நாடு முழுவதும் ஐ.ஐ.டி-க்களில் மாணவர்கள் சாதி ரீதியாக துன்புறுத்தப்படுவதாக குற்றச்சாட்டு இருந்து கொண்டிருக்கிறது. மும்பை ஐ.ஐ.டி-யில் உள்ள கேன்டீனில் சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு தனி இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக இப்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மும்பை ஐ.ஐ.டி-யில் உள்ள 12வது கேன்டீனில் உள்ள சுவரில் சைவ உணவு சாப்பிடுபவர்கள் மட்டும் இங்கு அனுமதி என்று எழுதப்பட்ட போஸ்டர் ஒட்டப்பட்டு இருந்தது. இந்த போஸ்டர் சோசியல் மீடியாவில் வேகமாக பரவியது. ஆனால் இதனை யார் ஒட்டியது என்று தங்களுக்கு தெரியாது என்று விடுதி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். அதோடு சைவ சாப்பாடு சாப்பிடுபவர்களுக்கு தனி இருக்கைகள் ஒதுக்கப்படவில்லை என்றும் தெரிவித்தனர்.
இதற்கு ஐ.ஐ.டி-யில் செயல்படும் மாணவர் அமைப்பான அம்பேத்கர் பெரியார் புலே ஸ்டடி சர்க்கிள் கடும் கண்டனம் தெரிவித்ததோடு, அந்த போஸ்டரை கிழித்தனர். இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், இமெயில் மற்றும் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் விடுதி செயலாளரிடம் கேட்டதற்கு, மாணவர்கள் சாப்பிடுவதற்கு கேன்டீனில் இருக்கைகள் யாருக்கும் தனியாக ஒதுக்கப்படவில்லை என்று தெரிய வந்துள்ளது.
தனிப்பட்ட யாரோ இது போன்ற நோட்டீஸை ஒட்டி இருக்கின்றனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இச்சம்பவத்தை தொடர்ந்து விடுதி செயலாளர் அனைத்து மாணவர்களுக்கும் அனுப்பி இருக்கும் இமெயில் செய்தியில்,`கேன்டீனில் ஜெயின் மாணவர்கள் சாப்பாடு வாங்க தனி கவுண்டர் இருக்கிறது. ஆனால் அவர்கள் அமர்ந்து சாப்பிட தனி இருக்கைகள் எதுவும் ஒதுக்கப்படவில்லை.
ஜெயின் மாணவர்கள் அமர்ந்து சாப்பிடும் இடத்திற்கு அசைவ உணவு கொண்டு வருபவர்கள் அமர்ந்து சாப்பிட அனுமதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. இது ஏற்றுக்கொள்ள முடியாதது. இது போன்ற செயல்கள் மீண்டும் நடந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதோடு மும்பை ஐ.ஐ.டி.யில் புதிதாக சேரும் மாணவர்கள் சாதி ரீதியாக துன்புறுத்தப்படக்கூடாது என்பதற்காக மாணவர்கள் மற்ற மாணவர்களிடம் ஜெஇஇ தரப்பட்டில் என்னவென்று கேட்கக்கூடாது என்றும், சாதி ரீதியாக நகைச்சுவை, விமர்சனங்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து கொள்ளவேண்டாம் என்றும், சாதி, மதங்களை கடந்து ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்று முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஐ.ஐ.டி.நிர்வாகம் அறிவுரை வழங்கி இருக்கிறது. கடந்த ஆண்டு சாதிப்பிரச்னையால் தர்சன் சோலங்கி என்ற மாணவர் மும்பை ஐ.ஐ.டி.யில் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.