உலகப்புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் எழுந்தருளி லட்சக்கணக்கான மக்களுக்கு ஆசி வழங்கிவிட்டுத் தன் இருப்பிடமான அழகர்மலைக்கு வந்து சேர்ந்தார் கள்ளழகர்.
மதுரையில் மீனாட்சியம்மன் கோயிலில் கடந்த 23-ம் தேதி தொடங்கி மே 3-ம் தேதிவரை சித்திரைத்திருவிழா சிறப்பாக நடந்து நிறைவடைந்தது. திருவிழாவின் இன்னொரு பகுதியாக கடந்த 1-ம் தேதி அழகர்மலையில் திருவீதி உலாவுடன் தொடங்கிய சித்திரைத்திருவிழாவில் சுந்தரராஜப்பெருமாள் கள்ளழகர் திருக்கோலத்தில் மதுரைக்குப் புறப்பட்டார்.
வருகின்ற வழியில் பல மண்டகப்படிகளில் எழுந்தருளி அருள்பாலித்தவருக்குக் கடந்த 4-ம் தேதி மூன்றுமாவடியில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு எதிர்சேவை நடத்தி வரவேற்றனர்.
கடந்த 5-ம் தேதி அதிகாலை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோயிலில் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலைய அணிந்துகொண்டு கருப்பணசுவாமி கோயிலில் உத்தரவுபெற்று ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளி பச்சைப்பட்டு உடுத்தி லட்சக்கணக்கான மக்கள் சூழ்ந்திருக்க வைகை ஆற்றில் இறங்கினார் அழகர்.
அதன் பின்பு அங்கு மக்களுக்கு அருள்பாலித்த கள்ளழகர் அங்கிருந்து ராமராயர் மண்டபத்துக்குச் சென்று பின்பு வண்டியூர் வீரராகவப்பெருமாள் கோயிலில் தங்கியவர், மே 6-ம் தேதி தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளி மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார். அன்று இரவு முழுவதும் ராமராயர் மண்டபத்தில் தசாவதார நிகழ்ச்சி நடந்தது.
பின்பு அங்கிருந்து புறப்பட்டு தல்லாகுளம் சேதுபதி மண்டபத்தில் தங்கி அதிகாலை பூப்பல்லாக்கில் எழுந்தருளிப் பின்பு கருப்பணசாமி கோயில் முன் வையாழியாகி தல்லாகுளம் பெருமாள் கோயிலுக்குக் காலையில் சென்றார். அங்கிருந்து வரிசையாக மண்டகப்படிகளில் எழுந்தருளி நேற்று இரவு 7 மணிக்கு மூன்று மாவடிக்கு சென்றடைந்தவர், இரவு கடச்சனேந்தல், சுந்தராஜன்பட்டி, அப்பன் திருப்பதி வழியாகச் சென்றார். இன்று அதிகாலை அங்கிருந்து புறப்பட்டு அழகர் கோயிலுக்கு வந்து சேர்ந்தார்.
அழகர் கோயில் கோட்டை வாசலில் திருஷ்டி பூசணிக்காய் உடைத்தும், தீப ஆராதனை காட்டப்பட்டும் கள்ளழகர் வரவேற்கப்பட்டார். இதைக்காண ஏராளமான மக்கள் திரண்டிருந்தார்கள். நாளை கள்ளழகருக்கு உற்சவ சாந்தி பூஜை நடைபெறுவதுடன் சித்திரைத் திருவிழா நிறைவுபெறுகிறது.