கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில், பெண்களைப் போல ஆண்கள் வேடமணிந்து வழிபாடு நடத்தியது, அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது.
கேரள மாநிலம், கொல்லம் மாவட்டம் கோட்டங்குளங்கர ஸ்ரீதேவி கோயிலில், பாரம்பர்யமாக ஆண்டுதோறும் `சமய விளக்குத் திருவிழா’ நடைபெற்று வருகிறது.
சமய விளக்குத் திருவிழா, மீனம் எனும் மலையாள மாதத்தில் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் கொண்டாடப்படுகிறது. சரியாக மார்ச் மாதத்தின் இரண்டாவது பாதியில் இந்தத் திருவிழா நடைபெறும்.
இந்தத் திருவிழாவில் ஆண்கள் அனைவரும் பெண்களைப் போல அழகாக உடையணிந்து, அலங்காரம் செய்து கொண்டு, கைகளில் விளக்கேந்தி கோயிலைச் சுற்றி வருவர். கேரளாவில் மட்டுமல்லாமல், பல மாநிலங்களைச் சேர்ந்த ஆண்களும் தனித்துவமான இந்தத் திருவிழாவில் பங்கேற்பர்.
பொதுவாகவே பெண்களின் ஒப்பனையையும், ஆடைகளையும் கேலிக்குரிய பொருளாகப் பார்க்கும் சமயத்தில், இது போன்ற திருவிழாக்களில் கலந்து கொள்ளும் ஆண்கள் மீது பெண்களுக்கு மரியாதை அதிகரிப்பதாகக் கூறப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல், கேரளாவின் இத்திருவிழாவில், திருநங்கைகளின் கூட்டமும் அதிகரித்துள்ளது. திருநங்கைகளின் அடையாளத்தைக் கொண்டாடும் ஓரிடமாக இந்தத் திருவிழா அமைந்துள்ளது எனவும் தெரிவிக்கின்றனர்.
இந்தத் திருவிழாவில் பெண் வேடமிட்டுப் பங்கேற்கும் ஆண்களுக்கு, போட்டிகள் நடத்தி பரிசுகளும் வழங்கப்படுகின்றன. இந்நிலையில், இம்முறை நடத்தப்பட்ட திருவிழாவில் மேக் அப் போட்டியில் முதல் பரிசு பெற்ற பெண் வேடமிட்ட ஆணின் புகைப்படம் வைரலாகி வருகிறது.
பார்ப்பதற்கு அச்சு அசலாகப் பெண் போல இருக்கும் பலரின் புகைப்பட வீடியோக்களும் சமூக வலைத்தளத்தில் கமென்ட்டுகளை குவித்து வருகின்றன. அட, இதெல்லாம் ஆண்களா? நம்பவே முடியலையே என்பது போல பலரும் வாயடைத்து கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.