விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நெடுங்குளம்-தானிப்பாறை செல்லும் சாலையில் சின்னகுட்டம் மலைப்பகுதி உள்ளது. இந்த மலையடிவாரப் பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட ஏக்கரில் தென்னை, மா விவசாயம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சின்னகுட்டம் மலைப்பகுதியில் இரவில் திடீரென பயங்கர காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. மாலையில் சிறிய அளவில் ஏற்பட்ட தீ விபத்தானது இரவில் மலைப்பகுதியைச் சுற்றிலும் பரவியதால் காட்டுத்தீயாக மாறியது. இதுகுறித்த தகவல் வனத்துறைக்கும், தீயணைப்பு படைக்கும் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர், மலையில் ஏற்பட்ட காட்டுத் தீ, மற்ற இடங்களுக்கு பரவாத வகையில் தடுக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்தநிலையில் இரவு நேரம், மலைப்பாதை மற்றும் மின்விளக்கு வசதி இல்லாததால் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் சுணக்கம் ஏற்பட்டது.
தீயணைப்பதில் ஏற்பட்ட பின்னடைவு காரணமாக, மலையடிவாரப் பகுதியில் உள்ள விவசாயிகள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர். ஏனெனில், `மா’ சீஸன் தொடங்குவதற்கு இன்னும் சில வாரங்களே இருக்கும் நிலையில் தொடர்ந்து பரவிவரும் காட்டுத்தீயால் மலையடிவார மாந்தோப்புக்குள் தீ பரவிடுமோ என அச்சம் ஏற்பட்டுள்ளது. மலையில் ஏற்பட்டுள்ள தீயைக் கட்டுப்படுத்தினால் மட்டுமே எங்களின் வாழ்வாதாரம் தப்பும். இல்லையென்றால், முதலுக்கே மோசம் வந்துவிடும் என அச்சம் தெரிவித்துள்ளனர்.