அண்மையில்தான் தமிழ்நாடு அரசு மின்சார வாகனங்களை வணிகப் பயன்பாட்டுக்குப் பயன்படுத்த அனுமதி அளித்திருந்தது. இதையொட்டி தமிழ்நாட்டைச் சேர்ந்த ரெஃபெக்ஸ் குழுமத்தின் கிரீன் மொபைலிட்டி தொடக்க விழா நேற்று நடைபெற்றது. பெரு நிறுவனங்களின் வணிகத் தேவைக்கு மின்சாரக் கார்களை ஒப்பந்த அடிப்படையில் வழங்கும் பணியை இந்நிறுவனம் செய்கிறது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய பெருநகர சென்னை மாநகராட்சியின் துணை மேயர், எம்.மகேஷ் குமார், “சுற்றுச்சூழல் மாசுபாட்டுக்கு வாகனங்களில் இருந்து வெளியாகும் புகை முக்கிய காரணமாக இருப்பதால், உலக நாடுகளும் மின்சார வாகன பயன்பாட்டை ஊக்குவிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றன. தமிழ்நாடு முதலமைச்சர் இயற்கையைப் பாதுகாக்கவும், பசுமையை வளர்க்கவும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். அவரின் வெளிநாட்டுப் பயணங்களுக்குப் பிறகு, அரசுத் துறைகளுக்கான வாகனங்கள் வாங்குவதற்கும், பயன்படுத்துவதற்கும் சூழலுக்கு உகந்த வாகனங்களுக்கு முன்னுரிமை அளிக்கும்படி அறிவுறுத்தியுள்ளார்.
இதன்படி சென்னை மாநாகாராட்சிக்கு இனி வாங்கும் வாகனங்கள் அனைத்தும் மின்சார வாகனங்களாகவே இருக்கும். அலுவலர்களுக்கான வாகனங்கள் இனி, படிப்படியாக மின்சார வாகனங்களாக வாங்கத் திட்டமிட்டு வருகிறோம். இனி வரும் காலங்களில் மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரிக்க உள்ளது. ஆகையால், மாநகராட்சி சார்பில் இந்த வாகனங்களுக்கான சார்ஜிங் பாய்ன்ட் அமைப்பது குறித்தும் ஆலோசித்து வருகிறோம். தற்போது திடக்கழிவு மேலாண்மை பணிகளுக்கு மின்சார வாகனங்களை பயன்படுத்தி வருகிறோம். இந்த நேரத்தில் ரெஃபெக்ஸ் குழுமத்தின் பசுமை வாகன இயக்க பணிக்கு என் பாராட்டுக்கள்’’ என்றார்.
ரெஃபெக்ஸ் குழுமத்தின் நிர்வாக இயக்குனர் அனில் ஜெயின், ‘‘கடந்த மார்ச் மாதம் பெங்களூருவில் இந்த வணிகத்தைத் தொடங்கினோம். கிட்டத்தட்ட 11 லட்சம் கி.மீ தூரம் இயக்கி, கடந்த 6 மாதங்களாக 3.74 லட்சம் டன் கார்பன் டை ஆக்சைடு உமிழ்வைச் சேமித்துள்ளோம். சென்னையில் முதல் கட்டமாக 71 வாகனங்களை அறிமுகப்படுத்தியுள்ளோம். பெரும் நிறுவனங்கள், வங்கிகள் மின்சார வாகனங்களைப் பயன்படுத்த முன் வருகின்றன. நாளுக்கு நாள் பசுமை வாகனங்களின் எண்ணிக்கை பெருகி வரும். வணிகத்துடன் சூழலைப் பாதுகாக்கும் பணியிலும் நாங்கள் பங்கு கொண்டுள்ளோம்’’ என்றார்.