குடிமைப்பணித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுடன், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துரையாடிய `எண்ணித் துணிக’ நிகழ்ச்சி சென்னை கிண்டியிலுள்ள ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெற்றது. இதில் குடிமைப்பணித் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். இதில் மாணவர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதிலளித்தார்.

ஆளுநர் ஆர்.என்.ரவி

அப்போது, “மாநில சட்டம் இயற்றும் குழுவில் ஆளுநர் முதன்மையானவர். சட்டப்பேரவை, ஆளுநருக்கு அடுத்த இடத்தில் இருக்கிறது. எனவே, சட்டப்பேரவையால் ஒரு மசோதா நிறைவேற்றப்பட்டால், அது சட்டம் இயற்றும் குழுவால் நிறைவேற்றப்பட்டது என்று பொருளாகாது. ஆளுநர் அதற்கு ஒப்புதல் அளித்தால்தான் சட்டமாகும். ஒரு மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பது, நிலுவையில் வைப்பது, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்புவது ஆகிய மூன்றில் ஆளுநர் ஒன்றைத் தேர்வுசெய்ய அரசியலமைப்பு அதிகாரம் கொடுக்கிறது” என ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார்.

இந்த நிலையில் ஆளுநரின் இத்தகைய பேச்சுக்கு, தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “பொது மேடைகளில் சர்ச்சைக்குரிய அரசியல், சமூகக் கருத்துகளைப் பேசி மாநில மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்திவந்த ஆளுநர் ஆர்.என்.ரவி, தற்போது சட்டமன்ற நடைமுறைகள் தொடர்பாக உண்மைக்குப் புறம்பான கருத்துகளை, சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில்  தெரிவித்து, நிர்வாக ஒழுங்கைக் கெடுக்கும் செயல்களில் ஈடுபட்டுவருகிறார். தனது பதவிப் பிரமாணத்துக்கு முரணான வகையிலும், மாநில நலனுக்கு எதிராகவும் தொடர்ந்து செயல்பட்டுவரும் தமிழ்நாடு ஆளுநருக்கு எனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

முதல்வர் ஸ்டாலின்

கோடிக்கணக்கான மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் சிந்தனையில் உருவான சட்டங்கள், அவசரச் சட்டங்கள், சட்டத் திருத்தங்கள் ஆகியவற்றுக்கு உடனடி ஒப்புதல் தராமல் காலம் தாழ்த்தி, தனது நிர்வாகவியல் கடமைகளிலிருந்து தவறியும், தனது கடமைகளிலிருந்து தப்பித்தும், நழுவியும் வருவதை ஆளுநர் ஆர்.என்.ரவி வழக்கமாக வைத்திருக்கிறார். அதற்கு முறையான காரணத்தையும் அரசுக்குத் தெரிவிப்பதில்லை. இப்படி 14 கோப்புகள் அவரால் முடக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. இவை ஆளுநரின் கடமை தவறுதல் மட்டுமல்ல, செயல்படாத முடக்குவாதச் செயலாகவே அமைந்திருக்கிறது.

தொடர்ந்து அழுத்தம் கொடுத்தால், ஏதாவது ஒப்புக்கு ஒரு கேள்வியைக் கேட்டு அரசுக்கு அனுப்பிவைத்துவிட்டு, தனது கடமை முடிந்ததாக இருக்கிறார் ஆளுநர். உதாரணமாக, எளிய மனிதர்களின் வாழ்க்கையைப் பாதுகாக்கும் வகையில், சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம் என்பது மிக மிக அவசர, அவசிய நோக்கத்தோடு இயற்றப்பட்டது. முதலில் ஏதோ உப்புச்சப்பற்ற கேள்வியைக் கேட்டார். பின்னர், ‘இந்தச் சட்டம் இயற்றும் உரிமையே மாநில அரசுக்கு இல்லை’ என்றார். ‘மாநில அரசுக்கே உரிமை உண்டு’ என்று ஒன்றிய அமைச்சர்களே சொன்ன பிறகும் இங்கிருக்கும் ஆளுநர் அதை ஏற்கவில்லை. ஏனெனில், ஏற்க மனமில்லை.

ஆளுநர் ஆர்.என்.ரவி

இத்தனை உயிர்கள் பலியான பிறகும் கரையாததாக ஆளுநரின் மனம் இருப்பது அதிர்ச்சியையே தருகிறது. சட்டம் அறிந்தவர்போல் கருத்துகளைத் தெரிவித்துவரும் ஆளுநருக்கு, அரசியலமைப்புச் சட்டத்தின்படி, பண மசோதாவைத் திரும்ப அனுப்ப அதிகாரம் கிடையாது. ஆனால், 17-10-2022 அன்று ஆளுநர் அவர்களாலேயே பரிந்துரைக்கப்பட்டு, சட்டமன்றத்தால் ஏற்பளிக்கப்பட்டு, பேரவைத் தலைவரால் பண மசோதா என்று 20-10-2022 அன்று சான்றளிக்கப்பட்ட ஆன்லைன் ரம்மி மசோதாவை, அவர் 6-3-2023 அன்று திருப்பி அனுப்பியது அரசியலமைப்புச் சட்டத்தை மீறியது என்பதை அவர் தெரிந்தே செய்திருக்கிறாரா என்பதை பொதுமக்களின் கருத்துக்கே விட்டுவிடுகிறேன்.

இந்த நிலையில், இன்றைய தினம் ஆளுநர் தெரிவித்திருக்கும் கருத்து, அவர் வகிக்கும் பதவிக்கு அழகும் அல்ல. அவர் அப்படிப் பேசிய இடம் முறையான இடமும் அல்ல. `கிடப்பில் இருந்தாலே நிராகரிக்கப்பட்டதாகவே அர்த்தம். நீண்ட நாள்களாக கிடப்பில் வைக்கப்பட்டிருக்கும் மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டதாகவே அர்த்தம். வார்த்தை அலங்காரத்துக்காக அதை `நிறுத்தி வைப்பு’ என்கிறோம்’ என்று பேசியிருக்கிறார் ஆளுநர். மாணவர்களைக் கூட்டி வைத்துக்கொண்டு அவர்கள் மத்தியில் இப்படிப் பேசியிருக்கிறார். ரகசியக் காப்பு உறுதிமொழி எடுத்திருக்கும் ஒருவர், நிர்வாகரீதியாக தான் எடுக்கும் நிலைப்பாடு குறித்து பொதுவெளியில் இப்படி அலட்சியமாகக் கருத்துகளை வெளிப்படுத்துவது அரசியல் சட்ட வரையறைகளை மீறிய செயல் ஆகும்.

முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி

`Shamsher Singh Vs State of Punjab’ (1975) என்ற வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம்,  `The constitutional conclusion is that the Governor is but a shorthand expression for the State Government and the President is an abbreviation for the Central Government’ என்று சொன்னது. அதாவது, மாநில அரசின் சுருக்கெழுத்துதான் ஆளுநர் என்று சுருக்கமாகச் சொன்னார்கள். அதை மறந்துவிட்டு, ‘தி கிரேட் டிக்டேட்டராக’ தன்னை ஆளுநர் நினைத்துக்கொள்ள வேண்டாம். அரசியலமைப்புச் சட்டத்தின்படி, பண மசோதா தவிர, பிற வகை மசோதாக்களை ஆளுநர், அரசுக்குத் திருப்பி அனுப்பலாம். சட்டமன்றம், மீண்டும் அந்த மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பினால், அதை ஆளுநர் நிராகரிக்க முடியாது.  எனவே, ஆளுநர் கேட்ட விளக்கங்களைக் கொடுத்து, மீண்டும் நிறைவேற்றி அனுப்பிவைத்த பிறகும் ஒப்புதல் வழங்காமல் இருப்பது சட்டமுறையும் ஆகாது. சட்டம் அறிந்தவர் முறையும் ஆகாது.

இதை நமது மாநில நிர்வாகத்தினை முடக்கும் செயலாகவே எண்ண வேண்டியிருக்கிறது. எதையும் துணிச்சலாக ஏற்கவோ, எதிர்க்கவோ செய்யாமல் கிடப்பில் போடுவது என்பது அரசியல் சட்டம் அங்கீகரித்த பதவியில் இருப்பவருக்கு அழகல்ல. அதையும் தாண்டி, அதைச் சட்டபூர்வமற்ற பொதுவெளியில் பகிர்ந்துகொள்வதோடு, நியாயப்படுத்த முயல்வது என்பது மிக மிக மோசமான முன்னுதாரணம். தான் சொன்ன கருத்தைத் திரும்பப் பெறுவதே ஆளுநர் எடுத்துக்கொண்ட பதவிப் பிரமாணத்துக்கு உண்மையாக நடந்துகொள்வது ஆகும்.

முதல்வர் ஸ்டாலின்

ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் குரலைப் பிரதிபலிக்கும் தமிழ்நாடு சட்டமன்றத்தின் மாண்பைக் குறைக்கும் வகையில் ஆளுநர் பேசிவருவது அவருக்கும் அழகல்ல, அவர் வகிக்கும் பதவிக்கும் அழகல்ல.  இதை உணர்ந்து, அவர் தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காகவும், அரசியலமைப்புச் சட்டத்தில் ஆளுநர் பதவிக்கு அளிக்கப்பட்டிருக்கும் கடமைகளை முறையாக நிறைவேற்றிடும் வகையிலும் அவர் செயல்படுவார் என நான் நம்புகிறேன்” என ஸ்டாலின் குறிப்பிட்டிருக்கிறார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.