நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்தார். “தம்பி செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி எனச் சொல்கிறார்கள். அவர் குணமாகி வரவேண்டும் என நான் வாழ்த்துகிறேன். தமிழ்நாட்டில் சுவர் ஏறி குதித்து கைது செய்த சம்பவம் எல்லாம் இருக்கிறது. அதிகாரத்தில் யார் வந்தாலும் அவர்களின் வசதிபடிதான் கைது செய்வார்கள். அ.தி.மு.க இருக்கும்போது கருணாநிதியை எப்படி கைது செய்தது. சிதம்பரத்தை வீடு ஏறி குதித்து கைது பண்ணியது எல்லாம் இருக்கிறது. கைது அப்பிடீன்ன நெஞ்சுவலி வர்றது எல்லாம் நாம நிறைய தெலுங்கு படத்தில பார்த்திருக்கிறோம். சாதாரணமா கைது பண்ணினால் நெஞ்சுவலின்ன ஒவ்வொரு கைதிக்கும் நெஞ்சுவலிதான் வரணும்.
தேர்தல் நெருங்க நெருங்க இன்னும் நிறைய வேலைகளை மத்தியில் ஆட்சியில் இருப்பவர்கள் செய்வார்கள். இது போலகொண்டுபோய் நிறுத்துவார்கள் என்பது நாம எதிர்பார்த்ததுதான். இது ஜனநாயக நாடு, மக்களாட்சி கோட்பாட்டை கொண்ட ஒரு நாடு, அதிகாரம் மக்கள் கையில இருக்குதுன்னு நாம் நினைத்தோம். தேர்தல் ஆணையம், நீதிமன்றம், வருமானவரித்துறை, மத்திய புலனாய்வுத்துறை, அமலாக்கத்துறை எல்லாம் தன்னாட்சி அதிகாரம் பெற்ற அமைப்பு என நினைத்தோம். அதிகாரம் தலையிடாது, சுதந்திரமாக செயல்படும் என நினைத்தோம். இப்போது அதெல்லாம் கிடையாது. இவை அனைத்தும் ஆட்சியில் இருப்பவர்களின் ஐந்து விரல்கள். அது நீட்டினால் நீட்டும், மடக்கினால் மடங்கும்.
என்னை பிடிக்கவில்லை என்றால் நாளை என் வீட்டில் சோதனை வரும். ஏன் கைது பண்ணினார்கள், எதற்காக கைது பண்ணினார்கள் என வீட்டில்கூட சொல்லவேண்டியது இல்லை. இருட்டறையில் போட்டு சாகடிப்பதுதால்தான், சர்வாதிகாரம் எனச் சொல்லாமல் கொடுங்கோன்மை ஆட்சி என இதைச் சொல்லுவேன்.
பழிவாங்கும் நடவடிக்கை என தி.மு.க சொல்கிறது என்றால், இந்த காரணத்துக்காக பழிவாங்குகிறது என சொல்லவேண்டும் இல்லையா. அ.தி.மு.க ஆட்சி காலத்தில் இந்த ஊழலை செய்தார்கள் என்றால் இவ்வளவுகாலம் அமலாக்கத்துறை எல்லாம் என்ன செய்தார்கள். தகவல் தெரிந்ததும் உரிய நேரத்தில் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அ.தி.மு.க ஆட்சி முடிந்துபோய் எவ்வளவு காலம் ஆகிவிட்டது. அதிலும் எடப்பாடி ஆட்சிகாலத்தில் இவர் அமைச்சராக இல்லை. இப்போது நடவடிக்கை எடுக்கிறது என்றால் தேர்தல் ஸ்டண்டு எனச்சொல்லாமல் வேறு என்னவாக நீங்கள் நினைப்பீர்கள். மிரட்டி பணிய வைப்பார்கள். அவர்கள் கூட்டணிக்கு போவார்கள், போகவில்லை அதுவேறு. ஆனால் இவர்கள் அச்சுறுத்துவார்கள்.
அண்ணாமலையை இந்த ஆட்டத்தில் சேர்க்காதீர்கள். அவரது நிலைமை பரிதாபம். முதலாளி சொல்வதை கீழ உள்ளவர் செய்வார். அண்ணாமலைக்கு தனி கருத்து இருக்கிறதா. மோடி, அமித் ஷா சொல்வதை அண்ணாமலை செய்வார். அவர் கருத்தை நீங்கள் எடுத்துக்கொண்டு இருக்க முடியாது. அ.தி.மு.க ஆட்சியில் நடந்ததற்கு விசாரணை என்றால் அது நேர்மையாக இருக்குமா. உங்களுக்கு உடம்பு சரியில்லை என்றால் உடனே மருத்துவமனையில் சேர்ப்பீர்களா கொஞ்சம் நேரம் கழித்து சேர்ப்பீர்களா. நடவடிக்கை எப்ப எடுப்பீர்கள். 15 வருடத்துக்கு முன்பு கொலை செய்ததற்கு இபோது கைது செய்வதாக சொன்னால் அதை எப்படி எடுத்துக்கொள்வீர்கள். இது ஒருவித வேடிக்கைதான்.
செந்தில் பாலாஜி செய்தது எல்லாம் போய்விட்டது. அய்யோ அவருக்கு நெஞ்சுவலி என்கிறார்கள். காந்தியை ஒன்றும் கைது செய்யவில்லை என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். இ.சி.ஜி இயல்பாக இல்லை என்கிறார்கள். உண்மையை சொல்ல வேண்டுமானால் செந்தில் பாலாஜியால்தான் நாடும், மக்களும் இரண்டு வருடங்களாக இயல்பு நிலையில் இல்லை என்பதுதான் எதார்த்தம். ஊழலைப்பற்றி பேச நாட்டில் எந்த அரசியல் தலைவருக்கும் தகுதி இல்லை. பா.ஜ.க கர்நாடகாவில் தோற்றதற்கே 40 சதவீதம் ஊழல்தான் என்கிறார்கள். காங்கிரஸ் ஊழலை பற்றிபேசுவது கொடுமை. பழிவாங்குவதற்காகத்தான் விசாரணை ஏஜென்சிகளை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். கருணாநிதி கியூ பிராஞ்ச் தொடங்கியதே பழிவாங்கத்தான். இலங்கை மக்களை சித்திரவதை செய்ய சிறப்பு முகாம் என பெயர் வைத்திருக்கிறார்கள். நாட்டில் ஜனநாயகம் எங்கும் இல்லை” என்றார்.