மேற்கு வங்காளத்திற்கு இரண்டு நாள் பயணமாக சென்றிருக்கும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வரவேற்றார். மேலும், குடியரசுத் தலைவருக்கு துர்கா தேவி சிலையை பரிசளித்தார்.
அதைத் தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவரை தங்கப் பெண்மணி எனக் குறிப்பிட்டு பேசிய மம்தா, “இந்தியா பல சமூகங்கள், சாதிகள் மற்றும் சமயங்களைச் சேர்ந்த மக்களின் பெருமைமிக்க பாரம்பரியமாக இருக்கிறது. நீங்கள்தான் தற்போது இந்த நாட்டின் அரசியலமைப்பின் தலைவர். அதனால், இந்தியாவை பேரழிவில் இருந்து காப்பாற்ற நாட்டின் அரசியலமைப்பையும், நாட்டின் ஏழை மக்களின் அரசியலமைப்பு உரிமைகளையும் பாதுகாக்க உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன். நாட்டை பேரழிவில் இருந்து பாதுகாக்க நாங்கள் உங்களிடம் வேண்டுகோள் விடுக்கிறோம்” எனத் தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து பேசிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, “வங்காள மக்கள் பண்பட்டவர்கள், முற்போக்கானவர்கள். வங்காள நிலம் ஒருபுறம் அழியாத புரட்சியாளர்களையும் மறுபுறம் முக்கிய விஞ்ஞானிகளையும் பெற்றெடுத்திருக்கிறது. அரசியல் முதல் அனைத்து கலை வடிவங்கள் வரை, வங்காளத்தின் குறிப்பிடத்தக்க முன்னோடிகள் பல துறைகளில் புதிய வழிமுறைகளை கண்டுபிடித்துள்ளனர். இத்தகைய முயற்சிகள் நமது சுதந்திரப் போராட்டத்தின் இலட்சியங்களுக்கு வலு சேர்க்கின்றன.
குறிப்பாக நமது பழங்குடி சகோதர சகோதரிகளின் தன்னம்பிக்கைக்கு ஆதாரமாக இருக்கின்றன. பிரிட்டிஷ் காலனித்துவ அதிகாரத்தையும் ஊழல் நிறைந்த ஜமீன்தாரி அமைப்பையும் அகற்றுவதற்காக கிளர்ச்சியை முன்னெடுத்த தலைவர்களின் நினைவாக, கொல்கத்தாவின் ஒரு பகுதிக்கு ‘சிடோ-கன்ஹு-தஹார்’ என்று பெயரிடப்பட்டிருப்பதைக் குறிப்பிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்” எனத் தெரிவித்திருக்கிறார்.