பா.ஜ.க மகளிரணி சார்பாக கோவையில் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. இதில் அந்தக் கட்சியின் தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த வானதி, “கடந்த 2 வாரங்களில் 420 பேர் வேறு கட்சிகளில் இருந்து பா.ஜ.க-வுக்கு வந்திருக்கின்றனர். எங்களுடைய கட்சியிலிருந்து யாராவது ஒருவர் வெளியில் சென்றாலும் அது விவாதமாகிறது.
ஒரு சாதாரண தொண்டர் கூட வெளியில் போகக் கூடாது என்று தான் நினைக்கிறோம். உயர் கல்வியில் தமிழ்நாடு முன்னேறிய மாநிலம் என சொல்கிறோம். தேர்வு எழுத பதிவு செய்து, ஆயிரக்கணக்கானோர் தேர்வு எழுதாமல் இருப்பதை அரசு தீவிரமாக யோசிக்க வேண்டும்.
பல்வேறு வசதிகள் இருந்தும் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்வது குறைந்து வருகிறது. கல்வி அமைச்சரின் நண்பர் சினிமாவில் நடிக்கலாம். அவருடன் நேரம் செலவிடுவதையோ, நட்பையோ எதுவும் சொல்லவில்லை. அதேநேரத்தில் கல்வி அமைச்சர் இதையும் கவனிக்க வேண்டும். கொரோனாவுக்கு பிறகு மாணவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் அழுத்தம் குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.
நீட் ரகசியத்தை உதயநிதி உடைத்திருக்கிறார். இந்த ரகசியத்தையா இவ்வளவு நாள் வைத்திருந்தீர்கள். தி.மு.க தலைமுறை தலைமுறையாக மக்களை ஏமாற்றி கொண்டிருக்கிறார்கள்.
எத்தனை இளம் பெண்கள், குழந்தைகளின் உயிரை தி.மு.க காவு வாங்கியிருக்கிறது. இதற்கெல்லாம் பதில் சொல்லியே ஆகவேண்டும். தி.மு.க-வின் நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கும் உதயநிதி சொல்லும் வாக்குறுதிக்கும், செயலுக்கும் சம்பந்தமே இல்லை என்றால் மக்களின் நம்பிக்கைக்குரிய தலைவராக எப்படி மாற முடியும்.
தன் சொந்த அமைச்சர்களைக் கூட கடுப்படுத்த முடியவில்லை என்றால், எதற்காக முதல்வர் எதிர்க்கட்சிகள் மீது பாய வேண்டும். சட்டம் ஒழுங்கை காக்க வேண்டும் என்றால் முதலில் முதல்வர் தன் பேச்சில் கவனமாக இருக்க வேண்டும்.
தன் அமைச்சரவை சகாக்களின் பேச்சால் ஏற்படும் விளைவுகளை கவனிக்க வேண்டும். எதிர்க்கட்சி ஐ.டி விங் நினைத்தால் ஆட்சியை தூக்கி போட முடியுமா. கடந்த சில நாள்களாக அ.தி.மு.க-பா.ஜ.க நிர்வாகிகள் இடையே கருத்து மோதல் இருக்கிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு இது சிக்கலை ஏற்படுத்தும். கடந்த வாரம் எங்கள் தலைவர் நட்டா வந்தபோது, ‘எதுவும் பேசக்கூடாது.’ என எங்கள் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தல் கொடுத்திருக்கிறார்.
கோடைக் காலமே வரவில்லை. இப்போதே தண்ணீர் பிரச்னை வந்துவிட்டது. கோவை மீது இன்னும் அவர்களுக்கு வெறுப்பு தீரவில்லை.” என்றார்.