டெக் அறிமுக நிகழ்வுகளில் ஆப்பிள் ஈவென்ட்களுக்கு எப்போதும் ஒரு தனி ஹைப் இருக்கத்தான் செய்கிறது. டெக், கேட்ஜட்கள் அறிமுகங்களை மிக பிரமாண்டமாக நடத்துவதில் ஆப்பிளுக்கு நிகர் ஆப்பிள்தான்.
எப்போதும் செப்டம்பர் மாதத்தில் ஐபோன்கள் மற்றும் பிற புதிய கேட்ஜெட்களை அறிமுகப்படுத்தும் விழாவை ஆப்பிள் நிறுவனம் நடத்துவது வழக்கம். அவ்வகையில் இம்முறை டெக்கீஸ் பலரும் எதிர்பார்த்த ஆப்பிளின் புதிய 15 சீரிஸ் ஐபோன்களை (iPhone 15, iPhone 15 Plus, iPhone 15 Pro and iPhone 15 Pro Max) இன்று இரவு 10.30 மணிக்கு அறிமுகம் செய்யவிருக்கிறது ஆப்பிள். இதை யூடியூப் மற்றும் ஆப்பிள் இணையதளத்தில் லைவ்வாக பார்க்க முடியும்.
இதுவரை கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி, இந்தப் புதிய 15 சீரிஸ் ஐபோன்களில் வெளிப்புற வடிவமைப்பில் பெரிதாக எந்தவொரு மாற்றமும் இல்லையென்றாலும் ஹார்டுவேர்களில் சில புதிய மாற்றங்கள் கொண்டு வருகிறது ஆப்பிள். இதில் பலரும் எதிர்பார்க்கும் புதிய சிறப்பம்சங்கள், மாற்றங்கள் என்னனென்ன என்பதைப் பற்றி இங்கு பார்க்கலாம்.
‘A17’ பயோனிக் சிப்
புதிய ஐபோன்களில் முக்கியமாகப் பார்க்கப்படுவது ஆப்பிளின் புதிய ‘A17′ பயோனிக்’ சிப்தான். ஹைஎண்ட் மாடல்களான ஐ-போன் 15 ப்ரோ மற்றும 15 ப்ரோ மேக்ஸ் மாடல்களில் மட்டுமே இது கொண்டுவரப்படும் என்று எதிர்க்கபடுகிறது. ஏற்கனவே 14 ப்ரோ மாடலில் பயன்படுத்தப்படும் A16 பயோனிக் சிப் நல்ல செயல்திறனைக் கொண்டிருந்தாலும் பேட்டரி பவரை கொஞ்சம் அதிகமாகவே உரிஞ்சிக்கிறது, குறைந்த நேரத்தில் சூட்டையும் கிளப்பி விடுகிறது. இப்பிரச்னைக்குத் தீர்வாக இந்தப் புதிய ‘A17’ சிப் இருக்குமா என்பதே பெரும் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
டிஸ்ப்ளே மற்றும் டைட்டானியம்
டிஸ்ப்ளேவைப் பொறுத்தவரை 6.1 மற்றும் 6.7 இன்ச் அளவிலான ‘ProMotion’ 120Hz டிஸ்பிளேக்கள் கொடுக்கப்படவுள்ளதாக தகவல். டிஸ்ப்ளே பெஸல்ஸ் முன்பைவிடவும் கொஞ்சம் குறைக்கப்பட்டிருக்கிறது. மற்றபடி, நாட்ச்சை மறைக்க அதே ‘Dynamic Island’ டிசைன்தான்.
கேமரா
கேமராவைப் பொறுத்தவரை சோனியின் ‘IMX803’, ‘IMX633’ சென்சார் 14 Pro Max-ல் பயன்படுத்தப்படுகிறது. என்னதான் இறுதி அவுட்புட் ஐபோன்களில் பல மடங்கு சிறப்பாக வந்தாலும், இன்று மார்கெட்டில் 30,000 பட்ஜெட்டில் இருக்கும் பல ஆண்ட்ராய்டு போன்களில் இந்த வகை சென்சார்கள்தான் பயன்படுத்தப்படுகின்றன.
புதிய 15 சீரிஸ் ஹைஎண்ட் மாடல்களில் இதைவிடவும் அதிகமாக ‘IMX989’ சென்சார் அல்லது புதிய மேம்படுத்தப்பட்ட சென்சார்கள் எதுவும் பயன்படுத்தினால் ஆப்பிள் வைக்கும் விலைக்கு நியாயமாக இருக்கும் என்பதே ரசிகர்களின் கருது. இதுதவிர ஆப்டிக்கல் ஜீம் 6X வரை இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
ஆக்ஷன் பட்டன்
வெளிபுற டிசைனைப் பொருத்தவரை முன்பிருந்த அலுமினியத்திற்குப் பதிலாக டைட்டானியம் பயன்படுத்தப்படும் என கூறப்படுகிறது. இது அலுமினியத்தைவிட கொஞ்சம் எடைக் குறைவாக இருக்கும். போனைக் கையில் பிடிப்பதற்கு ஏதுவாக விளிம்புப் பகுதியிலும் லேசான கர்வ் டிசைன் கொண்டுவரப்படுமாம்.
இந்தப் புது 15 சீரிஸ் ஐபோன்களில் பயன்பாட்டாளர்களுக்கு ஒரு நல்ல அனுபவத்தைக் கொடுக்கப்போவது ‘ஆக்ஷன் பட்டன்’ தான். சோனி கேமராக்களில் இருக்கும் கஸ்டமைஸ் பட்டன்களைப் போல ஐ-போனில் இருக்கும் மியூட் பட்டனுக்குப் பதிலாக ‘ஆக்ஷன் பட்டன்’ இடம்பெறுகிறது. இதைப் பயன்படுத்தி நமக்குத் தேவையான எந்தவொரு வசதியையும் அதில் அமைத்துக் கொள்ளலாம். இது போனைப் பயன்படுத்துவதற்கு நல்லவொரு அனுபவத்தை நிச்சயம் தரும்.
இந்த ஆப்பிள் ஈவன்டிலேயே மகிழ்ச்சியான செய்தி என்னவென்றால் இதுவரை ஐ-போன்களில் பயன்படுத்தப்பட்டு வந்த லைட்னிங் கேபிள் இனி கிடையாது. ஐரோப்பிய அரசின் சட்டப்படி எல்லாம் ‘USB Type C’ சார்ஜ் போர்ட் மயமாகிக் கொண்டிருப்பதால் ஐபோன் 15 சீரிஸில் இருந்து இனி வரும் எல்லா ஐபோன்களிலும் ‘USB Type C’ போர்ட்தான் பயன்படுத்தப்படும். இருப்பினும், ஆப்பிளால் அங்கிகரக்கப்பட்ட ‘Type C’ கேபிள்களை மட்டும்தான் பயன்படுத்த முடியும் என்ற அதிர்ச்சியான சர்ப்ரைஸை ஆப்பிள் நமக்கு கொடுக்கவும் அதிக வாய்ப்பிருக்கிறது. குறைந்தபட்சம் இந்த முறையாவது உறுதியான பிரைடட் பேபிள் வரும் என நம்புவோம். எதிர்பார்த்தபடி அது பல கலர்களில் வந்தால் கூடுதல் மகிழ்ச்சிதான்.
இதுதவிர, ஆப்பிள் வாட்ச்சின் 9 சீரிஸ், iOS17, iPad மற்றும் ஆப்பிள் டிவி தொடர்பான அறிவிப்புகளும் இன்று நடைபெறும் ஆப்பிள் ஈவன்டில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வேறு என்னென்ன சர்ப்ரைஸ்களை ஆப்பிள் வைத்திருக்கிறது என்பதைப் பொறுத்திருந்து இன்றிரவு காண்போம்!