வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்
அவளின் தோழி கட்டாயப் படுத்தியதால்.. அவள் அன்றைக்கு வகுப்பிற்குச் செல்லாமல், கல்லூரியின் ஆடிடோரியத்திற்குச் சென்றாள். ஏதோ தமிழ் பட்டிமன்றம் நடந்து கொண்டிருந்தது. ஆர்வமில்லாமல் பார்த்துக் கொண்டிருந்தாள். முன்று நான்கு பேர் பேசி முடித்தவுடன், அவன் வந்து மைக்கைப் பிடித்துப் பேச ஆரம்பித்தான். அந்த வசீகர குரல் இவளை ஏதோ செய்தது. கைப்பேசியில் இருந்து கவனத்தை அவன் பக்கம் திருப்பினாள்.
அந்த முகம் அந்தக் குரல் என்னவோ செய்தது அவளை.. யார் அவன்? முன்ஜென்மத் தொடர்பா?? அவனையேக் கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டே இருந்தாள்.. அவள் காதல் என்ற விஷயத்தில் அவ்வளவு நம்பிக்கை இல்லாதவள். அது அந்தந்த வயதில் வரும் ஒரு இனக்கவர்ச்சி மட்டுமே..அதற்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கத் தேவையில்லை என்று நினைப்பவள்… ஆனால் இன்று மனம் ஏன் அவனைப் பார்க்கையில் படபடக்கிறது.? விடை தெரியாமல் அடுத்த மணி நேரத்திற்கான வகுப்பிற்குச் சென்றாள்.
அடுத்ததாக வந்த வாரங்களில் கூட மனம் அவனைப் பற்றியே சிந்திக்க ஆரம்பித்தது. அதிலிருந்து எப்படி மீள்வது எனப் புரியாமல் தவித்தாள். அவன் யார்? எங்கிருக்கிறான்? எந்தக் கல்லூரி மாணவன்?? யாரிடம் கேட்பது? அன்று அவனை கவனித்தாளேத் தவிர., வேறு எதையும் அவனைப்பற்றித் தெரிந்து கொள்ள முற்படவில்லையே என நொந்து கொண்டாள்.
சில மாதங்களுக்குப் பிறகு, கல்லூரியின் நுழைவில், அன்றைய பட்டிமன்றம் நிகழ்ச்சியைப் பற்றிய அறிவிப்பு இருந்தது. அவன் மறுபடியும் வருவானோ என்ற ஆவலில் அரங்கத்திற்குச் சென்றாள்.. நினைத்தபடியே அவன் மேடையில் இருந்ததைப் பார்த்தபோது. அவள் மனம் ஏன் மகிழ்ச்சியில் துள்ளுகிறது என அவளுக்குப் புரியவேயில்லை.
ஏன் இந்த மாற்றம் அவளுக்குள்.. ஏன் மனம் இதை ரசிக்கிறது.. குழம்பினாள்.. அன்றும் அவனது மேடைப் பேச்சில் லயித்துப் போனாள்.. அன்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் சென்று, பங்கேற்பாளர்கள் அனைவரைப் பற்றி விசாரிப்பதாக பாவனை செய்து அவன் எந்தக் கல்லூரி மாணவன் ? என்னப் படிக்கிறான் என்ற விவரத்தைச் சேகரித்தாள்..
ஆனால் அவனை நேரில் பார்த்துப் பேச யோசித்து தன்னைத் தானே கட்டுப்படுத்திக் கொண்டாள்..
அவள் செய்தது ஒன்றுதான். கல்லூரியில் நடக்கவிருக்கும் அத்தனை விழாக்களைப் பற்றிய விவரங்களைத்தெரிந்து கொண்டு , எல்லா நிகழ்ச்சிகளுக்கும் சென்று அவன் வரவை எதிர்பார்த்தாள். அவன் வந்து பங்குப் பெற்ற அனைத்து நிகழ்ச்சிகளும் அவன் பேசுவதை தன் கைபேசியில் படம் எடுத்தாள்.
அவன் பரிசு வாங்கினால் அவள் கைத்தட்டினாள்.. ஒருமுறை அவன் கவிதை வாசித்தபோது, அரங்கத்தில் முதல் ஆளாக எழுந்து கைத்தட்டினாள். அனைவரின் கவனமும் அவள் மேல் விழ, அவனும் ஒரு நொடி அவளைப் பார்த்தான். அவளின் குழந்தைத்தனமான முகம் பார்த்து சிரித்தபடியே, மற்றொரு கவிதையை வாசிக்கத் தொடங்கினான்..
அவளின் கல்லூரி வாழ்க்கை முடிந்துவிட்டது. அவனை மீண்டும் எங்கு சென்று பார்ப்பது? எதற்கும் விடை தெரியாமல் நாட்கள் சென்றன.. படித்தப் படிப்பிற்கேற்ற வேலை கிடைக்கவே, வேலையைக் கற்றுக் கொள்ளும் மும்முரம் அவனை சுத்தமாக மறக்காவிட்டாலும், அவனது நினைவுகளைச் சற்று தள்ளி வைத்திருந்தாள்..
தெருவில் நடக்கும்போது அவன் பெயர் கொண்ட கடைகளின் பெயர் பலகைகளைப் பார்க்கையில் ஒரு நிமிடம் அதைப் பார்த்துக் கொண்டே இருப்பாள். அலுவலக வாழ்க்கை முழுதாக இரண்டு வருடங்கள் ஓடியிருந்தாலும், அவன் முகம் இன்னமும் அவள் மனதிலேயே இருந்தது.
வீட்டில் இவளின் திருமணம் பற்றிய பேச்சுக்கள் எழவே, அவனின் நினைவுகள் வந்து போனாலும், அவனைப் பற்றி எதுவும் தெரியாமல், பெற்றவர்களிடம் என்னவென்று சொல்வது?? வெறும் நினைவுகளிலும் கற்பனைகளிலும் வாழ்க்கையை வாழ்ந்து விட முடியாது என அவளுக்கு நன்றாகத் தெரியும். தந்தையிடம் திருமணம் செய்து கொள்கிறேன் என்ற ஒற்றைப் பதிலைத் தந்தாள் மனமில்லாமல்..
அவளைப் பெண் பார்க்க வருவதாகக் கூறி அவளை அன்றைக்கு அலுவலகம் செல்லவேண்டாம் எனக் கேட்டுக் கொண்டிருந்தார் அவளின் அம்மா..
யாரோ ஒருவர் வந்து அவளைப் பார்த்து திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள்.. அப்புறம் தன் மனதில் இருக்கும் அவனை மறக்கப் பழக வேண்டும் என நினைத்தபடி, அவள் கைபேசியில் இருந்த அவன் புகைப்படங்களை அழிக்க நினைத்தாள்.. ஆனால் மனம் வரவில்லை.. மாலை மாப்பிள்ளை வீட்டார் வந்தவுடன் அவளை அவள் அம்மா வரவேற்பறைக்கு அழைத்துச் சென்று நிற்க வைத்து, அனைவரிடமும் அவளை அறிமுகப்படுத்தினார்.எங்க பையனுக்கு என்று மாப்பிள்ளையின் தாய், அவனின் பெயரைச் சொன்னதும், ஒரு நொடி இதயம் நின்று பிறகு அவனை ஏறிட்டுப் பார்த்தாள் ..
அவள் மயங்கி விழாத குறைதான்.. அங்கு பெண்பார்க்க வந்திருப்பது அவளின் அவனேதான்… இருவரையும் தனியாக பேசும்படி சொல்ல.. அவளுக்கு அன்றிருந்த சற்றுமுன் தான் மழை நின்ற வானிலையும், மொட்டை மாடியும்.. அவனும் அவளும்.. அந்தக் கணத்தை அவள் வாழ்நாளின் சொர்க்கமாக கருதினாள்..அவன் நிறைய பேசினான்.அவள் ரசிக்கமட்டும் செய்தாள். அவளின் மெல்லிய சிரிப்பு அவளின் சம்மதத்தை அவனுக்கு உணர்த்தியது.
திருமண ஏற்பாடுகள் நல்லபடியாக ஆரம்பித்தது.
அவன்தான் அவள் காதலித்தவன் என்று எப்போது அவனிடம் சொல்வது என்பதில் அவள் மனம் போராடியது.
அவனுக்கோ, கல்லூரியில் அவள் அவனுக்காக எழுந்து கைத்தட்டிய அவளைப் பார்த்ததிலிருந்து இன்று வரை அவளைப் பின்தொடர்ந்து, நல்ல வேலையில் செட்டிலாகி பின் முறைப்படி அவளை பெண் கேட்டுச் சென்றதை அவளிடம் எப்போது சொல்வது என்ற கேள்விகள் தலையைச் சுற்றிக் கொண்டிருந்தன.
–Mrs. J. Vinu
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!
ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.