முதுகுப்பகுதியில் காயம் ஏற்பட்டதால் அவதிப்பட்டுவரும் இந்திய மிடில் ஆர்டர் பேட்டரான ஸ்ரேயாஸ் ஐயருக்கு தற்போது அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் தொடரின் இறுதி டெஸ்ட் போட்டியில் பேட்டிங் செய்யவே வராமல் தவிர்த்திருந்தார் ஸ்ரேயாஸ் ஐயர். ஏற்கனவே முதுகுப்பகுதியில் காயம் ஏற்பட்டதால் இந்திய அணிக்குள் விளையாடாமல் இருந்த ஸ்ரேயாஸ், ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் தான் மீண்டும் இந்திய அணிக்குள் நுழைந்தார். அவருக்கு பதிலாக இந்திய அணிக்குள் களமிறக்கப்பட்ட சூர்யகுமார் யாதவ் முதல் டெஸ்ட் போட்டிக்கு பிறகு உட்கார வைக்கப்பட்டு, ஸ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
சூர்யகுமார் அமர வைக்கப்பட்டதற்கு கருத்து தெரிவித்திருந்த தலைமை பயிற்சியாளர் டிராவிட், அணியில் உங்களுடைய நேரடியான பேட்ஸ்மேன் காயத்திலிருந்து மீண்டும் உள்ளே வரும்போது, அந்த இடத்தில் விளையாடும் வீரர் கட்டாயம் விட்டுக்கொடுத்து தான் ஆகவேண்டும் என்று தெரிவித்திருந்தார். ஸ்ரேயாஸ் ஐயரும் தன்னுடைய முதுகுப்பகுதி காயம் இல்லை என்று கூறிவிட்டு தான் அணிக்குள் வந்தார். ஆனால் தற்போது மீண்டும் காயத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஸ்ரேயாஸ் அறுவை சிகிச்சை செய்யவிருப்பதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பும்ராவை தொடர்ந்து ஸ்ரேயாஸ் ஐயர்!
கடந்த 2022ஆம் ஆண்டு இறுதியில் செப்டம்பர் மாதம் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 போட்டியில், காயத்திலிருந்து குணமடைந்து விட்டதாக அணிக்குள் எடுக்கப்பட்டார் ஜஸ்பிரிட் பும்ரா. ஆனால் விளையாடிய ஒரு போட்டிக்கு பின்னர் மீண்டும் காயம் குணமடையாததால் வெளியேற்றப்பட்டு, இன்றுவரை அணிக்குள் திரும்பாமல் இருக்கிறார். அதேபோல் தான் தற்போது ஸ்ரேயாஸ் ஐயரும் முழுமையாக குணமடைந்து விட்டதாக அணிக்குள் எடுக்கப்பட்டு, மீண்டும் காயம் குணமடையவில்லை என அறுவை சிகிச்சை செய்யப்போவதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. வீரர்கள் முழுமையாக தயாராவதற்கு முன்னதாகவே அணிக்குள் எடுக்கப்படும் செயல் அந்தந்த தொடரையும், இந்தியாவின் எதிர்காலத்தையும் நிச்சயமாக பாதிக்கும் செயலாகவே அமைந்துவிடுகிறது.
கடந்த 2022ஆம் ஆண்டு இறுதியில் செப்டம்பர் மாதம் பும்ரா அணிக்குள் வந்தபோது இளம் பந்துவீச்சாளர்களுக்கான வாய்ப்பு மறுக்கப்பட்டு, பும்ரா நேரடியாக அணிக்குள் இணைத்துக்கொள்ளப்பட்டார். பின்னர் அடுத்த தொடர்களில் பங்கேற்காமல் அணிக்குள் இருந்து காயம் காரணமாக மீண்டும் வெளியேற்றப்பட்டார். தற்போது பார்டர் கவாஸ்கர் தொடரின் போதும் முழுமையாக குணமடைந்துவிட்டதாக சூர்யாவை வெளியில் வைத்துவிட்டு எடுத்துவரப்பட்ட ஸ்ரேயாஸ் மீண்டும் காயம் காரணமாக வெளியேற்றப்பட்டார்.
அறுவை சிகிச்சைக்கு பரிந்துரை! WTC, IPL தவறவிட வாய்ப்பு!
கிடைத்திருக்கும் தகவல்களின் படி மும்பையை சேர்ந்த டாக்டர் மூன்றாவது சந்திப்பின் போது ஸ்ரேயாஸ் ஐயரை அறுவை சிகிச்சை செய்துகொள்ள பரிந்துரைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி அவர் அறுவை சிகிச்சை செய்யப்பட்டால் கிட்டத்தட்ட அடுத்த 5 மாதங்களுக்கு அவர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடாமல் தவிர்க்க வேண்டியிருக்கும்.
ஒருவேளை ஸ்ரேயாஸ் தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவில்லை என்றால், எதிர்வரும் உலகக்கோப்பைக்கான அணியிலும் அவர் இல்லாமல் போக வாய்ப்பிருக்கிறது. கடந்த 2021ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பையின் போதும் நல்ல பார்மில் இருந்த ஸ்ரேயாஸ் ஐயர், வெறும் பேக்கப் வீரராக மட்டுமே அணிக்குள் சேர்த்துக்கொள்ளப்பட்டார். மேலும் கடந்த 2022 டி20 உலகக்கோப்பையிலும் அணிக்குள் எடுக்கப்படவில்லை. தற்போது 2023 ஒருநாள் உலகக்கோப்பையிலும் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
பிசிசிஐ வழிகாட்டுதலின்படி லண்டன் அல்லது இந்தியாவில் அறுவை சிகிச்சை செய்துகொள்வார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஐபிஎல்லை பொறுத்தவரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு ஸ்ரேயாஸ் ஐயர் இல்லாதது மிகப்பெரிய பாதகமாக அமைய வாய்ப்புள்ளது.