“தமிழகம் வறண்ட பாலைவனமாக மாறாமல் தடுக்க வேண்டும்” – இபிஎஸ்
மேக்கேதாட்டு விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில், “ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், மேக்கேதாட்டுவில் அணை கட்ட நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட கர்நாடக மாநில துணை முதலமைச்சர் திரு. டி.கே. சிவக்குமாருக்கு கண்டனங்கள். காவேரி நதிநீர் என்பது டெல்டா மாவட்ட மக்களின் அடிப்படை உரிமை, காங்கிரசும்-தி.மு.க-வும் இணைந்து இலங்கையில் பல லட்சம் தமிழர்கள் மடிவதற்கு காரணமாக இருந்ததுபோல், இங்குள்ள காவேரி படுகை விவசாயிகளையும், காவேரி நீரை குடிநீர் ஆதாரமாகக் கொண்ட மக்களையும் இந்த விடியா திமுக அரசு வஞ்சிக்கப் பார்க்கிறதோ என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
ஏற்கெனவே இந்த ஆட்சியாளர்கள் கையாலாகாதவர்கள் என்பதை உணர்ந்து கொண்ட அண்டை மாநிலங்கள், தமிழகத்தை பாலைவனமாக்கும் வேலைகளில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், தமிழ் நாட்டில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ், கர்நாடகாவில் ஆட்சிக்கு வந்த ஒரே வாரத்தில் அனைத்து தடைகளையும் தகர்த்து மேக்கேதாட்டு அணையை கட்டியே தீருவோம் என்று பொங்குவதன் ரகசியம் என்ன?
மேக்கேதாட்டு விவகாரத்தில் இந்த நிர்வாகத் திறனற்ற விடியா தி.மு.க. அரசை நம்பி எந்த பிரயோஜனமும் இல்லை. மேகதாதுவின் குறுக்கே அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக மாநில காங்கிரஸ் அரசின் முயற்சியை கடுமையாகக் கண்டிப்பதோடு, தமிழகம் வறண்ட பாலைவனமாக மாறாமல் தடுக்க, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அனைத்துப் போராட்டங்களையும் முன்னெடுக்கும் என்று கர்நாடக மாநில அரசை எச்சரிக்கிறேன்” எனப் பதிவிட்டிருக்கிறார்.
சென்னையில் முதல்வர் ஸ்டாலினைச் சந்திக்கும் கெஜ்ரிவால்!
டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் இருக்கிறது. மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசுக்கும் ஆம் ஆத்மி அரசுக்குமிடையே அதிகாரப்பகிர்வு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் தொடர்ந்து மோதல் போக்கு நிலவிவருகிறது. டெல்லியில் அதிகாரிகளை நியமிக்கும் அதிகாரம் தங்களுக்கு இருப்பதாக மத்திய அரசு அவசரச் சட்டம் ஒன்றை சமீபத்தில் பிறப்பித்தது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராகவும் மாநில அரசின் அதிகாரத்தைப் பறிக்கும் வகையிலும் இருக்கும் இந்தச் சட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார் கெஜ்ரிவால். மத்திய அரசின் அவசரச் சட்டத்துக்கு எதிராக அரவிந்த் கெஜ்ரிவால் பா.ஜ.க ஆட்சியில் இல்லாத மாநில முதலமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்களைத் தொடர்ந்து சந்தித்து ஆதரவு திரட்டிவருகிறார்.
அந்த வகையில் தமிழக முதல்வர் ஸ்டாலினையும் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று சந்தித்து ஆதரவு கேட்கவிருக்கிறார். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உடன் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானும் சென்னை வருகிறார். இவர்கள் இருவரும் இன்று மாலை தமிழக முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்துப் பேசவிருக்கின்றனர். இந்தச் சந்திப்பின்போது மத்திய அரசு கொண்டுவந்த அவசரச் சட்டம் குறித்தும் மாநிலங்களவையில் இந்தச் சட்டத்துக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் அரவிந்த் கெஜ்ரிவால் தமிழக முதல்வரிடம் முன்வைக்கவிருக்கிறார். இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவால், பகவந்த் மான் ஆகியோர் சிறப்பு விமானம் மூலம் சென்னையிலிருந்து ஜார்க்கண்ட் மாநிலம் செல்கின்றனர். அங்கு நாளை மாநில முதல்வர் ஹேமந்த் சோரனைச் சந்தித்து ஆதரவு பெறவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
சென்னை திரும்பினார் ஸ்டாலின்!
சென்னையில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்த தமிழ்நாடு அரசு தீவிரமாகச் செயல்பட்டுவருகிறது. இந்த மாநாட்டில் முதலீட்டாளர்கள் பங்கேற்க அழைப்பு விடுப்பதற்காகவும், தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும் கடந்த 23-ம் தேதி ஒன்பது நாள் பயணமாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அவருடன் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, அதிகாரிகள் உடன் சென்றனர்.
சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளில், தமிழகத்தில் பல்வேறு தொழிற்சாலைகளை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், ஒன்பது நாள்கள் வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக்கொண்டு முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று இரவு 10:30 மணியளவில் தமிழகம் திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள், தி.மு.க நிர்வாகிகள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் ஸ்டாலின், “உங்கள் வாழ்த்துகளோடு நான் மேற்கொண்ட சிங்கப்பூர், ஜப்பான் பயணம் வெற்றிகரமாக அமைந்தது. தொழில் முதலீடுகளை ஈர்த்திடக்கூடிய வகையில் தொழில்துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு ஏற்கெனவே ஜப்பான் நாட்டுக்குச் சென்று ஆரம்பகட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தினார். குறைந்தபட்சம் 3,000 கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்த்திட வேண்டும் என்று திட்டமிட்டுச் செயல்பட்டோம். மொத்தம் 3,233 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டிருக்கின்றன. இதன் மூலமாக, நேரடியாகவும் மறைமுகமாகவும் 5,000-க்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். பல்வேறு துறைகளுடைய பல முன்னணி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. அடுத்தாண்டு தமிழகத்தில் நடைபெறவிருக்கும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்திருக்கிறேன்” என்றார்.