தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி!
தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியிருக்கிறது. முன்னதாக சென்னை உயர் நீதிமன்றம் தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த அனுமதி வழங்கியதை எதிர்த்து, தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையின் முடிவில் இன்று உச்ச நீதிமன்றம் உயர் நீதிமன்ற தீர்ப்பை உறுதிசெய்து தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்தது.
வயநாடு தொகுதிக்குச் செல்லும் ராகுல் காந்தி!
மோடி என்ற பெயர் தொடர்பாக அவதூறாகப் பேசிய வழக்கில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக சூரத் நீதிமன்றம் இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது. இதன் காரணமாக அவர் தனது எம்.பி பதவியை இழந்தார். ராகுல் காந்தி எம்.பி பதவிப் பறிப்புக்கு எதிராக காங்கிரஸ் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறது. நாடாளுமன்றத்திலும் இந்த விவகாரம் எதிரொலித்தது, அதன் காரணமாக மாநிலங்களவை, மக்களவை இரண்டும் தொடர்ந்து முடங்கிய காட்சிகளையும் பார்த்தோம்
இந்த நிலையில் தனது எம்.பி பதவி தகுதிநீக்கம் செய்யப்பட்ட பிறகு முதன்முறையாக கேரள மாநிலம், வயநாடு தொகுதிக்கு பயணம் மேற்கொள்ளவிருக்கிறார் ராகுல் காந்தி. இந்தப் பயணத்தின்போது பொதுக்கூட்டம் ஒன்றில் கட்சி தொண்டர்களிடமும், பொதுமக்களிடையேயும் ராகுல் காந்தி உரையாறறுவதற்குத் திட்டமிட்டிருக்கிறார். மேலும், சாலை வழியாக ஒரு பேரணி செல்லவும் திட்டமிடப்பட்டிருக்கிறது. எம்.பி பதவிப் பறிப்புக்கு பிறகு முதன்முறையாக, தான் எம்.பி-யாக இருந்த வயநாடு தொகுதிக்கு ராகுல் காந்தி செல்லவிருப்பதால் அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.