‘ரேபிட் ரயில்’ என்ற இந்தியாவின் முதல் பிராந்திய விரைவு ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி கடந்த வெள்ளிக்கிழமை (அக். 20) தொடங்கிவைத்தார். டெல்லியை மையமாகக் கொண்டு, அதைச் சுற்றியுள்ள நகரங்களை செமி விரைவு ரயில் சேவை இணைக்கிறது. இந்த ரயில் சேவைக்கு ‘நமோ பாரத்’ என்று பெயரிடப்பட்டிருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி.

இந்தத் திட்டத்தின் முதற்கட்டமாக, டெல்லியிலிருந்து காசியாபாத் வழியாக மீரட் வரை செல்லக்கூடிய ரயில் சேவை தொடங்கிவைக்கப்பட்டிருக்கிறது. இந்த ரயிலுக்கு ‘நமோ ரயில்’ என்று பெயிரிடப்பட்டிருப்பதுதான் சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறது.

இந்தியாவில் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட இந்த ரயில், மணிக்கு 180 கி.மீ வேகத்தில் செல்லக்கூடியது. ஆனாலும், 160 கி.மீ வேகம் வரையில்தான் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. முழுமையாக குளிரூட்டப்பட்ட இந்த ரயில், பாதுகாப்பானது, வசதிகள் நிறைந்தது என்று ரயில் நிர்வாகம் கூறுகிறது.

ரயிலில் ஒரு பெட்டி பிரிமியம், ஒரு பெட்டி மகளிருக்கு என ஒதுக்கப்பட்டிருக்கின்றன. சக்கர நாற்காலி, ஸ்ட்ரெச்சர் ஆகியவை ஏறும் வகையில் கடைசிப் பெட்டி அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த திட்டம், ரூ.30 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படுவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

இந்த ரயில் சேவைக்கு ‘நமோ ரயில்’ என்று பெயரிட்டிருப்பது சர்ச்சையாகியிருக்கிறது. நரேந்திர மோடி என்பதன் சுருக்கம்தான் நமோ. தேர்தல் பிரசாரங்களில் பிரதமர் நரேந்திர மோடியின் பெயரை ‘நமோ’ என்று பா.ஜ.க-வினர் அழைத்து, அது பிரபலமடைந்தது. மோடியின் அதிகாரபூர்வ செயலி, ‘நமோ ஆப்’ என்று குறிப்பிடப்படுகிறது. பிரதமர் மோடியின் பெயரில் இயக்கப்படும் ‘நமோ ஆப்’ மூலமாக, ஸ்வச் பாரத் உள்ளிட்ட மத்திய அரசின் திட்டங்களுக்கு நிதி வசூலிக்கப்பட்டு, பா.ஜ.க சார்பில் ரசீது வழங்கப்படுகிறது என்ற விவகாரம் சர்ச்சையானது.

மோடி

இது குறித்து, பத்திரிகையாளர் ஒருவர் சம்பந்தப்பட்ட மத்திய அரசுத் துறைகளிடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேள்வி கேட்ட நிலையில், ‘நிதி வசூலிக்க யாருக்கும் அனுமதி வழங்கவில்லை’ என்று பதில்கள் வந்திருக்கின்றன. இதையடுத்து, மத்திய அரசின் திட்டங்களுக்கான நிதியை, பிரதமரின் பெயரில் எப்படி ஓர் அரசியல் கட்சி வசூல் செய்ய முடியும் என்று சர்ச்சை எழுந்துள்ளது. 2019 நாடாளுமன்றத் தேர்தலின்போது ‘நமோ டி.வி’ என்ற சேனல் பா.ஜ.க சார்பில் நடத்தப்பட்டது.

‘நமோ ஸ்டேடியத்துக்குப் பிறகு, இப்போது நமோ ரயில்’ என்று விமர்சித்திருக்கிறார் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ஜெய்ராம் ரமேஷ். அதாவது, குஜராத் மாநிலம் அகமதாபாத்திலுள்ள கிரிக்கெட் ஸ்டேடியத்துக்கு நமோ ஸ்டேடியம் என்று பெயரிடப்பட்டிருக்கிறது.

ஜெய்ராம் ரமேஷ்

காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான பவன் கெரா, ‘நாட்டிற்கு, பாரத் என்று ஏன் பெயர் வைக்கிறீர்கள்… நமோ என்று நாட்டின் பெயரை மாற்றிவிடுங்களேன்’ என்று கூறியிருக்கிறார்.

‘2024 நாடாளுமன்றத் தேர்தலில் தோற்றுவிடுவோமோ என்ற அச்சம் காரணமாக எதையாவது செய்ய வேண்டுமென்று முனைப்பு காட்டுகிறார்கள்’ என்று திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி-யான சகேத் கோகலே விமர்சித்திருக்கிறார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.