வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற பிரபல சமூக வலைதளங்களின் தாய் நிறுவனமான மெட்டாவைத் தலைமைச் செயல் அதிகாரியான மார்க் சக்கர்பெர்க் இயக்கி வருகிறார். இதனிடையே மெட்டா நிறுவனம் அவரின் பாதுகாப்பு செலவினங்களை மூன்று மடங்காக உயர்த்தியிருக்கிறது.
பொருளாதார நெருக்கடி காரணமாக மைக்ரோசாப்ட், அமேசான், ட்விட்டர், கூகுள் போன்ற பெரும் நிறுவனங்கள் பணிநீக்க நடவடிக்கைகளை மேற்கொண்டபோது செலவினங்களைக் குறைக்கும் விதமாக மெட்டா நிறுவனமும் தங்களது நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த 11,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்திருந்தது. மேலும் ஆட்சேர்ப்பு பணியையும் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
இந்நிலையில் மெட்டா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான மார்க் சக்கர்பெர்க் மற்றும் அவரது குடும்பத்துக்கு வழங்கப்படும் பாதுகாப்பிற்கான தொகை 33.08 கோடியிலிருந்து 116 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
செலவினங்களைக் குறைப்பதற்காக ஊழியர்களை பணிநீக்கம் செய்த மெட்டா நிறுவனம், மார்க் சக்கர்பெர்க்கின் பாதுகாப்பு செலவினங்களை மட்டும் 3 மடங்காக உயர்த்தியிருப்பது ஞாயமற்றது என்று சமூக வலைதளங்களில் பலரும் விமர்சித்து வருகின்றனர்.