நாகப்பட்டினம் மாவட்டம், நம்பியார் நகரைச் சேர்ந்தவர் மாணவி ஜெ.ஐஸ்வர்யா. இவர், தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் இளநிலை மீன்வள அறிவியல் படிப்பில் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றதுடன், 14 பதக்கங்களை பெற்று சாதனை படைத்துள்ளார்.
மாணவி ஐஸ்வர்யாவுக்கு கல்லூரியிலும், நாகை மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளதாக அந்த மாவட்ட மக்கள் மத்தியில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
இந்நிலையில், ஐஸ்வர்யாவின் திறமைக்கு மரியாதை செய்யும் விதமாக நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹார்ஷ் சிங், அவரை நேரில் அழைத்துப் பாராட்டினார். மாணவியோடு, அவருக்கு ஊக்கமும் ஆக்கமும் அளித்த அவர், பெற்றோரையும் பாராட்டி, அவர்களுடன் பேசினார்.
பின்னர், மாணவிக்கு புத்தகம் வழங்கி கௌரவப்படுத்தி ஊக்கப்படுத்திய அவர், மேலும் பல பட்டங்களை பெற்று பெருமை சேர்த்திட வேண்டுமென உற்சாகப்படுத்தினார்.