உலகின் மாசுபட்ட நாடுகள் பட்டியலில் இந்தியா 8வது இடத்தில் உள்ளதாக சுவிட்சர்லாந்தின ஐக்யுஏர் (IQAir) நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தின் ஐக்யுஏர் (IQAir) நிறுவனம், 131 நாடுகளில், 30,000க்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு சாரா கண்காணிப்பு அமைப்புகளிடமிருந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, உலகின் மாசுபட்ட நாடுகள் பட்டியலில் இந்தியா 8வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு 5வது இடத்திலிருந்த நிலையில் இந்த ஆண்டு சரிந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் தீங்கு விளைவிக்கக்கூடிய PM 2.5 என்ற காற்று மாசு நுண்துகள் செறிவு 53.3 மைக்ரோகிராம்/கியூபிக் மீட்டராக குறைந்திருந்தாலும், உலக சுகாதார அமைப்பு கூறியுள்ள பாதுகாப்பு வரம்பைவிட 10 மடங்கு அதிகமாகும்.

image

அதன்படி மத்திய ஆப்பிரிக்காவில் சாட் என்ற நாடானது இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. 2வது இடத்தில் ஈராக்கும், 3வது இடத்தில் பாகிஸ்தானும் 4வது இடத்தில் பக்ரைனும், 5வது இடத்தில் பங்களாதேஷும் 6வது இடத்தில் பக்ரைனும், 7வது இடத்தில் குவைத்தும் 9 மற்றும் 10வது இடங்களில் எகிப்தும், தஜிகிஸ்தானும் உள்ளன. மாசுபட்ட நகரங்களின் தரவரிசைப் பட்டியலில் 7,300 க்கும் மேற்பட்ட நகரங்கள் இடம்பெற்றுள்ளன. இந்தப் பட்டியலில் இந்திய நகரங்கள் அதிக அளவில் உள்ளன. பல இந்திய நகரங்கள் 2017ஆம் ஆண்டிலிருந்து இந்தப் பட்டியலில் உள்ளன. 2017ஆம் ஆண்டில் இந்தப் பட்டியலில் 2,200க்கும் குறைவான நகரங்களே இருந்த நிலையில் இப்போது அந்த எண்ணிக்கை மூன்று மடங்குக்கு மேல் உயர்ந்துள்ளது.

image

மிகவும் மாசுபட்ட முதல் 50 நகரங்களில் 39 நகரங்கள் இந்தியாவில் உள்ளன. டாப்-10 மெட்ரோ நகரங்களில் டெல்லி, கொல்கத்தா, மும்பை, ஹைதராபாத், பெங்களூரு, சென்னை என 6 இந்திய நகரங்கள் இடம்பெற்றுள்ளன. அதிக மாசுபட்ட நகரங்களில் முதல் இரண்டு இடங்களில் பாகிஸ்தானின் லாகூர், சீனாவின் ஹோடான் நகரங்கள் உள்ளன. அதனைத் தொடர்ந்து ராஜஸ்தான் மாநிலம் பிவாடி, டெல்லி ஆகிய நகரங்கள் உள்ளன. டெல்லியில் காற்று மாசுபாடு 92.6 மைக்ரோகிராம் அளவுக்கு உள்ளது. இது பாதுகாப்பான வரம்பைவிட கிட்டத்தட்ட 20 மடங்கு அதிகம் ஆகும்.

image

மெட்ரோ நகரங்களில் டெல்லிக்கு அடுத்தபடியாக கொல்கத்தாதான் அதிகமாக மாசுபட்டுள்ளது. ஆனால் இரு நகரங்களுக்கும் அதிக வித்தியாசம் உள்ளது. சென்னையில் காற்று மாசுபாடு உலக சுகாதார அமைப்பின் நிர்ணயித்த பாதுகாப்பான அளவைவிட 5 மடங்கு அதிகம். ஹைதராபாத் மற்றும் பெங்களூரு ஆகிய மெட்ரோ நகரங்களில் 2017 முதல் சராசரி காற்று மாசின் அளவு கூடிக்கொண்டே வந்திருக்கிறது. இந்தியாவில் காற்று மாசுபாட்டினால் 150 பில்லியன் டாலர்கள் செலவாகிறது என்றும் போக்குவரத்துத் துறையால் 20 முதல் 35 சதவீதம் மாசுபாடு ஏற்படுகிறது என்றும் அறிக்கை கூறுகிறது. தொழில்துறை, நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்கள் போன்றவை மாசுபாட்டிற்கான பிற முக்கியக் காரணங்களாகச் சொல்லப்படுகின்றன.

– ஜெ.பிரகாஷ்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.