வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்
தமிழர்கள் ரசனை மிக்கவர்கள். தமிழனின் வாழ்வியல் முறையில் இருந்து பிரிக்க முடியாத ஒரு உணவு இட்லி.
அரிசியும், உளுந்தும் ஜோடி சேர கலவையாக நீராவியில் வெந்து தட்டில் மலர்வது இட்லி.
இட்லி… தேவலோக அமிர்தம்.
சுடச்சுட ஆவி பறக்கும் இட்லி…
தொட்டுக்கொள்ள… வெள்ளை சட்னி, கார சட்னி, புதினா சட்னி, மல்லி சட்னி,வெங்காய சட்னி, வேர்க்கடலை சட்னி, பூண்டு சட்னி… இப்படி எதனுடன்தொட்டுசாப்பிட்டாலும் சுவைதான்.ஆனால் சூடான இட்லியுடன் கொதிக்க கொதிக்க சாம்பார்ஊற்றிசாப்பிட்டால் சுவையோ சுவை.
உலக நாயகன் கமலுடன்…ஜெயசுதா,மாதவி, ஶ்ரீப்ரியா,சிம்ரன், ராதா,அம்பிகா,ரேவதி, ராதிகா… இப்படிப் பலர் ஜோடி சேர்ந்தாலும் நம் மனதில் நீங்கா இடம் பெறுவது கமலும், ஸ்ரீதேவியும் தான். அதுபோல்தான் இட்லியின் சரியானஜோடி ஹோட்டல் சாம்பார் தான்.
சுடச் சுட இட்லி அதன் மேல் சூடான நெய் அதன்மேல் கொதிக்க கொதிக்க சாம்பாரை விட்டு சாப்பிட.. மனசுக்குள்ள எவ்ளோ பிரச்சனை இருந்தாலும் ‘நம்மால் முடியும்’ (பிரச்சினைக்கு பிரச்சினை கொடுப்போம்ல்ல!) பிரச்சனையை சரி பண்ணநம்மை விட சிறந்த நபர் யாருமில்லை.. என்று ஒரு தன்னம்பிக்கை வரும் பாருங்க… அது வேற லெவல்!
சூடான இட்லி சப்புக் கொட்ட வைக்கும் சத்தான சாம்பார். பிறந்த குழந்தையின் மழலை சிரிப்பை போல் அற்புதமானது. சாம்பாருக்கு மிஞ்சிய ஜாம்பவான் எதுவுமில்லை. அதுவும் மணக்க மணக்க ஹோட்டல் சாம்பார் வைத்தால் கூடுதலாக இரண்டு இட்லி உள்ளே போகும். உடல்நிலை சரியில்லையா? கவலை வேண்டாம். இரண்டு இட்லி அதன்மேல் சூடானசாம்பார் ஊற்றிக்கொடுக்க நோய் போயே போயிந்தி!
இவ்வளவு சொல்லிட்டு ஹோட்டல் சாம்பார் ரெசிபி சொல்லாமல் இருந்தால் எப்படி? (என்மேல் கோபித்துக் கொள்ள மாட்டீர்கள்?!) இதோ ஹோட்டல் சாம்பார் செய்ய களத்தில் இறங்குவோம்!
தேவையான பொருட்கள்:
துவரம்பருப்பு _ஒரு கப்
பெரிய வெங்காயம்_ 2
தக்காளி_ 4
சாம்பார் காய் ஏதேனும் ஒன்று அல்லது கலவையாக_ 150 கிராம்
புளி _சிறிய எலுமிச்சை அளவு
மஞ்சள்தூள் _கால் டீஸ்பூன்
கறிவேப்பிலை_ சிறிது
மல்லித்தழை _சிறிதளவு
உப்பு _தேவையான அளவு
பெருங்காயம் _அரை டீஸ்பூன்.
வெல்லம் _சிறு துண்டு
வறுத்துப் பொடிக்க:
காய்ந்த மிளகாய்_ 6
தனியா_ ஒன்றரை டேபிள்ஸ்பூன் கடலைப்பருப்பு_ ஒரு டேபிள்ஸ்பூன்
கடுகு_ அரை டீஸ்பூன்
வெந்தயம் _அரை டீஸ்பூன்
மிளகு_ அரை டீஸ்பூன்
சீரகம்_ ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை_ கைப்பிடி அளவு
எண்ணெய்_ 2 டீஸ்பூன்.
தாளிக்க:
கடுகு உளுத்தம்பருப்பு _தலா அரை டீஸ்பூன்
எண்ணெய்_ 2 டேபிள்ஸ்பூன்.
செய்முறை:
பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து வேகவிடவும். காய்கறியை சற்று பெரிய துண்டுகளாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பொடிக்கக் கொடுத்துள்ள பொருட்களை சிறு தீயில் சிவக்க வறுத்து நன்கு பொடித்துக் கொள்ளவும்.
2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் காயவைத்து கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து வெங்காயம் சேர்க்கவும். வெங்காயம் சற்று வதங்கியதும் காய்கறி சேர்க்கவும். காய்கறி நன்கு வதங்கியதும் தக்காளி, உப்பு சேர்த்து மேலும் சிறிது நேரம் வதக்கவும். புளியை ஒன்றரை கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டி அதில் சேர்க்கவும்.
பச்சை வாசனை போக கொதித்ததும், பொடியை தூவி கிளறி பருப்பையும் கரைத்து சேர்க்கவும். 5 நிமிடம் கொதித்ததும் கறிவேப்பிலை பொடியாக நறுக்கிய மல்லித்தழை சேர்க்கவும். இறக்கும் தருவாயில் ஒரு துண்டு வெல்லம் சேர்க்கவும். மணக்க மணக்க ஹோட்டல் சாம்பார் ரெடி.
பருப்புடன் ஒரு சிறு துண்டு மஞ்சள் பூசணியை சேர்த்து வேக விட்டால் மணம் இன்னும் சூப்பராக இருக்கும்.
ஒரு அழகிய கிண்ணத்தில் சூடான இட்லியை வைத்து அதன்மேல் உருக்கிய பசு நெய்விட்டுஅதன்மேல் கொதிக்க கொதிக்க ஹோட்டல் சாம்பார் விட்டு சாப்பிட .. மனதில் ஊறும் உற்சாகம். பூலோக சொர்க்கம் .
பி.கு ( உங்கள் வீட்டில் ஆவி பறக்கும் இட்லியின் மேல் நெய்+ கொதிக்க கொதிக்க சாம்பார் ஊற்றி உங்கள் இணையரிடம் நீட்டிப்பாருங்களேன்.அழகிய ரொமான்ஸ் ரோஜா பூக்கும்.
என்றென்றும் அன்புடன்
ஆதிரைவேணுகோபால்
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!
ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.