5 நாள் பயணமாக நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு வருகை தந்திருக்கும் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி , ஊட்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் குடும்பத்துடன் தங்கி ஓய்வெடுத்து வருகிறார். சுற்றுலா, கலைநிகழ்ச்சிகள் போன்றவற்றில் உறவினர்களுடன் பங்கேற்று வரும் ஆளுநர் இன்று காலை 8 மணிக்கு கேரள மாநிலம் வயநாடு கிளம்புவதாக திட்டமிடப்பட்டிருந்தது.
ஆன்லைன் ரம்மி விவகாரம் தொடர்பாக ஆளுநருக்கு எதிராக கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்த கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சியினர் அழைப்பு விடுத்திருந்ததால் ஆளுநரின் பயணத்திட்டத்தில் மாற்றம் செய்து காலை 7.30 மணிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வயநாடு கிளம்பினார்.
இதனைத் தொடர்ந்து, ஆளுநர் மாளிகை நுழைவு வாயில் பகுதியான அரசு தாவரவியல் பூங்கா முன்பு திரண்ட கம்யூனிஸ்ட் கட்சிகள், மக்கள் அதிகாரம், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சியினர் ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இவர்களை காவல்துறையினர் கைதுசெய்து வருகின்றனர். மேற்கொண்ட கட்சியைச் சேர்ந்தவர்கள் சிறு சிறு குழுக்களாக பிரிந்து ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயற்சி செய்து வருவதால் அந்த பகுதியே போராட்டக்களமாக மாறியிருக்கிறது. நுழைவு வாயில் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.