தமிழ் சினிமாவில் பாட்ஷா, மங்காத்தா, துப்பாக்கி என பல படங்களின் இரண்டாம் பாகம் வராதா என ரசிகர்கள் ஏங்கிக் கொண்டிருக்கின்றனர். வட சென்னை, புஷ்பா போன்ற படங்களின் இரண்டாம் பாகம் பற்றி அறிவிக்கப்பட்டு விட்டாலும், அது குறித்தான அப்டேட்கள் பெரிதாக வராததால் அதற்காகவும் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

இப்படியாக வெகுசில படங்களின் ப்ரீக்வல் மற்றும் சீக்வலுக்காக ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்போடு காத்திருக்கும் வேளையில் எவருமே எதிர்ப்பார்க்காத அப்டேட்டாக வந்திருப்பதுதான் சார்பட்டா படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு.

2021ம் ஆண்டு கொரோன ஊரடங்கின் போது அமேசான் ப்ரைம் தளத்தில் நேரடியாக வெளியான படம்தான் சார்பட்டா. பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, பசுபதி, கலையரசன், ஜான் கொக்கேன், துஷாரா விஜயன், காளி வெங்கட் என பலரும் நடித்திருந்த இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பே கிடைத்திருந்தது.

இப்படி இருக்கையில்தான் கடந்த மார்ச் 6ம் தேதியன்று திடீரென நடிகர் ஆர்யா தனது ட்விட்டர் பக்கத்தில், “மேட்ச் பாக்க ரெடியா? ரோஷமான ஆங்கில குத்துச்சண்ட ரவுண்ட் 2 #சார்பட்டா2 விரைவில்” என குறிப்பிட்டு போஸ்டரையும் பகிர்ந்திருந்தார்.


இந்த அறிவிப்பு ரசிகர்களை பெருமளவில் ஆச்சர்யப்பட வைத்தாலும் அதிர்ச்சியளிக்கக் கூடிய விஷயமாக இருந்தது என்னவோ சார்பட்டா 2 போஸ்டரில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் பெயர் இடம்பெறாமல் இருந்ததுதான்.

ஏனெனில் சந்தோஷ் நாராயணனின் பாடல்களும் பின்னணி இசையும் சார்பட்டா படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணியாக இருந்தது. ஆகையால்தான் சார்பட்டா 2-ல் சந்தோஷ் நாராயணன் இல்லாவிட்டால் நிச்சயம் அந்த உணர்வு இருக்காது என்றெல்லாம் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பலரும் பதிவிட்டு வந்தனர்.

இந்த நிலையில், சார்பட்டா 2-ல் தானும் இருப்பதை குறிக்கும் விதமாக, ஆர்யாவின் ட்வீட்டை ரீட்வீட் செய்த இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், “வானம் விடிஞ்சிருச்சு காசு டா மேளத்தை!!” என கேப்ஷனிட்டு இயக்குநர் பா.ரஞ்சித் மற்றும் ஆர்யாவை டேக் செய்திருந்தார். இதனைக் கண்ட ரசிகர்கள், “ஹப்பாடா” என பெருமூச்சு விட்டபடி கமென்ட் செக்‌ஷனில் பதிவிட்டிருக்கிறார்கள். இருப்பினும் அதிகாரப்பூர்வமாக சந்தோஷ் நாராயணன்தான் சார்பட்டா 2-க்கும் இசையமைக்கிறார் என்பது அறிவிக்கப்படவில்லை என்றும், அவர் நட்பு ரீதியாகக் கூட பதிவிட்டிருக்கலாம் என்றும் ஒருசிலர் குறிப்பிட்டிருக்கிறார்கள்.


முன்னதாக பா.ரஞ்சித் இயக்கிய எல்லா படங்களுக்கும் சந்தோஷ் நாராயணன்தான் இசையமைத்திருந்தார். ஆனால் சார்பட்டா படத்துக்கு பிறகு வந்த நட்சத்திரம் நகர்கிறது படத்துக்கும், விக்ரம் நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் தங்கலான் படத்திலும் சந்தோஷ் நாராயணன் இடம்பெறாததால் இருவருக்குள்ளும் ஏதோ பிரச்னை என்றெல்லாம் சினிமா வட்டாரத்தில் தகவல்கள் பரவியதும் குறிப்பிடத்தக்கது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.