தொடங்கியது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்!
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர், இன்று தொடங்கி, அடுத்த மாதம் 11-ம் தேதிவரை நடைபெற இருக்கிறது. ஒடிசா ரயில் விபத்து, மணிப்பூர் கலவரம் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து கேள்வி எழுப்பு எதிர்க்கட்சிகள் திட்டமிட்டிருக்கின்றனர். அதேநேரத்தில் தமிழ்நாடு ஆளுநரை திரும்பப் பெறுவது குறித்து விவாதம் நடத்த வலியுறுத்தி திமுக சார்பில் இரு அவைகளிலும் நோட்டீஸ் அளிக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மணிப்பூரில் பெண்களுக்கு நடந்த கொடுமையை என்றும் மன்னிக்க முடியாது!
மணிப்பூரில் பெண்கள் நிர்வாணமாக்கப்பட்ட விவகாரம் இந்திய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில், இது தொடர்பாக நாடாளுமன்றத்திற்கு வெளியே பேட்டியளித்த பிரதமர் மோடி, “மணிப்பூரில் பெண்களுக்கு நடந்த கொடுமையை என்றும் மன்னிக்க முடியாது. என்னுடைய இதயம் வேதனை அடைந்திருக்கிறது. மணிப்பூரில் நடந்த சம்பவம் இந்த நாகரீக சமுதாயத்திற்கு வெட்கக்கேடானது. இந்தியாவின் தாய் மற்றும் சகோதரிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அனைத்து மாநில முதல்வர்களும் இந்திய பெண்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்திருக்கிறார்.
மத்திய அமைச்சரை சந்திக்கும் துரைமுருகன்!
தமிழ்நாடு, கர்நாடக மாநிலங்கள் இடையே மேக்கேதாட்டூ விவகாரம் பெரிய அளவில் வெடித்திருக்கும் நிலையில், மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை இன்று சந்திக்கிறார் அமைச்சர் துரைமுருகன். காவிரி நீர் பங்கீடு விவகாரம் தொடர்பாக சில முக்கிய கோரிக்கைகளை முன்வைக்க உள்ளார் எனத் தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கூட, மத்திய அமைச்சர் கஜேந்திரசிங்கை சந்தித்தார் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன். காவிரியில் இருந்து தமிழகத்துக்கு வழங்க வேண்டிய தண்ணீரை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தினார். மேலும் மேக்கேதாட்டூவில் அணை கட்ட கர்நாடகா அரசுக்கு அனுமதி வழங்க கூடாது என மத்திய அமைச்சரிடம் கேட்டுக்கொண்டார் அமைச்சர் துரைமுருகன்.