தமிழ்நாடு அமைச்சராகப் பதவியேற்றார் டி.ஆர்.பி.ராஜா!
தமிழ்நாடு அமைச்சரவை மாற்றப்படவிருப்பதாகக் கடந்த சில வாரங்களாகவே பேச்சுகள் அடிபட்டன. இந்த நிலையில் முதல்வர் பரிந்துரையின்பேரில், அமைச்சரவையிலிருந்து நாசர் விடுவிக்கப்படுவதாகவும், மன்னார்குடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரான டி.ஆர்.பி.ராஜா அமைச்சரவையில் சேர்க்கப்படுவதாகவும் ஆளுநர் மாளிகையிலிருந்து கடந்த 9-ம் தேதி அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில், இன்று தமிழ்நாடு அமைச்சராகப் பதவியேற்றுக்கொண்டார் டி.ஆர்.பி.ராஜா. ஆளுநர் ரவி பதவிப்பிரமாணம், ரகசியக் காப்பு பிரமாணம் செய்துவைத்தார். ஆளுநர் ரவிக்கு பூங்கொத்து கொடுத்து, முதலமைச்சர் ஸ்டாலின் நன்றி தெரிவித்தார்.
மேலும் அமைச்சர்களின் இலாக்காக்களும் மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றன. புதியதாக பொறுப்பேற்ற அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவுக்கு தொழில்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. நிதியமைச்சராக தங்கம் தென்னரசும், தகவல் தொழில்நுட்ப அமைச்சராக பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனும் நியமனம் செய்யப்பட்டிருக்கின்றனர்.
மனோ தங்கராஜ் பால்வளத்துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் சாமிநாதனுக்கு, தமிழ் வளர்சித்துறை கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.
டி.ஆர்.பி.ராஜா அமைச்சராகப் பதவியேற்கும் நிகழ்வு… நேரலை!
டி.ஆர்.பி.ராஜா இன்று அமைச்சராகப் பதவியேற்கிறார்!
முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு பதவியேற்று இரண்டு ஆண்டுகளை நிறைவுசெய்திருக்கிறது. இதுவரை இரண்டு முறை சிறிய அளவில் அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்ட நிலையில், மூன்றாவது முறையாக அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. அதன்படி, பால்வளத்துறை அமைச்சராக இருந்த நாசர் அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டு, மன்னார்குடி எம்.எல்.ஏ-வான டி.ஆர்.பி.ராஜா அமைச்சரவையில் சேர்க்கப்பட்டார்.
இன்று காலை 10:30 மணிக்கு கிண்டி ராஜ் பவனில் இருக்கும் அரங்கில் டி.ஆர்.பி.ராஜா அமைச்சராகப் பதவியேற்கிறார். அவருக்கு ஆளுநர் ரவி பதவிப்பிரமாணம் செய்துவைக்கிறார். அதன் பிறகு ராஜாவுக்கான இலாகா குறித்த அறிவிப்பு வெளியாகும். மேலும், சில அமைச்சர்களின் இலாக்காவில் மாற்றங்கள் இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.