மகாத்மா காந்தியின் பேரன் அருண் காந்தி காலமானார்!
மகாத்மா காந்தியின் பேரன் அருண் காந்தி மகாராஷ்டிராவில் உள்ள கோலாப்பூரில் இன்று உடல்நலக்குறைவால் காலமானார். 89 வயதான இவர் சிறந்த எழுத்தாளர். இவரின் இறுதிச்சடங்கு இன்று கோலாப்பூரில் நடைபெறும் என்று அவரின் மகன் துஷார் காந்தி தெரிவித்தார்.
`குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 2,000 ரூபாய்’ – காங்கிரஸ்
கர்நாடகத் தேர்தல் இம்மாதம் பத்தாம் தேதி நடைபெறவிருக்கிற நிலையில், தேர்தல் பிரசாரங்கள் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. கட்சிகள் வாக்குறுதிகளாக தேர்தல் அறிக்கைகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறார்கள். நேற்று ஆளும் பா.ஜ.க தரப்பு தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியும் தற்போது தேர்தல் அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதில் தமிழகத்தைப் பின்பற்றி குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 2,000 ரூபாய் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், பெண்களுக்கு அரசுப் பேருந்தில் இலவசப் பயணத்திட்டம், முதல் 200 யூனிட் மின்சாரம் இலவசம், வேலையில்லா பட்டதாரிக்கு இரண்டு ஆண்டுகளுக்கு மாதம் ரூ.3,000 வழங்கப்படும் போன்ற வாக்குறுதிகள் அளிக்கப்பட்டிருக்கின்றன.