காவிரி விவகாரம்… கூடியது தமிழக சட்டப்பேரவை!
காவிரி விவகாரம் உச்சம் பெற்றிருக்கும் நிலையில் தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் இன்று கூடியது. இதில் காவிரி நீர் விவகாரம் குறித்து தனித் தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது. மேலும் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவிடக் கோரி மத்திய அரசை வலியுறுத்தி தனி தீர்மானமும் நிறைவேற்றப்படும் எனத் தெரிகிறது. இந்த தனி தீர்மானத்தை முதலமைச்சர் ஸ்டாலின் முன் மொழிய உள்ளார். பல ஆண்டுகளாக சிறையில் உள்ள இஸ்லாமிய கைதிகளை விடுவிக்கக் கோரி அதிமுக சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்படவும் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
சட்டப்பேரவை கூடியதும், பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல், கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி, தமிழ்நாடு அரசு முன்னாள் தலைமைச் செயலாளர் சபாநாயகம், வேளாண் அறிவியலாளர் எம்.எஸ் சுவாமிநாதன் ஆகியோர் மறைவுக்கு சபாநாயகர் அப்பாவு இரங்கல் குறிப்புகளை வாசித்தார்.
அமைச்சர் செந்தில்பாலாஜி ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதி!
சட்ட விரோத பண மோசடி விவகாரத்தில் கடந்த ஜூன் மாதம் அமலாத்துறையால் கைதான தி.மு.க அமைச்சர் செந்தில் பாலாஜி, தற்போது புழல் சிறையில் இருக்கிறார். கைதுசெய்யப்பட்ட நாள்முதல், `செந்தில் பாலாஜிக்கு இதய அறுவை சிகிச்சை, இலாகா இல்லாத அமைச்சராகத் தொடர அரசாணை, அவர் மற்றும் அவரின் சகோதரருக்குத் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கு எதிராக 3,000 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் உள்ளிட்ட பல நிகழ்வுகள் அரங்கேறியிருக்கின்றன. தற்போது ஜாமீனை எதிர்ப்பார்த்து காத்திருக்கிறார்.
இந்நிலையில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில்பாலாஜி ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. ரத்த கொதிப்பு உள்ளிட்ட காரணங்களால் உடல்நல பாதிப்பு ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் மருத்துவமனையில் இருந்து அறிக்கை வெளியான பின்னரே முழுமையான தகவல் தெரிய வரும்!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.