தோனி குறித்து பேசியிருக்கும் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், தோனியை ஆடுகளத்தின் விக்கெட்டுகளில் தோனி ஒரு சிறந்த ரன்னர் என்றும், அவர் இயற்கையாகவே ஒரு அத்லெட்டிக் பிளேயர் என்றும் பாராட்டி கூறியுள்ளார்.
2023ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் கோப்பை அறிமுக விழா, புதியதலைமுறை செய்தி சேனலில் இன்று நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் முன்னாள் இந்திய கேப்டன் மற்றும் அதிரடி வீரரான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் மற்றும் முன்னாள் இந்திய வீரர் பத்ரிநாத் ஆகியோர் கலந்து கொண்டு, ஐபிஎல் கோப்பையை அறிமுகம் செய்தனர். அப்போது இருவரிடமும் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது. அதன் சிறுபகுதி இங்கே:
2023ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் எப்படி இருக்கப்போகிறது என்ற கேள்விக்கு பதிலளித்த சீக்கா, “மற்ற அனைத்து ஐபிஎல் தொடர்களை விடவும், இந்த 2023ஆம் ஆண்டு ஐபிஎல், சிறந்த போட்டிகளை கொண்டிருக்கும். ஏனென்றால் முந்தைய தொடர்களை விட தற்போது கூடுதல் அணிகள் (கிட்டத்தட்ட 6 அணிகள் என குறிப்பிட்டு) பலம் வாய்ந்ததாக இருக்கின்றன. ஹாரி ப்ரூக், கேம்ரின் க்ரீன் போன்ற புதிய அதிரடியான வீரர்கள் அனைத்து அணிகளிலும் களமிறங்கி உள்ளனர். இந்த தொடரின் அனைத்து போட்டிகளும், இறுதிவரை நம்மை பரபரப்பாக வைத்திருக்கும் அளவுக்கு, விறுவிறுப்பான போட்டிகளாக இருக்கும்” என்று தெரிவித்தார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் எந்தெந்த வீரர்கள் முக்கிய வீரர்களாக இருப்பார்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த பத்ரிநாத், “சென்னை அணியை பொறுத்தவரையில் ரவீந்திர ஜடேஜா, பென் ஸ்டோக்ஸ், மொயின் அலி போன்ற 3 வீரர்கள் இம்பேக்ட் வீரர்களாக இருப்பார்கள். அதில் முக்கியமாக ரவீந்திர ஜடேஜா கீ-பிளேயராக இருப்பார். அவர் காயத்திலிருந்து மீண்டு வந்ததற்க்கு பிறகு அற்புதமாக ஆடிவருகிறார். தற்போதையை ஐபிஎல் தொடரின் சிறந்த பினிஷர் யார் என்று என்னை கேட்டால், நான் ஜடேஜாவை கூறுவேன். நிச்சயம் பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்திலும் ஜடேஜா சிறப்பாக செயல்பட போகிறார்” என்று தெரிவித்தார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மற்றும் நட்சத்திர வீரரான தோனி பற்றியும் அவரது பிட்னஸ் குறித்தும் கேட்கப்பட்டதற்க்கு பதிலளித்த சீக்கா கூறுகையில், “தோனி, கபில்தேவ் போன்ற வீரர்கள் எல்லாம் இயற்கையான அத்லெட்டிக் வீரர்கள். அவர்கள் எப்பொழுதும் கிரிக்கெட்டை சிறப்பாக விளையாடுவார்கள். தோனியும் ஒரு இயற்கையான அத்லெட்டிக் வீரர், அவரால் தற்போது கூட விராட் கோலிக்கு இணையாக விக்கெட்டுகளில் ஓட முடியும்” என்று தெரிவித்தார்.