“உக்ரைன் நாட்டை மையமாக வைத்து ரஷ்யா ஒரு பக்கமும், அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் இன்னொரு பக்கமும் நடத்தும் யுத்த விளையாட்டு கவலை தருகிறது. கொரோனாத் தொற்றும் அதன் காரணமாகப் போடப்பட்ட ஊரடங்கும் உலகப் பொருளாதாரத்தையே முடக்கியிருக்கும் சூழலில், பல நாடுகளைப் போர்முனையில் கொண்டு போய் நிறுத்தும் பொறுப்பற்ற செயலைச் செய்கிறார், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின். தங்கள் அண்டை தேசமான உக்ரைனைச் சுற்றி மூன்று பக்கமும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட படைகளைக் குவித்து வைத்துவிட்டு, ‘‘எங்களுக்குத் தாக்குதல் நடத்தும் எண்ணம் இல்லை’’ என்கிறார். ஆனால், எல்லையில் ஆங்காங்கே மோதல்கள் தொடங்கிவிட்டதாக வரும் செய்திகள் கவலை தருகின்றன.

சோவியத் யூனியனிலிருந்து பிரிந்த உக்ரைனை ஒரு தனி நாடாக ரஷ்யா மதிப்பதில்லை என்பதுதான் முதல் பிரச்னை. 2014-ம் ஆண்டு உக்ரைன் மீது போர் தொடுத்து, அதன் தென்பகுதியான கிரீமியாவை ரஷ்யாவுடன் இணைத்துக்கொண்டார் புதின். உலக நாடுகளின் கண்டனத்தைத் துளியும் பொருட்படுத்தவில்லை. இப்போதும் உக்ரைனின் சில பகுதிகளில் இருக்கும் பிரிவினைவாதிகளுக்கு ஆயுதங்களைக் கொடுத்துத் தூண்டிவிடுகிறது ரஷ்யா.

கடந்த ஆண்டு வெளியான கார்ட்டூன்

தன் பாதுகாப்புக்காக நேட்டோ கூட்டமைப்பில் உக்ரைன் சேர முயன்றதுதான் இப்போதைய பிரச்னைக்குக் காரணம். அமெரிக்காவும் பிரிட்டனும் இணைந்து உருவாக்கிய நேட்டோ கூட்டமைப்பில் இப்போது 30 நாடுகள் உள்ளன. ஒரு நாட்டை யாராவது தாக்கினால், மற்றவர்கள் ராணுவ உதவி செய்யவேண்டும் என்பது நேட்டோ நாடுகளின் உடன்படிக்கை. ரஷ்யாவின் அண்டை நாடுகளான எஸ்தோனியா, லாட்வியா, லிதுவேனியா ஆகியவை ஏற்கெனவே நேட்டோவில் இணைந்திருக்க, உக்ரைனும் இணைந்துவிட்டால் தன் பக்கத்திலேயே வந்து அமெரிக்கா ஆதிக்கம் செலுத்தும் என்பது ரஷ்யாவின் கவலை. அதனால் உக்ரைனை மிரட்டி நேட்டோவைப் பணியவைக்க முயல்கிறார் புதின்.

‘உக்ரைன் மற்றும் ஜார்ஜியாவை நேட்டோவில் சேர்க்கக்கூடாது. கிழக்கு ஐரோப்பாவில் நேட்டோ படைகள் இருக்கக்கூடாது’ என்றெல்லாம் கடுமையான நிபந்தனைகள் விதிக்கிறார் புதின். உக்ரைன் விவகாரத்தை வைத்து மீண்டும் ரஷ்யாவை ஒரு வல்லரசாக நிறுவ நினைக்கிறார் அவர். அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் விடுவதாக இல்லை. ஏற்கெனவே சீனாவைச் சமாளிப்பதே அமெரிக்காவுக்குப் பெரும் வேலையாக இருக்கும் நிலையில், இன்னொரு முனையில் ரஷ்யாவும் தலைவலியாக மாறுவதை அவர் விரும்பவில்லை.

ரஷ்யா மீண்டும் வலிமை பெறுவதை ஐரோப்பிய நாடுகளும் அச்சுறுத்தலாக நினைக்கின்றன. அதனால் அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன், கனடா, நெதர்லாந்து, நார்வே, டென்மார்க் என்று பல நாடுகளும் படைகளையும் போர் விமானங்களையும் ரஷ்யாவைச் சுற்றியுள்ள நாடுகளில் குவித்துள்ளன. இப்படி ஒவ்வொரு நாடும் தன் வல்லமையை நிரூபிக்க நினைக்கும் விளையாட்டில் உக்ரைன் சிக்கித் தவிக்கிறது.

எனினும் சில ஒளிக்கீற்றுகளும் தெரிகின்றன. பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான், ஜெர்மனி அதிபர் ஒல்ஃப் ஷோல்ஸ் ஆகியோர் புதினுடன் சமாதானப் பேச்சு நடத்தி வருகிறார்கள். போரின் மோசமான விளைவுகளை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். உலகின் எந்த மூலையில் போர் நடந்தாலும், அதன் பாதிப்புகளை ஒட்டுமொத்த உலகமும் சந்திக்க நேரிடும் என்பதே இன்றைய நிலை.

உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையேயானப் போர் ஓராண்டைக் கடந்துவிட்டது. இருதரப்பிலும் லட்சக்கணக்கில் உயிர் பலிகள், மீட்டுருவாக்கம் செய்யமுடியாத உடமை சேதங்கள், பில்லியன் கணக்கில் பொருளாதாரச் சரிவுகள் என அனைத்து வகையான பேரிழப்புளைச் சந்தித்தபின்னும் போரை முடிவுக்கு கொண்டுவராமல் இருநாடுகளும் உக்கிரமாய் தங்கள் சண்டையைத் தீவிரப்படுத்திக்கொண்டிருக்கின்றன. இந்தியா உள்ளிட்ட எத்தனையோ உலக நாடுகள் சமாதானப் பேச்சுவார்த்தையைத் தொடங்குங்கள் என கேட்டுக்கொண்டாலும் அவற்றையெல்லாம் மதிக்காமல் விடாப்பிடியாக போரைத் தொடர்ந்துகொண்டிருக்கின்றன. ஐ.நா-வும் வழக்கம்போல `போரை நிறுத்துங்கள்’ என கண்துடைப்பு அறிக்கைகளையே ஒவ்வொரு மாதமும் வெளியிட்டுக்கொண்டிருக்கிறது.

ரஷ்யா – உக்ரைன் போர்

உக்ரைன் – ரஷ்யா போர் தாக்கத்தால் அந்த இரு நாடுகள் மட்டுமல்லாமல் உலக நாடுகள் முழுவதும் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு, அத்தியாவசியப் பொருட்கள் விலையேற்றம் என அல்லல்பட்டுக்கொண்டிருக்கின்றன. உலகையே பெரும் இன்னலுக்குள்ளாக்கியிருக்கும் இந்தப்போர் முதலில் எப்படி எதனால் தொடங்கியது? இருநாடுகளுக்கும் இடையே என்ன பிரச்னை? ஏன் இன்னமும் முடிவடையாமல் தொடர்ந்துகொண்டிருக்கிறது?

முழுப்பின்னணியும் இங்கே:

உக்ரைன் – ரஷ்யா இடையேயான உறவு:

உக்ரைன்-ரஷ்யா போருக்கான காரணம் பற்றி அறிவதற்கு முன்பாக, உக்ரைனுக்கு ரஷ்யாவுக்கும் இடையேயான வரலாற்று உறவு, பூலோக அமைப்பு, கடந்தகால அரசியல் நிகழ்வுகள், பிளவுகள் பற்றி தெரிந்துகொள்வது மிக அவசியம். 1991-ம் ஆண்டு சோவியத் யூனியன் உடைந்து 15 நாடுகளாக சிதறியபோது, அதில் ஒரு நாடாக உருப்பெற்றதுதான் உக்ரைன். ஆகவேதான், மொழி, கலாசாரம், பண்பாடு ரீதியாகவும் ரஷ்யாவுடன் மிக நெருக்கமான பிணைப்பை கொண்ட நாடாக இருந்துவருகிறது. இருப்பினும், உக்ரைன் நாட்டு மக்களின் அரசியல் நிலைப்பாடுகள் இருவேறுபட்ட தன்மையைக் கொண்டிருக்கின்றன.

ரஷ்யா – உக்ரைன் போர்

குறிப்பாக, ரஷ்ய எல்லையை ஒட்டிய கிழக்கு மற்றும் தெற்கு பகுதியில் வாழும் உக்ரைன் மக்கள்(ரஷ்ய மொழி பேசுபவர்கள்) பொதுவாக ரஷ்ய ஆதரவு நிலைப்பாட்டுடனும், மேற்குப்பகுதியை ஒட்டிய உக்ரைன் மக்கள் ஐரோப்பிய ஒன்றிய ஆதரவு நிலைப்பாட்டுடனும் இருக்கின்றனர். உக்ரைன் மக்களின் இந்த அடிப்படை உளவியலை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு தங்கள்பக்கம் இழுத்துக்கொள்ள ஐரோப்பிய ஒன்றியமும், ரஷ்யாவும் போட்டிப்போட்டுக் கொண்டிருக்கின்றன.

ரஷ்யா – உக்ரைன் போர்

பூகோள அரசியலில் உக்ரைனுக்கான முக்கியத்தும்:

இதற்கு முக்கியக் காரணம், உக்ரைன் ரஷ்யாவுக்கும், ஐரோப்பாவுக்கும் இடைப்பட்ட எல்லையில் அமைந்திருக்கிறது. எனவே, கிழக்கு ஐரோப்பாவில் ரஷ்யாவின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த உக்ரைனை சரியான களமாக தேர்வுசெய்திருக்கும் அமெரிக்க, ஐரோப்பிய கூட்டு நாடுகள், உக்ரைனை தங்களின் நேட்டோ கூட்டமைப்பில் இணைத்துக்கொள்ள ஆதரவு தெரிவித்தன. வேகமான பொருளாதார வளர்ச்சிக்கு ஐரோப்பிய ஒன்றியத்துடன் கூட்டுசேர ஏற்கெனவே விருப்பம் தெரிவித்துவந்த உக்ரைன், நேட்டோ ( NATO- அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளோடு 28 ஐரோப்பிய நாடுகள் இணைந்து ஏற்படுத்தப்பட்ட அமைப்பு) கூட்டமைப்பில் இணையவும் ஆர்வம் காட்டியது.

ஆனால், ரஷ்யா இதைக் கடுமையாக எதிர்த்தது. தனது நாட்டின் பூகோளப் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டுமானால், உக்ரைனை தனதுகட்டுப்பாட்டிலேயே வைத்திருக்கவேண்டுமென ரஷ்யா நினைக்கிறது. மேலும், தனது அண்டை நாடுகளான போலந்து, லாட்வியா, லிதுவேனியா, எஸ்தோனியா ஆகியவை ஏற்கெனவே நேட்டோ கூட்டமைப்பில் இணைந்திருக்கும் நிலையில், உக்ரைனும் நேட்டோவில் இணைந்தால் அது அமெரிக்காவுக்கு சாதகமாகவும், தனது நாட்டின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாகவும் இருக்கும் என ரஷ்யா கருதுகிறது.

விக்டர் யானுகோவிச்

பிரச்னையின் தொடக்கப் புள்ளி:

சோவியத் யூனியனிலிருந்து பிரிந்து, தனிநாடான பின்னும் உக்ரைனுடன் நட்புநாடாகவே ரஷ்யா இருந்துவந்தது. 2004-ல் ரஷ்யா சார்புடைய விக்டர் யானுகோவிச் (Viktor Yanukovych) உக்ரைன் அதிபராக பொறுப்பேற்றதும், அதை எதிர்த்து ஐரோப்பிய ஒன்றிய சார்புடைய எதிர்க்கட்சியினரும், மக்களும் ஒன்றுசேர்ந்து `ஆரஞ்சு புரட்சி’ (Orange Revolution) எனும் மிகப்பெரிய போராட்டத்தை நடத்தினர். இதையடுத்து, ஐரோப்பிய சார்புடைய விக்டர் யுஷ்செங்கோ அதிபரானார். அதன்பின்னர் 2010-ல் நடந்த அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட்ட விக்டர் யானுகோவிச் உக்ரைன் அதிபரானார். அதைத்தொடர்ந்து, ஐரோப்பிய ஒன்றியத்துடன் கையெழுத்தாக இருந்த (EU association agreement) ஐரோப்பா-உக்ரைன் பொருளாதார ஒப்பந்தத்தை யானுகோவிச் புறக்கணித்தார். மேலும், ரஷ்ய தலைமையிலான சுங்க ஒன்றியத்துடன் (Eurasian Economic Union (EAEU) உக்ரைனை இணைத்துக்கொண்டார்.

உக்ரைன் – கிரீமியா

இதன்விளைவு, 2013-ம் ஆண்டு இறுதியில் மீண்டும் உக்ரைனில் ஐரோப்பிய ஆதரவு மக்களின் புரட்சி வெடித்தது. `கண்ணியத்திற்கான புரட்சி’ (The revolution of dignity) எனப்பட்ட அந்தப் போராட்டத்தின் தீவிரத்தால், 2014 பிப்ரவரியில் நாட்டை விட்டே வெளியேறினார் அதிபர் விக்டர் யானுகோவிச். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட ரஷ்யா, அடுத்த ஒரு மாதத்துக்குள் உக்ரைனின் தெற்குப் பகுதியான கிரீமிய தீபகற்பத்தை ஆக்கிரமித்து தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது. ரஷ்யாவின் இந்த நடவடிக்கையை அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் கடுமையாக கண்டித்தன. மேலும், ஜி-8 நாடுகள் கூட்டமைப்பிலிருந்து ரஷ்யாவை அதிரடியாக நீக்கின. இவற்றையெல்லாம் பெரிதாக கண்டுகொள்ளாத ரஷ்யா, உக்ரைனின் கிழக்குப்பகுதியில் ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பிரிவினைவாத குழுக்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்தது. ரஷ்ய ஆதரவுகொண்ட இந்தப்பிரிவினைவாத குழுக்களுக்கும், உக்ரைன் ராணுவத்துக்கும் இடையேயான மோதலில் இதுவரை 14,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கின்றனர் என்கிறது புள்ளி விவரங்கள்.

நேட்டோவில் இணைய முயற்சி, உருவானது போர்பதற்றம்:

இந்த நிலையில், 2019-ம் ஆண்டு அமெரிக்க-ஐரோப்பிய சார்புடைய வோலோடிமைர் ஜெலன்ஸ்கி (Volodymyr Zelenskyy) உக்ரைன் அதிபராக பொறுப்பேற்றுக்கொண்டார். அதன்பின்னர், நேட்டோ நாடுகள் கூட்டமைப்பில் உக்ரைனை இணைப்பதற்கான தீவிர முயற்சியில் ஈடுபட்டார். இதற்கு, அமெரிக்கா, கனடா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் முழு ஆதரவு அளித்தன. இதனால் ஆத்திரமடைந்த ரஷ்யா, தனது ராணுவ துருப்புகளை ரகசியமாக உக்ரைன் எல்லையை நோக்கி நகர்த்தியது. இந்த விஷயம் அமெரிக்காவின் கழுகுப்பார்வையில் பட்டுவிட, உடனடியாக உக்ரைனுக்கு தகவல் வழங்கி எச்சரிக்கை செய்தது. அமெரிக்க அதிபரான ஜோ பைடன், “உக்ரைன் தாக்கப்பட்டால், ரஷ்யா மிகப்பெரிய விலைகொடுக்க வேண்டியதிருக்கும்; இதுவரை கண்டிராத பொருளாதரத் தடையை எதிர்கொள்ள வேண்டியதிருக்கும்” என பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்தார்.

Map of NATO historic enlargement in Europe | ஐரோப்பாவில் நேட்டோ பரவிய விதம்

அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாகப் பேசியிருக்கும் ரஷ்ய அதிபர் புதின், “நாங்கள் எங்கள் ஏவுகணைகளை அமெரிக்காவின் அண்டைநாடுகளின் எல்லையில் நிலை நிறுத்தவில்லை. அப்படியிருக்கும்போது அமெரிக்கா மட்டும் தனது ஏவுகணைகளை ரஷ்ய எல்லைக்கு அருகில் நிலைநிறுத்துவது ஏன்?” என கேள்வி எழுப்பினார். மேலும், “ரஷ்யா உக்ரைனுடனா மோதலை விரும்பவில்லை! ஆனால் அமெரிக்கா-ஐரோப்பிய நாடுகள், உக்ரைனை நேட்டோ கூட்டமைப்பில் சேர்க்கமாட்டோம் என்கிற ஒரு நிபந்தனையற்ற பாதுகாப்பை ரஷ்யாவுக்கு உறுதி செய்யுங்கள்! அமெரிக்கா எங்கள் பாதுகாப்பு விஷயத்தில் தலையீடு செய்யாது என்ற உத்தரவாதத்தை வழங்குங்கள்!” என அதிரடியான நிபந்தனை வைத்தார். ஆனால், அமெரிக்க-ஐரோப்பிய தரப்போ, “நேட்டோவின் கொள்கைப் படி தகுதிபெறும் எந்த நாட்டிற்கும் உறுப்பினர் உரிமை வழங்கப்படும்” என்பதை திட்டவட்டமாகக் கூறி, உக்ரைனை இணைத்துக்கொள்ளும் முடிவிலிருந்து பின்வாங்காமல் உறுதிகாட்டியது.

அமெரிக்க அதிபர் பைடன் – ரஷ்ய அதிபர் புதின்

உக்ரைனைச் சுற்றிப் படைகளைக் குவித்த ரஷ்யா:

`உலகமே 2022-ம் ஆண்டை கொண்டாட்டங்களுடன் வரவேற்றுக்கொண்டிருந்தபோது, உக்ரைன்-ரஷ்யா நாடுகள் மட்டும் மிகுந்த பதற்றத்துடனே காணப்பட்டன. 2021 நவம்பர் மாதம் தொடங்கிய அந்தப் போர்ப் பதற்றம், எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றிய கணக்காக நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டிருந்தது. அதற்கேற்றார்போல அமெரிக்க அதிபர் ஜோ பைடன், “உக்ரைனைத் தாக்கினால் சும்மா இருக்க மாட்டோம்” என உக்ரைனை ரஷ்யாவுக்கு எதிராக உசுப்பிக்கொண்டிருந்தார்.

உக்ரைன் எல்லையைச் சுற்றி சுமார் 1 லட்சம் ரஷ்யப் படைவீரர்கள் குவிக்கப்பட்டனர். கருங்கடல் பகுதியில் ரஷ்ய போர்க்கப்பல்கள் நங்கூரமிட்டன. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தனது நாட்டுப் பெண்களுக்கும், பொதுமக்களுக்கும்கூட ஆயுதப்பயிற்சி வழங்க உத்தரவிட்டார். ரஷ்யாவின் தாக்குதலை எதிர்கொள்ள உக்ரைனுக்கு ஆயுத உதவிகளை அனுப்பிவைத்தது அமெரிக்கா. அதேசமயம், நிலைமை கட்டுப்பாட்டை மீறி செல்வதற்குள் `அமெரிக்கர்களே உடனடியாக உக்ரைனை விட்டு வெளியேறுங்கள்’ என அவசர அறிவிப்பையும் அமெரிக்கா வெளியிட்டது. அதைத்தொடர்ந்து அப்போதைய இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனும், “ரஷ்யாவிடம் போர்த் திட்டங்கள் தயாராக இருக்கிறது. உக்ரைன் தலைநகர் கீவ்வை(Kyiv) முற்றுகையிட்டு தாக்குதல் நடத்த தீர்மானித்திருக்கிறது. இதன்மூலம், 1945-ம் ஆண்டுக்குப் பிறகு, ஐரோப்பாவில் ஒரு மிகப்பெரிய போரை நடத்துவதற்கு ரஷ்யா திட்டமிட்டிருக்கிறது” என வலுவான எச்சரிக்கை விடுத்தார்.

உக்ரைன் எல்லை

வெடித்தது போர்; உக்ரைனை துவம்சம் செய்த ரஷ்யா!

2022, பிப்ரவரி 24… எதிர்பார்த்தபடியே ரஷ்ய அதிபர் புதின், உக்ரைன் மீது போர்த்தொடுக்க தனது நாட்டு ராணுவத்திற்கு அதிரடியாக உத்தரவிட்டார். அடுத்த கணமே, உக்ரைன் மீது வான்வழியாகக் குண்டுமழை பொழிந்தது ரஷ்ய விமானப்படை. இதனை சிறப்பு ராணுவ நடவடிக்கை என்றே ரஷ்யா சொல்லியது. அதேபோல, தரைவழித் தாக்குதல்களையும் தொடங்கியபடி உக்ரைன் எல்லைக்குள் நுழைந்தது ரஷ்ய ராணுவம். “ரஷ்யா படையெடுத்து வந்த முதல் நாளில் உக்ரைன் நாட்டின் ராணுவ வீரர்கள், பொதுமக்கள் என சுமார் 130 பேர் பலியாகிவிட்டனர். கிட்டத்தட்ட 316 பேர் படுகாயமடைந்திருக்கின்றனர். இந்த நிலையில், எங்களோடு இணைந்து ரஷ்யாவுக்கு எதிராகப் போராட யார் இருக்கிறார்கள்?” என புலம்பித்தவித்தார் ஜெலன்ஸ்கி.

மேலும், “ விதிமுறைகளை மீறிக் குடியிருப்புப் பகுதிகளில் ரஷ்யா தாக்குதல்களை நடத்திவருகிறது. ரஷ்யத் தாக்குதல்களை உலக நாடுகள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றன. எந்த நாடும் எங்களுக்கு உதவி செய்ய முன்வரவில்லை. நேட்டோ படைகளையும் காணவில்லை. இரண்டாவது நாளாகத் தனியாகப் போராடிக்கொண்டிருக்கிறோம். தயவுசெய்து உலக நாடுக உதவி செய்யவேண்டும்” என வேதனையோடு கேட்டுக்கொண்டார்.

ரஷ்யா – உக்ரைன் போர்

முன்னதாக, ரஷ்யா போர்த்தொடுத்தால் அமெரிக்காவும் நேட்டோ படைகளும் தங்களது நாட்டுக்கு ஆதரவாக இருக்கும் என்ற தைரியத்தில் தன்னைவிட ராணுவபலத்தில் மிகப்பெரிய நாடான ரஷ்யாவுக்கு எதிராகச் சவால்விட்டு வந்தார் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி. ஆனால், “உக்ரைன் எங்களது நேட்டோ கூட்டமைப்பின் உறுப்பு நாடு அல்ல; அதனால் எங்கள் படைகளை உக்ரைனுக்குள் அனுப்ப முடியாது. எங்களது உறுப்பு நாடுகளான போலந்து, ஹங்கேரி உள்ளிட்ட நாடுகள்மீது ரஷ்யா கைவைத்தால், திருப்பி அடிக்கத் தயங்கமாட்டோம்” என கைவிரித்தது நேட்டோ.

அமெரிக்காவோ, `எவ்வளவுவேண்டுமானாலும் ஆயுதங்களை அனுப்புகிறோம், ஆனால் தங்கள் நாட்டு ராணுவத்தினரை போருக்கு அனுப்பிவைக்க வாய்ப்பில்லை’ என திட்டவட்டமாகத் தெரிவித்தது. அதன்பிறகு, அமெரிக்க-ஐரோப்பிய நாடுகளிடமிருந்து கிடைக்கின்ற அதிநவீன ஆயுதங்களை வைத்து ரஷ்யாவின் தாக்குதலை சமாளிக்கத் தொடங்கியது உக்ரைன். மேலும், உக்ரைன்மீது தாக்குதல் நடத்திவரும் ரஷ்யாமீது, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், பிரிட்டன், கனடா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்தன. இதனால், ரஷ்யாவின் ஏற்றுமதி, இறக்குமதி பெருமளவு பாதிக்கப்பட்டது. அதேசமயம், இந்தியா இந்தப் போரில் நடுநிலை வகித்தது.

எத்தனைத் தடைகளை விதித்தாலும், “மேற்குலக நாடுகளின் அச்சுறுத்தலில் இருந்து ரஷ்யாவை பாதுகாப்பதற்கான இலக்கை அடையும் வரை எங்களின் போர் தொடரும்” என ரஷ்யப் பாதுகாப்புத்துறை அமைச்சகம் அதிரடியாகத் தெரிவித்தது. ரஷ்யாவின் விடாப்பிடியான தாக்குதலால், உக்ரைனின் பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள், குடியிருப்புகள் என அத்தனைக் கட்டடங்களும் பாரபட்சமின்றி தகர்க்கப்பட்டன. ஏராளமான உயிரிழப்புக்கு மத்தியில், கோடிக்கணக்கான மக்கள் உக்ரைனை விட்டு வெளியேறி அண்டைநாடுகளில் அகதிகளாகத் தஞ்சம் அடைந்தனர்.

குறிப்பாக, இந்தப் போர் தொடங்கிய சில மாதங்களிலேயே சுமார் 1 கோடியே 20 லட்சம் உக்ரைன் மக்கள் அகதிகளாக வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்திருக்கின்றனர். சுமார் 50 லட்சத்துக்கும் அதிகமானோர் அண்டை நாடுகளான ருமேனியா, ஹங்கேரி, மால்டோவா, ஸ்லோவாகியா ஆகிய நாடுகளில் தஞ்சம் புகுந்தனர். அதிகபட்சமாக, போலந்து நாட்டில் மட்டும் 36 லட்சம் பேர் குடியேறியிருப்பதாக அகதிகளுக்கான ஐ.நா அமைப்பு தெரிவித்தது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், ஐரோப்பா கண்டத்தில் நிகழ்ந்திருக்கும் மிகப்பெரிய அகதிகள் இடப்பெயர்வாக இந்த நிகழ்வு வரலாற்றில் இடம்பெற்றது.

ரஷ்யா – உக்ரைன் போர்

உக்ரைனில் சிக்கிய இந்திய மாணவர்கள், பத்திரமாக மீட்ட ஆபரேஷன் கங்கா:

போரால் உக்ரேனிய மக்கள் மட்டுமல்லாமல், உக்ரைனில் தங்கியிருக்கும் பிறநாட்டு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். குறிப்பாக, கல்வி, வேலைவாய்ப்புகளுக்காக உக்ரைன் நாட்டுக்குச் சென்ற 20,000-க்கும் மேற்பட்ட இந்தியர்களும் போருக்கிடையே சிக்கிக்கொண்டனர். தாக்குதலிலிருந்து தப்பிக்க, மெட்ரோ சுரங்கங்கள், பதுங்கு குழிகள் எனக் கிடைக்கும் இடங்களிலெல்லாம் தஞ்சம் புகுந்து, உயிரைக் கையில்பிடித்துக்கொண்டு திண்டாடினர். ஆனால், துரதிஷ்டவசமாக நவீன் என்ற கர்நாடகத்தைச் சேர்ந்த இந்திய மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் இந்தியாமுழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து, தாயகம் திரும்புவதற்காக உக்ரைனில் தவித்துக்கொண்டிருக்கும் இந்திய மாணவர்களை மீட்பதற்காக `ஆபரேஷன் கங்கா’ எனும் துரித நடவடிக்கையை இந்திய அரசாங்கம் மேற்கொண்டது.

மீட்பு விமானத்தில் இந்திய மாணவர்கள்

குறிப்பாக, போர் காரணமாக உக்ரைனின் வான்பகுதி மூடப்பட்டுவிட்டதால், தரைவழியாக உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு எல்லை கடந்து சென்று, அங்கிருந்து விமானம் மூலமாக இந்தியாவுக்கு மீட்டுவரும் செயல்திட்டத்தை இந்தியா வகுத்தது. முதல்கட்டமாக, உக்ரைன் நாட்டின் அண்டை நாடுகளான ருமேனியா, ஹங்கேரி, போலந்து, ஸ்லோவாகியா உள்ளிட்ட நாடுகளின் எல்லைப் பகுதிகளில் இந்திய தூதரகம் சார்பில் சோதனை முகாம்கள் அமைக்கப்பட்டன. மேலும், எல்லை தாண்டி இந்திய தூதரக சோதனை முகாம்களை நோக்கிப் பயணம் மேற்கொள்ளும் அனைத்து இந்தியர்களும் பாஸ்போர்ட், கொரோனா தடுப்புச் சான்றிதழ், அமெரிக்க டாலர் பணம் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களையும் உடன்வைத்திருக்க வேண்டுமென இந்திய அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டது. உக்ரைனில் சிக்கிக்கொண்ட இந்தியர்கள் பேருந்து மூலம் அண்டை நாடுகளின் எல்லைக்கு கொண்டுவரப்பட்டனர். பின்னர் அங்குள்ள இந்திய தூதரக சோதனை முகாம்களில் பதிவுசெய்ததுடன், அந்தந்த நாடுகளில் இருக்கும் விமான நிலையங்களுக்கு அழைத்துவரப்பட்டனர். அங்கு தயார் நிலையில் இருந்த இந்திய விமானங்கள் அடுத்தடுத்து அத்தனை பேரையும் பத்திரமாக மீட்டுவந்து தாயகம் சேர்த்தன.

ரஷ்யா கைப்பற்றிய உக்ரைன் பகுதிகள்:

இடைவிடாத தாக்குதலால் உக்ரைனின் பல முக்கிய நகரங்கள் ரஷ்யாவிடம் வீழ்ந்தன. குறிப்பாக, கிழக்கு உக்ரைனில் உள்ள கார்கிவ், மரியூபோல், லுஹான்ஸ்க், டோனெட்ஸ்க், ஜபோரிஜியா, நோவா, ககோவ்கா மற்றும் தெற்கு உக்ரைனில் உள்ள மிக்கலேவ், கெர்சன், எனர்கோடர் உள்ளிட்டப் பகுதிகளை ரஷ்யா கைப்பற்றியது. இதுகுறித்து விளக்கம் அளித்த உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி, “உக்ரைனின் தெற்குப் பகுதியில் இருக்கும் கிரீமிய தீபகற்பம், கிழக்குப் பகுதியில் ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க் உள்ளிட்ட பெரும்பகுதிகள் உட்பட நாட்டின் ஐந்தில் ஒரு பகுதியை ரஷ்யா தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. அதாவது 3,620 பகுதிகளை ரஷ்யா ஆக்கிரமித்திருக்கிறது” என்றார்.

அதாவது உக்ரைன் தனது மொத்த நிலப்பரப்பில் 20% சதவிகிதத்தை ரஷ்யாவிடம் இழந்தது. அந்த நிலையில், ரஷ்யப் படைகள் வசம் வீழ்ந்த உக்ரைனின் கிழக்குப் பகுதி (ரஷ்ய மொழி அதிகம் பேசும் மக்கள்) பொதுமக்களிடம் ரஷ்யா பொதுவாக்கெடுப்பு நடத்தியது. அதனடிப்படையில், உக்ரைனின் லுஹான்ஸ்க், டோனெட்ஸ்க், கெர்சன், ஜபோரிஜியா ஆகிய நகரங்களை தங்கள் நாட்டுடன் இணைத்து அதிரடி காட்டினார் ரஷ்ய அதிபர் புதின். இதற்கு உலகநாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

ரஷ்யா – உக்ரைன் போர்

பதிலடி கொடுத்த உக்ரைன் மீட்கப்பட்ட பகுதிகள்:

உலகின் மிகப்பெரிய ராணுவங்களில் ஒன்றான ரஷ்ய ராணுவம், உக்ரைனை முழுவதுமாகக் கைப்பற்ற ஒரு சில மாதங்களே போதும் என சொல்லப்பட்டுவந்த நிலையில், தனது தலைநகர் கீவை நெருங்க முடியாதபடி ரஷ்யாவுக்கு மிகப்பெரிய டஃப் கொடுத்தது உக்ரைன் ராணுவம். போர்த்தொடுத்தது ரஷ்யாதான் என்றாலும்கூட, ரஷ்ய தரப்பிலும் மிகக்கடுமையான பாதிப்புகளை உக்ரைன் ராணுவம் ஏற்படுத்தியது. அதாவது, போர் நடைபெற்ற மூன்று மாதத்தில் சுமார் 25,000 ரஷ்யப் படைவீரர்கள் உயிரிழந்திருப்பதாக உக்ரைன் தெரிவித்தது.

“ரஷ்யாவுக்கு நாங்கள் தக்க பதிலடி கொடுத்து வருகிறோம். போரில் இதுவரை 24,900 ரஷ்ய வீரர்கள் உயிரிழந்திருக்கின்றனர். மேலும், 1,110 பீரங்கிகள், 199 விமானங்கள், 155 ஹெலிகாப்டர்கள், 1,900 வாகனங்கள், 2,686 கவச வாகனங்கள், 502 வெடிகுண்டு வீசும் சாதனங்கள், எரிபொருள் டேங்குகள் என பெரிய அளவிலான ரஷ்யாவின் போர்த் தளவாடங்களை உருத்தெரியாமல் அழித்திருக்கிறோம்” என அப்போதே உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சகம் துணிச்சலாகக் கூறியது. தற்போதைய நிலவரப்படி, ரஷ்யாவுக்குச் சொந்தமான 3,121 பீரங்கிகள் மற்றும் 4,877 வாகனங்கள் மற்றும் எரிபொருள் பீரங்கிகள், 2,104 பீரங்கி அமைப்புகள் அழிக்கப்பட்டதாகக் கூறியிருக்கிறது.

மாஸ்க்வா போர்க்கப்பல்

அதைத்தொடர்ந்து, அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் ஆயுத உதவியுடன் ரஷ்யாவின் தாக்குதலுக்கு சளைக்காமல் பதிலடிகொடுத்தது உக்ரைன் ராணுவம். குறிப்பாக, ரஷ்யாவையும் கீரிமியாவையும் இணைக்கும் ஐரோப்பாவின் மிக நீளமான கெர்ச் பாலம் தகர்க்கப்பட்டது. `இந்த தாக்குதலின் மூலம் ரஷ்யாவின் உள்கட்டமைப்புகளை உக்ரைன் சிதைக்க நினைக்கிறது. இது ஒரு தீவிரவாதச் செயல்’’ எனக் கடுமையாக விமர்சித்தார் புதின். அதேபோல, ரஷ்யாவின் மிகப்பெரிய ஆயுதக் கிடங்கு போர்க்கப்பலான மாஸ்க்வா கப்பலை நெப்ட்யூன் ஏவுகணைகள் மூலம் தாக்கி அழித்தது உக்ரைன்.

பதிலடி தாக்குதல் நடத்தியபடியே, ரஷ்யாவிடம் இழந்த தங்கள் நாட்டின் பகுதிகளையும் ஒவ்வொன்றாக வெற்றிகரமாக மீட்டது உக்ரைன் ராணுவம். குறிப்பாக, உக்ரைனின் கிழக்குப் பகுதியில் உள்ள கார்கிவ், குபியான்ஸ்க், லிஜியும், இஸியம் உள்ளிட்ட பகுதிகளின் கட்டுப்பாட்டை மீண்டும் தங்கள் வசம் கொண்டுவந்தனர் உக்ரைன் ராணுவத்தினர். மேலும், ரஷ்யாவுடன் இணைக்கப்பட்ட டொனெட்ஸ்க் பிராந்தியத்தின் லைமன் நகரையும் தன்வசப்படுத்தியது உக்ரைன். அதேபோல, ரஷ்யாவுடன் இணைக்கப்பட்ட உக்ரைனின் கெர்சன் பகுதியில் உக்ரைன் படைகளின் ஆதிக்கம் அதிகரித்ததால், அங்கிருந்து ரஷ்யப் படைகளை திரும்ப அழைத்துக்கொண்டார் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சரான செர்கெய் ஷொய்கோ. அதையடுத்து, கெர்சன் பகுதியையும் ரஷ்யாவிடமிருந்து உக்ரைன் ராணுவம் மீட்டது. குறிப்பாக, `செப்டம்பர் மாத ராணுவ நடவடிக்கை மூலம் உக்ரைன் ராணுவம் சுமார் 2,000 கிமீ பகுதியை மீட்டுள்ளதாக’ அந்நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்தார். உக்ரைனின் இந்த பதில் நடவடிக்கையால் ரஷ்யப் படைகள் சற்று பின்னடைவைச் சந்தித்தன.

ஜெலன்ஸ்கியுடன் உக்ரைன் வீரர்கள்

(கடந்த டிசம்பர் மாதம் ரஷ்யா போர் தொடங்கிய 10 மாதங்களில் இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 70-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை உக்ரைன் மீது வீசி கடுமையான தாக்குதலை மேற்கொண்டது. அதற்கு பதிலடியாக, 2023 புத்தாண்டு தினத்தன்று ரஷ்யப் படைகள் நிலைகொண்டிருந்த மகிவிகா நகரிலுள்ள கட்டடம் ஒன்றின்மீது உக்ரைன் ராணுவம் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் சுமார் 400-க்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டதாக உக்ரைன் தெரிவித்தது. அதேபோல, கிழக்கு டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் நடந்த சண்டையில் ஒரே நாளில் சுமார் 800 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்தது. ஆனால், ரஷ்யா இந்த உயிரிழப்பு எண்ணிக்கையை தொடர்ந்து மறுத்து வருகிறது.)

ரஷ்யா உக்ரைன் போர்

3 லட்சம்பேரை திரட்ட உத்தரவிட்ட புதின், வெடித்தது போராட்டம்:

ரஷ்யப் படைகளின் பின்னடைவைத் தொடர்ந்து, உக்ரைனுக்கு எதிரான போரில் சண்டையிடுவதற்காக, ரஷ்யாவில் கூடுதலாக 3 லட்சம் பேரை திரட்ட உத்தரவிட்டார் அதிபர் புதின். இதுகுறித்து அவர் நாட்டு மக்களுடன் தொலைகாட்சி வாயிலாக உரையாற்றியபோது, “மேற்குலக நாடுகள் ரஷ்யாவை அழிக்கத் துடிக்கின்றன. ரஷ்யாவுக்கு எதிராக அணு ஆயுதப் போரில் ஈடுபடப்போவதாக மிரட்டுகின்றன. இதற்காக, அமெரிக்க ஐரோப்பிய நாடுகள் சேர்ந்து ரஷ்யாவுக்கு எதிராக ராணுவ நடவடிக்கையில் ஈடுபட உக்ரைனுக்கு அதிக ஆயுதங்கள் வழங்குகின்றன. இதைத் தடுத்துநிறுத்த, உக்ரைன் ராணுவத்தினரின் மேற்குல நாடுகளின் ஆயுதங்களுக்கு எதிராக மிகப்பெரிய போர்செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது.

ரஷ்யாவின் எல்லைகளையும், ரஷ்ய மக்களையும் பாதுகாக்க அணு ஆயுதங்களையும் பயன்படுத்தத் தயாராக இருக்கிறேன். இது வெறும் வாய்சவடால் அல்ல; அணு ஆயுதங்களுடன் நம்மை மிரட்ட நினைப்பவர்களுக்கு, அணு ஆயுதங்கள் மூலமே பதிலடிகொடுப்பேன் என்கிறேன்.மேலும், உக்ரைனின் சில பகுதிகளை ரஷ்யாவுடன் இணைக்கும் திட்டத்துக்கு ஒப்புதலும் அளித்திருக்கிறேன். முக்கியமாக, உக்ரைனுடன் போர்செய்ய, ரஷ்யாவில் உள்ள 20 லட்சம் ராணுவ வீரர்களில், ஒரு பகுதியினரை தீவிரப் போருக்குத் தயாராக இருக்கவும், ஓய்வுபெற்ற முன்னாள் ராணுவ வீரர்கள் உள்பட ரஷ்ய மக்களிடமிருந்து 3 லட்சம் பேரைத் திரட்டவும் உத்தரவிட்டிருக்கிறேன்” என அறிவித்தார். அதைத்தொடர்ந்து, ரஷ்யப் பாதுகாப்புத் துறை அமைச்சர் செர்கே சோய்குவும், “ரஷ்யாவில் கூடுதலாக 3 லட்சம் வீரர்கள் போருக்குத் திரட்டப்படுவார்கள்” என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

இந்த அறிவிப்பால் அதிர்ச்சி அடைந்த ரஷ்ய மக்கள், ரஷ்யா முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களில் 1,500 பேரை கைதுசெய்து சிறையிலைத்தது ரஷ்யா. மேலும், `போராட்டத்தில் ஈடுபட்டால் 15 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்” என்றும் மிரட்டியது. அதைத்தொடர்ந்து, போரில் ஈடுபடுத்தப்படுவதிலிருந்து தங்களைக் தற்காத்துக்கொள்வதற்காக ரஷ்ய இளைஞர்கள், ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள் ஏராளமானோர் ரஷ்யாவின் அண்டைநாடுகளான ஜார்ஜியா, அஜர்பைஜான், கஜகஸ்தான் உள்ளிட்ட நாடுகளுக்கு தப்பிச்செல்ல முயற்சித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த ரஷ்ய அரசாங்கம், 18 வயது முதல் 65 வயது வரையிலானோருக்கு டிக்கெட் விநியோகிக்கக் கூடாது என தங்கள் நாட்டு விமான நிறுவனங்களுக்கு உத்தரவிட்டது. மேலும், வெளிநாடு செல்லவிரும்பும் ரஷ்ய இளைஞர்கள் பாதுகாப்பு அமைச்சகத்திடம் அனுமதிபெற்ற பின்பே செல்லமுடியும் எனக் கிடுக்கிப்பிடியும் போட்டது.

ரஷ்யா

உலகளாவிய பாதிப்புகள்:

உக்ரைன் ரஷ்யா போர் தொடங்கியபோதே, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை பீப்பாய்க்கு 100 டாலருக்கும் அதிமாக உயர்ந்தது. அதேபோல, அத்தியாவசியப் பொருட்களின் விலையும் கடுமையாக அதிகரித்தது. காரணம், உலக அளவில் கோதுமை, பார்லி, சோளம், சமையல் எண்ணெய் ஏற்றுமதியில் ரஷ்யாவும் உக்ரைனும்தான் முக்கியப் பங்காற்றி வந்தன. இந்தநிலையில், ரஷ்யா மீது அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், கனடா உள்ளிட்ட உலக நாடுகள் சேர்ந்து சுமார் 5,831 தடைகளை விதித்ததால் ரஷ்யாவின் ஏற்றுமதி, இறக்குமதி பெருமளவு பாதிக்கப்பட்டது. அதேபோல, போர்தாக்கத்தால் உக்ரைனிலும் பாதிக்கப்பட்டது. இதனால் இந்த இரு நாடுகளிலிருந்து உணவுப் பொருள்கள் இறக்குமதியை நம்பியிருக்கும் உலக நாடுகள் அத்தியாவசியப் பொருள்களுக்காக தட்டுப்பட்டை எதிர்கொண்டன. குறிப்பாக, ஆப்பிரிக்க நாடுகள் பெருமளவில் உணவுத்தட்டுப்பாட்டை எதிர்கொண்டது. கச்சா எண்ணெய் விலை உயர்வு, அத்தியாவசியப் பொருட்களுக்கான தட்டுப்பாடு போன்றவையே சர்வதேச அளவில் பணவீக்கத்துக்கான முக்கியக் காரணமாக அமைந்தது.

ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ்

இதுகுறித்துப் பேசிய ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ், “’உக்ரைன், ரஷ்யா இரு நாடுகளும் கோதுமை, பார்லியை 30 சதவிகிதம் உற்பத்தி செய்கின்றன. குறைந்த அளவில் வளர்ச்சியடைந்த 45 நாடுகள் மூன்றில் ஒரு பங்கு கோதுமையை ரஷ்யா மற்றும் உக்ரைனிடமிருந்து இறக்குமதி செய்து கொள்கின்றன. 2022-ம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து, கோதுமை மற்றும் சோளத்தின் விலை 30 சதவிகிதம் உயர்ந்துள்ளது. கச்சா எண்ணெய் விலை 60 சதவிகிதத்துக்கும் மேலாக உயர்ந்துள்ளது. அதேநேரத்தில் எரிவாயு மற்றும் உரங்களின் விலைகள் இருமடங்காக உயர்ந்துள்ளன. எனவே, ரஷ்யா-உக்ரைன் போரால் உலக அளவில் சுமார் 170 கோடி மக்கள் பசி, பட்டினி போன்ற வறுமை நிலைக்குத் தள்ளப்படுவார்கள்!” என கவலை தெரிவித்தார்.

ஓராண்டாகியும் முடிவடையாத போர்:

ரஷ்யா உக்ரைன் மீது போர்த்தொடுத்து 24-02-2023 தேதியோடு ஓராண்டாகிவிட்டது. இதுவரையில், ரஷ்ய ராணுவ வீரர்கள் ஒரு லட்சம் பேரும், உக்ரைன் ராணுவ வீரர்கள் ஒரு லட்சம் பேரும் என இருதரப்பிலும் மொத்தம் 2 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். அதேபோல, ரஷ்ய படையெடுப்பினால் உக்ரைனில் 438 குழந்தைகள் உள்பட சுமார் 7,199 பொதுமக்கள் உயிரிழந்திருப்பதாக ஐ.நா. சபையின் மனித உரிமைகளுக்கான உயர் ஆணையம்(OHCHR) அறிக்கை வெளியிட்டிருக்கிறது. இத்தனை இழப்புகளை சந்தித்தும் போரின் உக்கிரம் துளியும் குறைந்தபாடில்லை. அதற்கு மாறாக, உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்காவும், ரஷ்யாவுக்கு ஆதரவாக சீனாவும் அடுத்தடுத்து ஆதரவுக்கரங்களை விரித்திருக்கின்றன.

ஜோ பைடன் – ஜெலன்ஸ்கி

குறிப்பாக, கடந்த பிப்ரவரி 20-ம் தேதி உக்ரைனுக்கு திடீர் விசிட் அடித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன், “ ஓராண்டுக்கு முன்பு உக்ரைன் மீதான தாக்குதல் தொடங்கப்பட்டது. உக்ரைன் வீழ்ந்துவிடும் என சிலர் கூறினர். ஆனால் ஓராண்டாக உக்ரைன் கம்பீரமாக எழுந்து நின்றுப் போராடிவருகிறது. அமெரிக்கா மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த உலக நாடுகளும் உக்ரைனுக்கு ஆதரவாக நிற்கிறது. உலக வரைபடத்தில் இருந்து உக்ரைனை அழித்துவிட வேண்டும் என்று ரஷ்யா விரும்பியது. போரில் எளிதாக வெற்றி பெற்றுவிடலாம் என புதின் கனவு கண்டார். ஆனால் அது எதுவும் நடக்கவில்லை. அவரின் கனவு தகர்ந்துவிட்டது. ரஷ்ய ராணுவம் ஆக்கிரமித்து வைத்த பகுதிகளில் பாதி மீட்கப்பட்டிருக்கிறது” எனத் தெரிவித்தார்.

ரஷ்யா – உக்ரைன்

மேலும், “உக்ரைன் மக்களின் நலனுக்காக அமெரிக்க பட்ஜெட்டில் தாராளமாக நிதி ஒதுக்கப்படுகிறது. உக்ரைன் ராணுவத்துக்கு அதிநவீன ஏவுகணைகள், ரேடார்கள், கவச வாகனங்கள் வழங்கப்படும். கூடுதலாக 500 மில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுதங்களை வழங்க விருக்கிறோம். அடுத்த ஒரு வாரத்தில் ரஷ்யாவுடன் தொடர்புடைய அமைப்புகள், நிறுவனங்கள் மீது மேலும் கடுமையான பொருளாதார தடைகள் விதிக்கப்படும்!” எனக்கூறி எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றியிருக்கிறார்.

இந்தநிலையில், ரஷ்யாவும் தன்பங்குக்கு தனது நெருங்கியக் கூட்டாளியான சீனாவை உதவிக்கு அழைத்திருக்கிறது. கூடிய விரைவில், சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி ரஷ்ய தலைநகர் மாஸ்கோவுக்கு வருகை தர இருப்பதாகவும், உக்ரைன் – ரஷ்யா போர் விவகாரம் தொடர்பாக புதினை சந்தித்து ஆலோசனை நடத்தவிருப்பதாகவும் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அதேசமயம், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், “உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு சீனா ஆதரவு வழங்கினால், கடுமையான பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும்” என எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

ரஷ்யா – உக்ரைன் போர் நடந்தால்…

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின், “சீன-ரஷ்யா உறவுகள்மீது அமெரிக்கா விரல் நீட்டுவதையோ, எங்களை வற்புறுத்துவதையோ ஒருபோதும் நாங்கள் ஏற்க மாட்டோம். இது இரண்டு சுதந்திர நாடுகளின் இறையாண்மைக்கு உட்பட்டது. அமெரிக்காதான் சர்வதேச விதிமுறைகளை மீறி வருகிறது. போரை எப்படி முடிவுக்குக் கொண்டுவருவது என ஐரோப்பிய நாடுகளும் பொறுமையாக சிந்திக்க வேண்டும். ஆனால், பேச்சுவார்த்தைகள் வெற்றிபெறுவதையோ, போர் விரைவில் முடிவுக்கு வருவதையோ விரும்பாத சில சக்திகள்தான் இங்கு இருக்கிறது!” என காட்டமாக விமர்சித்திருக்கிறார்.

ரஷ்யா – உக்ரைன் போர்

அமெரிக்க – ஐரோப்பிய நாடுகளின் தரப்புக்கும், ரஷ்ய – சீன நாடுகளின் தரப்புக்கும் இடையேயான நீண்டகாலப் பனிப்போரின் களமாக, தற்போது பரிதாபமாக சிக்கியிருக்கிறது உக்ரைன்.

`மரம் அமைதியை விரும்பினாலும் காற்று விடுவதாய் இல்லை’ என்ற கதைதான் இனி!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.