இருக்கும் வாக்குச்சீட்டை எடுத்துப் பாருங்கள். அதை நமக்கு அளித்தது ‘ஜனநாயகம்’. அந்த ஜனநாயகத்தை நமக்கு அளித்தவர், நேரு. ’நீங்கள் விட்டுச் செல்லும் விஷயமாக எது இருக்கும்?’ என்ற கேள்விக்கும், ‘ஜனநாயகம்தான்’ என்றே பதில் சொன்னார், அவர். இத்தகையவரின் பெயரை பல்கலைக் கழகத்துக்கு வைக்கக்கூடாது என்றால், வேறு யார் பெயரை வைப்பது?!
இதோ, இப்போது மோடி பிரதமராக இருக்கிறார். உள்துறை அமைச்சராக அமித் ஷா இருக்கிறார். எதிர்காலத்தில் யாரோ ஒருவர் வந்து, ‘அமித் ஷாவை பிரதமராக்கவிடாமல் மோடி தடுத்து விட்டார்’ என்று சொன்னால் ஏற்கமுடியுமா… அதுபோலத் தான், ’படேல் பிரதமராவதை நேரு தடுத்தார்’ என்ற பழிச்சொல்லும்.
படேல், இறுதிவரை காங்கிரஸ்காரராகவே இருந்தார். நர்மதை நதிக்கரையில் ஆயிரம் அடிகளுக்கு சிலை வைப்பதால் மட்டும், அவர் ’காங்கிரஸ்காரர் அல்லாதவர்’ ஆகிவிடமாட்டார். ஆக, இந்த அரசு இனிமேலும் படேல் – நேரு பஞ்சாயத்தையே வளர்க்காமல், வேறு வேலைகளில் கவனம் செலுத்துவது நல்லது.
நேருவை, தவறுகளே செய்யாத ஆட்சியாளனென்று காட்டுவது நோக்கமில்லை. அதை அவரேகூட ஏற்கமாட்டார். தனது நீண்ட ஆட்சிக்காலத்தில் இரண்டு பெரும் தவறுகளை அவர் செய்திருக்கிறார். காஷ்மீர் விவகாரத்தில் வாக்களித்தபடி பொதுவாக்கெடுப்பு நடத்தாதது அவரது, முதல் பெருந்தவறு. மகள் இந்திராவுக்கு காங்கிரஸ் கட்சிக்குள் அதிக இடம் கொடுத்தது, அவர் செய்த இரண்டாம் பெருந்தவறு.
முதலில், காஷ்மீரைப் பார்ப்போம். நேருவின் முன்னால், இந்தியா எனும் மாபெரும் மக்கள்திரள் தேசத்தை காக்கவேண்டிய பெரும்பொறுப்பு இருந்தது. அதில்தான் அவரது அத்தனை கவனமும் குவிந்திருந்தது. அதுபோக, அவர் எப்போதுமே போரை விரும்பியதில்லை. காஷ்மீரில் அமைதி நடவடிக்கைக்கு இன்னும் இடம் இருப்பதாகக் கருதியே அவர் ஐக்கியநாடுகள் சபையை அணுகினார். நேரு ஐ.நா போனது பிரச்சனையில்லை. அங்கு வாக்களித்தபடி பொது வாக்கெடுப்பை நடத்தாததுதான் பிரச்சனை. அதற்காக அவரை விமர்சிக்கலாம். அவருமே வானிருந்து வரவேற்கவே செய்வார்.
இந்திராவுக்கு வருவோம். நேருவின் மகள் என்பதால்தான் காங்கிரஸ் தலைவராக ஆக்கப்பட்டார் இந்திரா. அதில், மாற்றுக்கருத்தே இல்லை. ஆனால், இந்திராவை அரசியல்வாரிசாக உருவாக்க நேரு முயலவில்லை. அப்படியொரு எண்ணமும் அவரிடம் இல்லை. ’நேருவுக்கு ஒரு அரசியல் பரம்பரையை உருவாக்குவதில் விருப்பம் இருக்கவில்லை என்பது ஒரு முரண்நகை. அவர் 1964ம் ஆண்டு மே மாதம் இறந்தபோது, இந்திரா காந்தி பொதுவாழ்வில் இல்லை. அவர் பிரதமரானது ஒரு விபத்து. அவரது தந்தைக்குப் பின் பிரதமரான லால் பகதூர் சாஸ்திரி, 1966ஆம் ஆண்டு ஜனவரி மாதம் துர்மரணம் அடைந்ததால் மட்டுமே, அவர் பிரதமராக நியமிக்கப்பட்டார்’ என்று சொல்கிறார், ராமச்சந்திர குஹா. அத்தனை உண்மை அவரது வார்த்தை.
ஒன்று தெரியுமா? நேரு இறந்ததும், ஏதேனும் ஒரு வெளிநாட்டில் செட்டிலாகும் முடிவில்தான் இருந்தார், இந்திரா. குஹா சொன்னது போல, இந்திரா பிரதமரானது ஒரு விபத்து மட்டுமே. அதில், நேருவுக்கு எந்தப் பங்கும் இல்லை.
ஆனாலும், இந்திராவுக்கு அந்த அளவு இடம்கொடுத்ததே நேரு போன்ற ஒரு தலைவனுக்கு அழகில்லாத காரியம்தான். ’தலைவன்கள் களத்தில் ரத்தம் சிந்த வேண்டும். குடும்பத்தில் கண்ணீர் சிந்த வேண்டும்’ என்று வெண்முரசில் எழுதினார், எழுத்தாளர் ஜெயமோகன். நேரு இன்று இருந்திருந்தால் அவரைக் கட்டிப்பிடித்து அவரின் கன்னத்தை நனைத்திருப்பார். ஆம். நேரு, களத்தில் ரத்தமும் சிந்தினார். குடும்பத்தில் கண்ணீரும் சிந்தினார். இந்திராவின் எதேச்சதிகாரத்தை அவரால் தவிர்க்க முடிந்ததே தவிர, தடுக்க முடியவில்லை. விஜயலட்சுமி பண்டிட்டின் அசட்டுத்தனங்களையும் அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை. ’உலகின் உடைக்க முடியாத கைவிலங்கு பாசம்’ என்பார்கள், ஆன்றோர். காந்தியால் அதை எளிதில் உடைக்க முடிந்தது. ஆனால், நேருவால் அது கடைசி வரை முடியவில்லை. அடிப்படையிலேயே, நேரு உணர்வுகளில் அதிகம் சிக்கிக்கொள்ளும் குணம் கொண்டவராக இருந்தார். அவர் தரப்பு நியாயங்களைவிட எதிர்த்தரப்பின் உணர்வுகளே அவருக்கு முக்கியமாக தெரிந்தன.
நேரு, மாமனிதன்! மாமனிதன் என்பதாலேயே, அவரால் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து முடிக்க முடியாமல் போனது. என்ன செய்வது? மாமனிதர்களை அப்படியொரு நிலைக்கு தள்ளிவிட்டு விடுகிறது, விதி. காந்தியும் கடைசிக்காலங்களில் கண்ணீரைத்தான் சுமந்து கொண்டிருந்தார். காமராஜரின் கல்லறையும் இன்னும் ஈரமாகத்தான் இருக்கிறது. லிங்கனின் அழுகுரலை கனவில் கேட்காத அமெரிக்கர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.
வெண்முரசில், கதிரெழுநகர் என்றொரு அத்தியாயம்… அதில், கர்ணனுக்கும் ராதைக்கும் இடையே நடக்கும் ஒரு விவாதம் நேருவை நினைவுப்படுத்தும். ராதையிடம்கர்ணன் கேட்கிறான்… “அன்னையே, மாமனிதர்கள் என்பவர்கள் ஏன் கண்ணீர் விட நேர்கிறது?” என்று கேட்கிறான். ராதை சொல்கிறாள்… “அவர்கள் மனிதர்களைவிடமிகப்பெரியவர்கள் மைந்தா! மனிதர்கள் எலிகளைப்போல. வளைகளுக்குள் பிற எலிகளுடன் கூடியும் ஊடியும் வாழ்கிறார்கள். மாமனிதர்கள் மத்தகம் எழுந்தபெருங்களிறுகள். அவர்களுக்கு இவ்வுலகம் மிகச்சிறியது. ஆகவேதான் அவர்கள் வெளியேறிச் சென்றுகொண்டே இருக்கிறார்கள். பரசுராமர் பாரதம் முழுக்கச் சுற்றினார். ராகவராமர் காட்டுக்குள் அலைந்தார்” என்கிறாள். நேருவுக்கு அப்படி எந்தப் பயணமும் அமையவில்லை. அதனால், ஆனந்தபவன் தோட்டத்துக்குள்ளேயே அவர் பாதம்தேய நடந்து தீர்த்தார். ஆனால், பார்கவருக்கும் ராகவருக்கும் இணையாகவே அவரும் கண்ணீர்விட்டார் என்பது உண்மை. அந்தக் கண்ணீரில் சில துளிகள் காஷ்மீர் மக்களுக்கும், இந்திராவால் அலைக்கழிக்கப்பட்ட கம்யூனிஸ்ட்களுக்கும் ஆனவை என்பதை அறிய, ஆய்வுப்புத்தகங்களை புரட்ட வேண்டியதில்லை. ஆழ்மனதைக் கேட்டாலே சொல்லும்.
நேரு மண்வந்த மாபெரும் அறத்தோன். பஞ்சத்தை சமாளிக்க பிச்சைப்பாத்திரம் ஏந்தவும் தயங்காத கருணை உள்ளம், இந்திய ஆட்சியாளர்களில் அவருக்கு மட்டுமே இருந்தது. எத்தரப்பையும் எதிரியென கருதாமல் அனைவருக்குமான வளர்ச்சியை ஏற்படுத்தும் அன்பு மனமும், அவருக்கு மட்டுமே வாய்த்தது. ஆகவே, ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் மறையாத ஆதவன் அவர்…
Yes, He is Eternal!
நேருவின் சறுக்கல்கள்!
1) இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையின் போது எழுந்த மரண ஓலங்கள், நேருவின் மீது வீசப்பட்ட விலகா சாபச்சொல்லாக இப்போதும் நீடிக்கிறது. உலகளவில் மிக அதிக உயிர்களை பலிகொண்ட நிகழ்வுகளில் முக்கியமானதாகவும், அது கருதப்படுகிறது. கிட்டத்தட்ட 20 லட்சம் பேர் அப்போது உயிரிழந்தார்கள். காயம்பட்டு தத்தளித்தவர்களின் கணக்கு அதையும் தாண்டும். ஆங்கிலேயனின் அவசரக்கோல நடவடிக்கைகளால் ஏற்பட்ட மனிதப்பேரழிவு அது. இந்தியாவுக்கு சிறிதும் சம்பந்தமில்லாத ராட்கிளிஃபை அழைத்து, 30 நாட்களில் எல்லைகளை பிரித்தது, பிரிட்டிஷ் அரசாங்கம். அதைத் தடுக்கும் அளவுக்கு நேருவுக்கு அப்போது அதிகாரம் இல்லை. டெல்லியின் வீதிகளில் அழுதுத்துடித்த மக்களின் துயரத்தில் அவரும் பங்கெடுத்தார். அது மட்டுமே அவரால் அன்று செய்யக் கூடியதாக இருந்தது.
2) ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராகும் வாய்ப்பு, இந்தியாவுக்கு வந்தது. ஆனால், நேரு அதை மறுத்தார். இன்று வரை நேருவின் நிர்வாகப் பிழைக்கு முதல் முன்னுதாரணம் அது. அவரது மனதில் அப்போது என்ன ஓடியது என்பது குறித்து நிறைய ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன. ஆனாலும், பாரதூரமாகப் பார்க்கையில் அவரின் அந்த முடிவு ஏற்படுத்தியிருக்கும் விளைவு, இந்தியாவுக்குப் பாதகமானதாகவே முடிந்திருக்கிறது. அதை அனைவரும் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். நேருவின் மீது அளவில்லா அபிமானம் கொண்ட சசிதரூரே கூட, நேருவின் ஒரே பிழையாக அதையே அடிக்கோடிடுகிறார்.
3) சீனப்போர் தோல்வி, நேருவின் அந்திமக்காலங்களில் நடந்த ஒன்று. அவர் அப்போது மிகவும் தனிமைப்பட்டுக் கிடந்தார். எப்போதும் எதற்கும் நடுங்கா அவரது கரங்கள், அப்போது நடுங்கிக் கொண்டிருந்தன. ஆனாலும், போரை இந்தியா வென்றெடுக்க ஓர் ஆட்சியாளனாக என்னவெல்லாம் செய்யமுடியுமோ, அத்தனையையும் நேரு செய்தார். ஆனால், முடிவு நமக்கு சாதகமானதாக இல்லை.