தமிழக பா.ஜ,க தலைவர் அண்ணாமலை கர்நாடக சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர்,”அமைச்சரவை மாற்றத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆவடி நாசரை நீக்கிவிட்டு, டி.ஆர்.பி.ராஜாவை அமைச்சரவைக்கு கொண்டுவந்திருக்கிறார். தி.மு.க-வின் தேர்தல் அறிக்கையில் பால் விலையை குறைப்போம் எனக் கூறியிருந்தார்கள். ஆனால் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 3 முறை பால் விலையை உயர்த்தியிருக்கிறார்கள்.
ஆரஞ் பால் பாக்கெட் விலையை ரூ.12 உயர்த்தியிருக்கிறார்கள். பால் விலை உயர்வுக்கு ஜி.எஸ்.டி உயர்வுதான் காரணம் எனத் தெரிவித்திருந்தார் ஆவடி நாசர்.
இந்த நிலையில், ஆவடி நாசரை விடுவித்ததற்கு, முதல்வர் ஸ்டாலினுக்குப் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். புதிய அமைச்சராவது தேர்தல் அறிக்கையில் கூறியதுப் போல, பால் விலையை குறைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம். அமைச்சர்களை நியமிப்பதற்கு தி.மு.க-வுக்கு என்ன நிலைப்பாடு இருக்கிறது எனத் தெரியவில்லை.
எந்தக் குடும்பம் தமிழ்நாட்டில் அதிக தொழில்களை மேற்கொண்டு வருகிறதோ, அவர்களுக்குதான் தொழிற்துறை அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என நிலைப்பாடு இருந்தால், தற்போது பதவியேற்றிருக்கும் டி.ஆர்.பி.ராஜா அதற்குப் பொருத்தமானவர். டி.ஆர்.பி.ராஜா, அவரின் தந்தை உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களின் நிறுவனங்கள் மட்டும் 20-க்கு மேல் இருக்கிறது. எல்லாத் துறையிலும் இருக்கிறார்கள். எனவே, இந்தத் துறையில் டி.ஆர்.பி.ராஜா திறம்பட செயலாற்ற முடியுமா? எனப் பார்க்கலாம். தமிழ்நாட்டில் மதுவால் மரணங்கள் அதிகமாகிக்கொண்டிருக்கிறது.
திராவிட மாடல் அரசு, மதுவை உற்பத்தி செய்வதில் தொடங்கி அதை விற்பது வரை அனைத்தையும் செய்கிறது. என் மீது இன்று டி.ஆர்.பாலு வழக்கு தொடர்ந்திருப்பதாக அறிகிறேன். அவரிடம் சில கேள்விகளை கேட்க விரும்புகிறேன். நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க எம்.பி மைத்ரேயன், டி.ஆர்.பாலு-விடம் ஒரு கேள்வியை முன்வைக்கிறார். அதில் காவேரி படுகையில் இருக்கும் ஒ.என்.ஜி.சி, கெய்ன் இரண்டு நிறுவனங்களின் காஸ்-ஸை டி.ஆர். பாலு தன்னுடையச் சொந்த நிறுவனத்துக்கு, குறைந்த விலையில் கொடுக்க வேண்டும் என நிர்பந்தித்திருக்கிறார் என்றார்.
இதற்கு பதிலளித்த டி.ஆர்.பாலு ‘நிறுவனம் மூடப்படாமல் இருப்பதற்காக ஊழியர்களின் வேண்டுகோளுக்கிணங்க, மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சரிடம் நட்பு ரீதியில் கேட்டுக்கொண்டேன்’ எனத் தெரிவித்திருக்கிறார். இந்த டி.ஆர் பாலு தான் என்மீது வழக்கு தொடர்ந்திருக்கிறார்.
அமைச்சராக இருந்தபோது தன்னுடைய அதிகாரத்தை தவறான முறையில் பயன்படுத்தியவர் இவர். மன்மோகன் சிங் 2009-ம் ஆண்டு டி.ஆர் பாலுவை என்னுடைய அமைச்சரவையில் நான் சேர்த்துக்கொள்ள மாட்டேன் எனத் தெரிவித்திருந்தார். நீங்கள் என் மீது பதியும் வழக்கின் மூலம், நான் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் அதிகமாகுமே தவிர 1 சதவிகிதம் கூட குறையாது என டி.ஆர் பாலு அவர்களிடம் தெரிவித்துக்கொள்கிறேன்.
கடந்த தி.மு.க ஆட்சியின் போது டி.ஆர் பாலு ஒரு மது ஆலை தொடங்குவதற்காக, வடசேரியில் ஒரு கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தினார். அதில் பெரும் கலாட்டா ஏற்பட்டு, பலர் காயமடைந்தனர். ஒரு பக்கம் தன்னுடைய குடும்ப வளர்ச்சி, மற்றொரு பக்கம் அவர் செய்திருக்கும் ஊழல் வெட்ட வெளிச்சமாக தெரிகிறது. ஆனால், அவர் தன் மீது எந்த குற்றமும் இல்லை எனக் கூறுவதுப் பொய்.
21.1.2022-ல் பி.டி.ஆர் பற்றி முதல்வர் ஸ்டாலின் பொது மேடையில் பேசும்போது ‘பிடிஆர் எவ்வளவு சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறார் என்பது பற்றி நான் கூறத்தேவையில்லை. பெருமையாக கூறவேண்டுமானால் மூன்று தலைமுறையாக பி.டி.ஆர் குடும்பம் இந்த மாநில வளர்ச்சிக்கு தங்களை அற்பணித்துக்கொண்டது. அமைச்சரவையில் மிகக் கடினமான துறை நிதித்துறை.
அந்த நிதித்துறையில் அமைச்சராக இருந்து, நிதிப் பற்றாக்குறையை காரணமாக கூறாமல், அனைத்து துறைகளுக்கும் நிதி வழங்க வேண்டியத் துறை. நிதியை உருவாக்கி இந்த அரசின் கொள்கை திட்டங்களை வகுப்பது என தன்னுடைய மொத்தத் திறனையும் வழங்கி வருகிறார்” என்றார். கடந்த மார்ச் மாதம்,”எவ்வளவோ துறை இருந்தாலும், கடினமான துறை நிதித்துறை. அதில் பி.டி.ஆர் தன்னுடைய திறமைகளையும், வெளிநாட்டில் தான் பெற்ற அனுபவங்களையும்கொண்டு சிறப்பாக செயலாற்றி வருகிறார்’ எனத் தெரிவித்தார். அப்படி இருக்கும் போது அவரை மாற்ற வேண்டிய காரணம் என்ன?.
அவரிடமிந்து வெளியான ஆடியோ காரணமாக அவரை நிதித்துறையிலிருந்து, தொழிற்நுட்பத்துறைக்கு மாற்றப்பட்டிருக்கிறார். இதை ஏற்றுக்கொள்ள முடியாது. தவறு அவர் செய்யவில்லை. தவறு செய்தது முதல்வரின் குடும்பம். முதல்வருக்கு சவால் விடுகிறேன். மெட்ரோ தொடர்பாக உங்களின் மீது ஊழல் குற்றச்சாடு கூறிய நான்தான், பி.டி.ஆர் ஆடியோ மூலமும் உங்கள் குடும்பம் மீது குற்றச்சாட்டினேன்.
எனவே முதல் குற்றச்சாட்டுக்கு என் மீது வழக்கு பதிந்தது போல, பி.டி.ஆர் ஆடியோ விவகாரம் தொடர்பாகவும் என்மீது இன்னொரு வழக்குப் போடுங்கள். இதன் மூலம் நீதிமன்றத்தில் முழு ஆடியோவையும் ஒப்படைக்க தயாராக இருக்கிறேன். பி.டிஆர்-ஐ பகடைகாயாக மாற்றிவிட்டு, ஆட்சி நடத்திவிடலாம் என முதல்வர் நினைத்தால் அது பகல் கனவு. இதைத் தாண்டி தி.மு.க மற்றும் அதைச் சார்ந்தவர்கள் என் மீது மானநஷ்ட வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள். எல்லோரும் சேர்ந்து தொடுத்த வழக்கில் மொத்தம் ரூ.1,461 கோடி, நான் நஷ்ட ஈடாக வழங்க வேண்டும். இந்திய வரலாற்றிலேயே ஒரு கட்சி தனி மனிதனிடம் ரூ.1,461 கோடி நஷ்ட ஈடு கேட்பது தி.மு.க-வாக தான் இருக்கும்.
ஜூலை முதல் வாரம் DMK Files part 2 வெளியிடப்படும். அதில் ஆரூத்ரா நிறுவனத்திடமிருந்து எந்த தி.மு.க அமைச்சருக்கு பணம் சென்றிருக்கிறது என அதில் தெரியும். காத்திருங்கள்… தி.மு.க அமைச்சர் அதில் சம்மந்தப்பட்டிருக்கிறார் என்ற தகவல் எனக்கு வந்த உடன், ஆரூத்ரா வழக்கு என்ன ஆனது என்பதும் எனக்கு தெரியும். கர்நாடகாவில் பா.ஜ.க 113 இடங்களை தாண்டும் என நம்புகிறோம். தமிழக பா.ஜ.க-வின் நடைபயணம் ஜூலை 2-ம் வாரம் நடைபெறும் என எதிர்பார்க்கிறோம்.
ஆளுநரின் கருத்துக்கு நாங்கள் கருத்து சொல்ல முடியாது. இங்கு கருத்து சொல்வதற்கும், எதிர் கருத்து சொல்வதற்கும் ஜனநாயக நாட்டில் எல்லோருக்கும் உரிமை இருக்கிறது. எல்லா மாநிலத்தையும் ஒரே மாதிரிதான் பா.ஜ.க பார்க்கிறது. மாநிலங்களுக்கு ஏற்றமாதிரி, மாற்றி மாற்றி பேசமாட்டோம். மாநிலக் கல்விக் கொள்கை வெளியானதும், அதில் நீங்கள் ஆய்வு செய்தால், தேசிய கல்விக் கொள்கையின் சாரம்சம் அதில் இருக்கும். உலகின் அனைத்து நல்ல விஷயங்களும் தேசிய கல்விக் கொள்கையில் இருக்கிறது.” எனத் தெரிவித்திருக்கிறார்.