ராகுல் காந்தி எம்.பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து, காங்கிரஸ் கட்சியினர் இன்று நாடு தழுவிய சத்தியாகிரகப் போராட்டம் நடத்திவருகின்றனர். அந்த வகையில், டெல்லி ராஜ்காட்டில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, மூத்த தலைவர்கள் கே.சி.வேணுகோபால், ப.சிதம்பரம், சல்மான் குர்ஷித், ஜெய்ராம் ரமேஷ், முகுல் வாஸ்னிக், பவன் குமார் பன்சால், சக்திசிங் கோஹில், பிரதிபா சிங், மணீஷ் சத்ரத் உள்ளிட்ட கட்சியின் முக்கியத் தலைவர்கள், காலை 10 மணி முதல் சத்தியாகிரகப் போராட்டம் நடத்திவருகின்றனர்.

ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே

இந்தப் போராட்டத்துக்குச் சட்டம் – ஒழுங்கு மற்றும் போக்குவரத்து காரணங்களுக்காக அனுமதி மறுக்கப்பட்ட போதிலும், ஏராளமான கட்சித் தொண்டர்கள் இதில் பங்கேற்றனர். இதில் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “ராகுல் காந்திக்கு ஆதரவாக நாங்கள் அவருடன் நிற்கிறோம். அதே சமயம் இது போன்ற நூற்றுக்கணக்கான சத்தியாகிரகப் போராட்டங்கள் நாடு முழுவதும் நடத்தப்படவிருக்கின்றன. யாராவது எங்களை நசுக்க முயன்றால், அதற்குத் தக்க பதிலடி கொடுக்க, ஜனநாயகத்தைக் காப்பாற்ற எந்த தியாகத்தையும் செய்யத் தயாராக இருக்கிறோம். இந்த நாட்டு மக்களுக்காக ராகுல் காந்தி போராடுகிறார்.

கர்நாடகாவில் தேர்தல் நேரத்தில் பேசியதற்கு குஜராத்தின் சூரத்தில் வழக்கு தொடர்ந்தனர். அப்போது ராகுல் காந்திக்கு எதிராக எந்த அவதூறு வழக்கும் இல்லை. மேலும், எதிர்க்கட்சியில் வலிமையான ராகுல் காந்தி இருப்பதால், அவரது வாயை அடைக்க முயல்கிறார்கள். ஒரு நபர் பாரத் ஜோடோ யாத்ரா மூலம் கோடிக்கணக்கான மக்களை இணைத்தார். அதனால் அவர்கள் பயப்படுகிறார்கள். இந்த நாட்டில் யாரும் பேசக் கூடாது என்று பிரதமர் மோடி எப்போதும் விரும்புகிறார். ஆனால், ராகுல் காந்தி ‘நான் யாருக்கும் பயப்பட மாட்டேன். உண்மையுடன் நடப்பேன். காந்திஜியின் வழியில் நடப்பேன்’ என்று கூறியிருக்கிறார்.

அதானி – மோடி

ஓ.பி.சி-கள் எனக் குறிப்பிடப்படும் மெகுல் சோக்சியும், லலித் மோடியும், நாட்டின் பணத்தைக் கொள்ளையடித்துவிட்டு ஓடிவிட்டனர். தப்பியோடியவர்கள் குறித்து கேள்வி எழுப்பினால் உங்களுக்கு ஏன் வலிக்கிறது…. நாட்டைக் காக்கப் பாடுபடும் அவரைச் சிறைக்கு அனுப்புகிறீர்கள், நாட்டை கொள்ளையடிப்பவரை வெளிநாடுகளுக்கு அனுப்புகிறீர்கள். அனைத்து அரசியல் கட்சிகளும் ராகுல் காந்தியுடன் இணைந்து நிற்பதில் மகிழ்ச்சியடைகிறேன். அவர்களுக்கு 100 முறை நன்றி கூறுகிறேன்” என்றார்.

ராகுல் காந்தியின் சகோதரியும், உத்தரப்பிரதேச காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளருமான பிரியங்கா காந்தி பேசுகையில், “காந்தி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்ததற்காக வெட்கப்பட வேண்டுமா?

உயிர்த் தியாகம் செய்த எங்கள் குடும்ப உறுப்பினர்களின் ரத்தம் நம் நாட்டு மண்ணில் இருக்கிறது. அவர்களின் ரத்தம் நமது நாட்டின் ஜனநாயகத்தை வளர்த்திருக்கிறது. ஹார்வர்டு, கேம்பிரிட்ஜ் ஆகிய இரண்டு உயர் பல்கலைக்கழகங்களில் தனது கல்வியை முடித்திருந்தும் ராகுல் காந்தியை ஒரு ‘பப்பு’ என்று சித்திரிக்கிறார்கள். சமீபத்தில் ராகுல் காந்தியால் வெற்றிகரமாக முடிக்கப்பட்ட பாரத் ஜோடோ யாத்ராவில் மக்கள் கூட்டம் அவர் உண்மையில் ஒரு ‘பப்பு’ அல்ல என்பதைக் காவி கட்சிக்கு உணர்த்தியிருக்கிறது. பா.ஜ.க அமைச்சர்கள், நிர்வாகிகள் எங்கள் குடும்பத்தை பலமுறை அவமதித்திருக்கின்றனர். ஆனால், நாங்கள் அமைதியாக இருந்தோம். எங்கள் தந்தையை, தாயை அவதூறாகப் பேசியிருக்கின்றனர். அவர்கள் மீதெல்லாம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.